ஏப்ரல் 28
பிள்ளைகளே நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள் (நீதி.4:1)
ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எங்ஙனம் நல்லாலோசனை வழங்கப்படவேண்டும் என்பதை, நீதி மொழிகள் நான்காவது அதிகாரத்தின் முதல் நான்கு வசனங்களில் சாலோமோன் விளக்குகிறான். போதகத்தைக் கேட்டு, புத்திமதியைக் கவனிக்கவேண்டுமென்று தன் தகப்பன் கற்பித்ததையும், பின்னர் தன் மகனுக்குத் தான் அறிவுறுத்துகிறதையும் அங்கு அவன் கூறுகிறான்.
வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறைக் குறிப்புகளை, எவ்வளவு முடியுமோ அவ்வளவாகத் தங்களுடைய சொந்தப் பெற்றோர்களிடத்தில் சிறுபிள்ளைகள் கற்றுக்கொள்வது அறிவுடைய செயலாகும். அதுபோலவே ஆவிக்குரியவற்றை, ஆவிக்குரிய வழிகாட்டியிடம் இளம் விசுவாசிகள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்பது உண்மைதான். அந்த வழிகாட்டி அவனுடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறவராக, நம்பிக்கைக்குப் பாத்திரராக, அவருடைய அனுபவம் என்னும் செல்வத்திலிருந்து பகிர்ந்தளிக்கிறவராக இருக்கவேண்டும். பெற்றோர் இந்தப் பாத்திரத்தை நிறைவுசெய்வாராயின், அது சிறந்தது. அப்படி இல்லையெனில், அந்த வேலையைச் செய்ய வேறோருவரைத் தேடிக்கண்டுபிடிக்கவேண்டும்.
தெய்வபக்தியில் மிகுந்த வளர்ச்சியடைந்த விசுவாசிகள், மிகுதியான நடைமுறை அறிவைச் சேர்த்து வைத்திருப்பார்கள். அவர்கள் தோல்வியைத் தழுவியிருப்பினும், அந்த அனுபவங்களின் மூலமாக, இனி தோல்வியைத் தவிர்க்கத்தக்க நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டிருப்பர். இளம் விசுவாசிகள், முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களைப்போன்று பிரச்சனைகளைப் பல கோணங்களில் ஆராய்ந்து பார்க்கத் தவறிவிடுவர். பகுத்தறிவற்ற வகையில் எதையும் அளவு கடந்து செய்தவிடுவார்கள். ஆனால் முதிர்ச்சியடைந்தவர்களோ அப்படிச் செய்யாமல், சீர்தூக்கிப் பார்த்துச் செய்யக்கற்றவராவர்.
ஞானமுள்ள இளம் “தீமோத்தேயு” க்கள், பவுலைப் போன்றவர்களின் சிறந்த குணங்களைத் தம்மில் வளர்த்துக்கொள்வர். வழிகாட்டியின் விவேகத்தையும், செயல்திறத்தையும் அடைய முயற்சி செய்வார்கள். ஒரு செயலைச் செய்ய முன்னர் அனுபவம் மிக்க ஒருவரிடம் ஆலோசனை கேட்டு, வரக்கூடிய இழிவிலிருந்தும், தவறுகளிலிருந்தும் தங்களைக் காத்துக்கொள்வார்கள். பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்துநின்று போராடி நற்சாட்சி பெற்றோராய் விளங்கும் பெரியோரை, வயது முதிந்தவர்கள் என்று ஏளனம் செய்யாமல், அவர்களைக் கனப்படுத்துபவராக இருப்பார்கள்.
பொதுவாக, வயதுமுதிர்ந்த பரிசுத்தவான்கள் இளைஞர்களிடம் தாமாகச் சென்று ஆலோசனை தரமாட்டார்கள். கேட்காத ஆலோசனை விரும்பத்தகாததாகப் போய்விடும் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் கேட்கப்படும்போது உள்ளார்ந்த உண்மைகளை மனமகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்வர்.
இச்சையை எதிர்த்துப் போராடும் இளைஞர், தேவனுடைய வழிநடத்துதலை அறிய விரும்புவோர், கர்த்தருக்கென்று குடும்பத்தை உயர்நிலைக்குக் கொண்டு வர விரும்புவோர், வரவுசெலவை முறைப்படி செய்யவிரும்புவோர், ஜெபவீரர்களாகத் திகழவிரும்புவோர், யாராக இருப்பினும், ஆவிக்குரிய வழிகாட்டிகளை நாடுவாராயின் அவருடைய பிரச்சனைக்கு வேதத்தின் அடிப்படையில் பதில் கிடைக்கும். நரைமுடிக்குக் கீழாக ஞானம் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. முன் அனுபவம் மிகுந்தோரிடமிருந்து அறிவுமிகுந்த ஆலோசனைகளைப் பெறுவதை விட்டுவிட்டு, கற்றுக்கொள்வதற்கு ஏன் கடினமான வழியைப் பின்பற்ற வேண்டும்.