மார்ச் 1
பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? (யோ.11:9)
யூதேயா நாட்டில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கல்லெறிந்து கொல்ல யூதர்கள் முயற்சி செய்த சில நாட்களுக்குப் பின், மீண்டும் அங்கே செல்லவேண்டுமென்று கர்த்தர் கூறியபோது, அவருடைய சீடர்கள் மனக்கலக்கமுற்றனர். இவ்வாறு சீடர்கள் அச்சத்தில் மூழ்கியிருந்தபோது, இயேசுகிறிஸ்து தம் திருவாய் மலர்ந்தவராக, “பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா?” என்று வினவினார். இக்கேள்வியைக் கேட்கும்போது, இக்கேள்விக்கும் அந்த உரையாடலுக்கும் என்ன சம்பந்தம் என்ற எண்ணமே முதலாவதாக நமதுள்ளத்தில் மேலோங்கி நிற்கிறது. ஆயின் இரட்சகருடைய கூற்றின் பொருள் யாது எனச் சிந்திப்போம். நாளொன்றுக்கு வேலைசெய்யப் பன்னிரண்டு மணிநேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தன்னை தேவனுக்கு ஒப்புவித்த மனிதன் செயலாற்றவேண்டியவை எவையென்று ஒவ்வொரு நாளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அச்செயல்களில் ஏதொன்றும் நிறைவேறாது தடைபட்டுப் போவதில்லை. ஆகலின், கிறிஸ்து எருசலேமுக்கு மீண்டும் சென்றாலும், அவரைக் கொலைசெய்ய யூதர்கள் முயன்றாலும் அது நிறைவேறாது. அவருடைய வேலை இன்னும் முடியவில்லை. அவருடைய வேளை இன்னும் வரவில்லை.
இறைமக்கள் யாவரும் “அவரவருடைய பணியினைச் செய்து தீருமட்டும் அழியாதவராக” இருக்கின்றனர் என்பது பேருண்மையாகும். நமது வாழ்க்கையில் இது பெரிதான சமாதானத்தையும், அமைதியையும் தருகிறது. தேவனுடைய சித்தத்தின்படி நடந்து உடல் நலத்திற்கும் பாதுகாப்பிற்கும் தேவையான அடிப்படைக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்வோமென்றால், நமது வேளைக்குச் சற்று முன்னர்கூட சாவு நம்மை நெருங்காது. தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்திற்கு அப்பாற்பட்டு நம் வாழ்வில் வேறொன்றும் குறுக்கிடாது.
கிறிஸ்தவர்கள் பலர் தங்கள் உண்கிற உணவைக்குறித்தும், குடிக்கிற நீரைக் குறித்தும், சுவாசிக்கிற காற்றைக் குறித்தும் கவலைப்படுகின்றனர். மாசு நிறைந்த சூழ்நிலையைக் குறித்து கவலைப்படுகின்ற நமது சமுதாயம், மரணம் உங்கள் வாசல்கதவைத் தட்டுகிறது என்று எப்போதும் சொல்லியவண்ணம் இருக்கும். ஆயின் இந்தக் கவலை தேவையற்றது. “பகலுக்குப் பன்னிரெண்டு மணிநேரம் இல்லையா?” விசுவாசியைச் சூழ தேவன் வேலியடைக்கவில்லையா? (யோபு 1:10). அவ்வேலியைத் தாண்டி உட்புக, பிசாசுக்கு அதிகாரமில்லை.
இந்த உண்மையை நாம் நம்புவோமாயின், ஊகித்து உரைக்கும் பேச்சுகளிலிருந்து பாதுகாக்கப்படுவோம். “அம்புலன்ஸ் சற்று முன்னர் வந்திருந்தால்….“ „ நான்கு வாரத்திற்கு முன்னரே மருத்துவர்கள் இந்த நோயைக் கண்டுபிடித்திருந்தால்… „ வேறு விமானத்தில் என் கணவர் சென்றிருந்தால்… என்றெல்லாம் கூறமாட்டோம். அளவிடமுடியா ஞானத்தினாலும், எல்லையில்லா வல்லமையினாலும் நமது வாழ்க்கை திட்டமிடப்பட்டுள்ளது. நம் ஒவ்வொருவருக்கும் நிறiவான கால அட்டவணையை அவர் குறித்துள்ளார். அவருடைய தீர்மானங்கள் சரியான நேரத்தில் செயல்ப்படுகிறவைகளாக உள்ளன.