மார்ச் 20
தகப்பனே… நான் பாவஞ்செய்தேன் (லூக்.15:21)
கெட்டகுமாரன் மனம் வருந்தினவனாகத் திரும்பி வருவதற்கு முன்னர், அவனுடைய தகப்பன் அவனகை; காண ஓடிச்செல்லவில்லை, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தமும் கொடுக்கவில்லை. மனந்திரும்புதல் முதலாவது நிகழ்ந்தாலொழிய மன்னிப்பை செயல்படுத்துவது நீதியுடையது என்று கருதமுடியாது. “அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக” என்பதே திருமறைக் கொள்கையாகும் (லூக்.17:3).
தொலைதூரத்தில் கெட்டகுமாரன் அலைந்து திரிந்தபோது, அவனுடைய தகப்பன் உதவியை அனுப்பியதாக எவ்விதக்குறிப்பும் இல்லை. அவ்வாறு செய்திருப்பானாயின், எதிர்த்து நின்றவனின் வாழ்க்கையில் தேவன் நடத்திய கிரியைக்கு அது தடையாக இருந்திருக்கும். தான்தோன்றித் தனமாகத் திரிந்தவனைத் தாழ்வான நிலைக்குக் கொண்டுவரச் செய்வதே கர்த்தருடைய இலக்காக இருந்தது. அவன் தாழ்வான நிலைக்குச் செல்வதற்கு முன்னர் மேல்நோக்கிப் பார்க்கமாட்டான். அப்பொழுதுதான் அவனுடைய சுயம் ஒரு முடிவிற்கு வரும் என்பதை அவர் அறிவார். அலைந்துதிரியும் கெட்டகுமாரன் பன்றியின் உணவாகிய தவிட்டை நோக்கி எவ்வளவு விரைவாகச் செல்கிறானோ, அவ்வளவு விரைவாக நொறுங்கிய உள்ளத்தைப் பெறுவான். ஆகவே, தன் குமாரனைக் கர்த்தரிடம் ஒப்புவிப்பது தகப்பனுக்கு அவசியமாயிற்று. நெருக்கடியான கடைசி எல்லைவரை சென்று திரும்பி வருவான் எனக் காத்திருந்தான்.
பெற்றோர்கள், குறிப்பாக, தாய்மார்கள் இவ்வாறு நடந்துகொள்வது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். தேவன் அனுப்பும் ஒவ்வொரு இக்கட்டான கட்டத்திலிருந்தும் கலகம் செய்யும் மகனையோ அல்லது மகளையோ விடுவிப்பதே பெற்றோரின் இயற்கையான இயல்பாகும். இவ்வாறு பெற்றோர்கள் நடந்து கொள்வதினால் கர்த்தருடைய நோக்கம் தடைபட்டு, அவர்களுக்குப் பிரியமானவர்களுடைய வாழ்வில் வேதனை தொடர்கிறது.
“தவறிழைக்கிறவர்களிடத்தில் நாம் காட்டும் உண்மையான அன்பு யாதெனில், அவர்கள் தவறிழைக்கிறபோது நாம் காட்டும் தோழமையல்ல. மாறாக, எல்லாவற்றிலும் நாம் கர்த்தருக்கு உண்மையோடு நடந்துகொள்வதேயாகும் என்று ஸ்பர்ஜன் ஒருமுறை கூறியுள்ளார். ஒருவன் தன்னுடைய பொல்லாப்பில் தொடர்ந்து நிலைத்திருக்கும்போது செல்லங்கொடுத்துக் கெடுப்பது உண்மையான அன்பல்ல. ஒருவரைக் கர்த்தரிடத்தில் திரும்பச் செய்து அவருக்காக மன்றாடுவதே உண்மையான அன்பாகும். “கர்த்தாவே, என்ன விலையானாலும் சரி, அவரைப் புதுப்பித்து மீண்டும் நல்வழிப்படுத்துவீராக” என்றே மன்றாடவேண்டும்.
மனவருத்தம் அடைவதற்கு முன்னர் அப்சலோமைத் திரும்பி அழைத்துவந்தது தாவீது செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும். அதன் பிறகு சிறிது காலத்திற்குள்ளாகவே, மக்களுடைய உள்ளங்களை அப்சலோம் வெற்றிகொண்டான். அவர்களுடைய ஆதரவைப் பெற்றவன் தன்னுடைய தகப்பனுக்கு எதிராகக் கலகம் செய்யத்திட்டமிட்டான். கடைசியில், தனது தகப்பனை எருசலேமை விட்டுத் துரத்திவிட்டு, தன்னையே அரசனாக அவன் ஸ்தானத்தில் முடிசூட்டிக்கொண்டான். தாவீதைக் கொன்றுபோடும்படி பெரும் படையுடன் அப்சலோம் வந்தபோதும்கூட, அவனை உயிரோடு விட்டுவைக்கும்படித் தன் வீரர்களுக்கு தாவீது கட்டளை கொடுத்தான். இதைக் காட்டிலும் மேலான நினைவு கொண்ட யோவாப், அப்சலோமைக் கொன்றுவிட்டான்.
தங்களுடைய மகனையோ மகளையோ பன்றிகள் வாழும் பட்டிக்கு தேவன் கொண்டுபோகிறதினால் உண்டாகும் வலியைப் பொறுத்துக் கொள்ளும் பெற்றோர், பின்னால் நிகழக்கூடிய மாபெரும் வேதனையிலிருந்து தப்புவர்.