ஏப்ரல் 10
ஒருவரும் உங்களுக்குப் போதிக்க வேண்டுவதில்லை. (1.யோ.2:27)
இவ்வசனத்தை நாம் மேலோட்டமாகக் காணும்போது, இது நமக்கச் சிக்கலாகத் தோன்றுகிறது. ஒருவரும் நமக்கக் கற்றுத்தர வேண்டியதில்லையெனில், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காக உயிர்த்தெழுந்த கிறிஸ்து போதகர்களைத் தந்தது ஏன்? (எபேசி.4:11-12) என்னும் கேள்வி உடனடியாக நமது உள்ளத்தில் எழுவது இயற்கையே.
இந்த மடல் எழுதப்பட்டதின் பின்னணியை நாம் அறிவோமாயின், யோவான் இங்கு என்ன பொருள்கொண்டிருக்கிறார் என்பதை எளிதில் அறிந்துகொள்வோம். அந்நாட்களில் “நாஸ்டிக்ஸ்” என்று அறியப்பட்ட அறிவு மார்க்கத்தாரால் சபையானது தாக்கம் கொண்டிருந்தது. இந்தக் கள்ளப்போதகர்கள் தங்களை இயேசு கிறிஸ்துவின் உண்மையான விசுவாசிகள் என்று அறிக்கை செய்து உள்ளுர் சபையில் ஐக்கியம் கொண்டிருந்தனர். இயேசு கிறிஸ்துவின் மனிதத் தன்மையையும், தெய்வீகத் தன்மையையும் குறித்துத் தாங்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களைப் பரப்பவேண்டுமென்று நோக்கம் கொண்டவர்களாகச் சபைகளை விட்டுப் பின்னர் வெளியேறினர்.
“நாசிஸ்” (புழெளளை) என்னும் கிரேக்கச் சொல் “அறிவது” என்று பொருள்படும். அந்தக் கள்ளப் போதகர்கள் தாங்கள் பெருத்த அறிவுடையோர் என்று கூறிக்கொண்டனர். அவர்கள் கிறிஸ்தவ விசுவாசிகளைப் பார்த்து, “நீங்கள் பெற்றிருக்கிற அறிவு நல்லது. ஆனால் நாங்களோ உங்களைக் காட்டிலும் கூடுதலான அறிவைப் பெற்றிருக்கிறோம். நீங்கள் அறிந்திருக்கிற எளிமையான போதனைகளுக்கும் அப்பாற்பட்ட ஆழமானதும் புதியதுமான இரகசியங்களை நீங்கள் அறியும்படி பூரணவளர்ச்சியை அடைவதற்கு எங்களுடைய போதனைகள் உங்களுக்குத் தேவை” என்பதுபோலச் சொல்லியிருப்பார்கள்.
இவையாவும் தந்திரமான ஏமாற்றுவேலையென்று யோவான் விசுவாசிகளை எச்சரிக்கிறார். இவ்வாறு விசுவாசிகள் மெய்யான தேவவார்த்தைகளைப் பெற்றுள்ளனர். தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஆசிரியர்களைப் பெற்றுள்ளனர். உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வேறுபாட்டை பகுத்தறியத்தக்க வகையைத் தூய ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் (ய+தா 3). இதற்கும் மேலாக ஒன்றைப் பெறவேண்டும் என்பது நேர்மையற்ற வஞ்சகமாகும். திருமறையை விளக்கி அதனைச் செயல்முறைப்படுத்துவதே கிறிஸ்தவ ஆசிரியர்களின் வேலையாகும். அதற்கு அப்பாற்பட்டுக் கூறும் போதனைகள் யாவும் மீறுதல் என்றே கருதப்படும். அதனை ஒருபோதும் அவர்கள் செய்யலாகாது.
சபைகளுக்குப் போதகர்கள் தேவையில்லையென்று ஒருபோதும் வேதம் சொல்லவில்லை. அந்நாட்களில் மிகச்சிறந்த வேத ஆசிரியராக யோவான் விளங்கினார். தூய ஆவியானவரே முடிவான அதிகாரத்தையுடையவர் என்று வலியுறுத்திக் கூறுவதில் முதலாவதாகவும், அவர் காணப்பட்டார். தம்முடைய மக்களைப் பரிசுத்த எழுத்துக்களின் ஊடாக வழிநடத்திச் செல்பவரும் தூயஆவியானவரே. எல்லா போதனைகளையும் திருமறையைக்கொண்டு சோதித்துப் பார்க்கவேண்டும். அந்தப் போதனைகள் வேதத்தில் சொல்லப்பட்டவைகளோடு சேர்க்கப்படவேண்டியவையென்றோ, வேதபோதனைகளுக்கு இணையானவையென்றோ சொல்லப்படுமென்றால் அவையாவும் மறுக்கப்படவேண்டியவை. அல்லது வேத போதனைகளோடு ஒன்றித்துச் செல்லவில்லையென்றாலும் அவையனைத்தையும் நாம் மறுத்துத்தள்ளவேண்டும்.