ஏப்ரல் 26
நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவக்கூடாது. (யோ.13:8)
வியத்தகு நிகழ்ச்சியொன்று நம் கண்முன் காட்சியளிக்கிறது. கர்த்தர் இடுப்பிலே நீண்டதொரு துணியைக் கட்டிக்கொண்டிருக்கிறார். கைகளில் நீர் நிறைந்த பாத்திரத்தை ஏந்திக்கொண்டிருக்கிறார். அவர் தமது சீடர்களின் கால்களைக் கழுவ ஆயத்தமாகிவிட்டார்.
ஆனால் பேதுரு அவரை எதிர்த்து நிற்கிறான். அவனருகில் அவர் வந்தபோது, “நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்று அவன் மறுத்துரைத்தான்.
கிருபை மிக்க பிணிவிடையைக் கர்த்தரிடத்திலிருந்து ஏற்றிட பேதுரு மறுத்ததன் காரணம் என்ன? அதற்கு இருவிதக் காரணங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒன்று பேதுருவின் தகுதியற்ற தன்மை. மற்றொன்று அவனது பெருமை. கர்த்தரால் ஆற்றப்படும் பணிவிடையை ஏற்றுக்கொள்வதற்குத் தனக்கேதும் தகுதியில்லை என்று பேதுரு எண்ணினான் போலும். இல்லையேல் பேதுருவின் பெருமையும், தான் எவரையும் சார்ந்திருக்கக்கூடாது என்ற எண்ணமும் காரணங்களாக இருந்திருக்கலாம். எதனையும் பிறரிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற எண்ணமுடையவராகச் சிலர் வாழ்கின்றனர்.
இவ்வித மனப்பான்மையினால் பலர் இரட்சிப்படையாமல் போய்விடுகின்றனர். தங்களது தகுதியினால் அதை அடையவேண்டுமென்றும் அதனைச் சம்பாதிக்கவேண்டுமென்றும் அவர்கள் நினைக்கின்றனர். வேறோருவரிடமிருந்து அதனைப் பெறுவது தங்களுடைய கௌரவத்திற்கு வரும் இழுக்கென்று கருதுகின்றனர். அதனைக் கடன் என்றெண்ணி, தேவனுக்குக் கடன்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. “தற்பெருமையுள்ளவன் தேவனுக்கு என்றென்றும் கடன்பட விரும்பவதில்லை. அவன் இரட்சிப்படைந்து, கிறிஸ்தவனாகவும் மாறமாட்டான்”.
கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு படிப்பினையைத் தருகிறது. எப்பொழுதும் பிறருக்கு கொடுக்கிற விசுவாசிகளை நாம் சந்தித்திருக்கிறோம். எப்பொழுதும் மற்றவர்களுக்கு அவர்கள் உதவிசெய்வார்கள். உற்றாருக்காகவும், சுற்றத்தாருக்காகவும் தங்களுடைய வாழ்வை ஊற்றி சேவை புரிவார்கள். அவர்களுடைய பெருந்தன்மை போற்றுதற்குரியது. ஆனால் பிறரிடமிருந்து யாதொன்றையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனை விரும்பவும் மாட்டார்கள். கிருபையாகவும் தாராளமாகவும் கொடுக்கக் கற்றிருக்கும் அவர்கள் மற்றவரிடமிருந்து கிருபையோடு பெற்றுக்கொள்வதற்குக் கற்றிருக்க மாட்டார்கள். மற்றவர்களுக்குக் கொடுப்பதினால் கிடைக்கும் நற்பேற்றினை அனுபவிக்கும் அவர்கள், மற்றவர்கள் நற்பேற்றினை அடைவதை விரும்பவதில்லை.
பிலிப்பு நகர விசுவாசிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஈவைக் கிருபையோடு பவுல் பெற்றுக் கொண்டதைக் காண்கிறோம். “உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன்” என்று கூறியே தன் நன்றியை அறிவித்தான் (பிலி.4:17). தனது தேவையைக் காட்டிலும் அவர்கள் பெறுகிற பலனை அவன் மேன்மையாகக் கருதினான்.
“பிஷப் வெஸ்ட்கோட் என்பார் தனது வாழ்வின் இறுதியில் தான் ஒரு பெரிய தவறிழைத்துவிட்டதாகக் கூறினார். எப்போதும் தனது தகுதிக்கேற்ப பிறருக்கு உதவிசெய்வதை நோக்கமாகக் கொண்ட அவர், மற்றவர்கள் தனக்கு உதவி செய்வதை விரும்பமாட்டார். அதன் காரணமாகத் தனது வாழ்வில் இனிமையையும், நிறைவையும், இழந்துவிட்டதையும் உணர்ந்தார். திரும்பச் செலுத்த இயலாத சில நன்மைகளைப் பெறுவதற்கு அவரது மனம் உடன்படவில்லை.!”