மார்ச் 30
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோ.8:28)
வாழ்க்கை கடினமாக இருக்கும் காலங்களில் நம்முடைய உள்ளத்தில் குழப்பத்தை விளைவிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று. வாழ்க்கையில் தென்றல் வீசுகிறபோது, “கர்த்தாவே நான் விசுவாசிக்கிறேன்” என்று எவ்விதத் தயக்கமுமின்றிக் கூறுகிறோம். ஆயின், வாழ்க்கையில் புயலெனக் காற்ற அடிக்கும்போது, “என்னுடைய அவிசுவாசத்திலிருந்து என்னைத் தப்புவியும்” என்று கூறுகிறோம்.
இருந்தபோதிலும் இவ்வசனம் உண்மையானது என்பதை நாம் அறிவோம். சகலத்தையும் தேவன் நன்மைக்கு ஏதுவாக நடத்துகிறார். திருமறை இங்ஙனம் கூறுகிற காரணத்தினால் இதை அறிந்திருக்கிறோம். இதனை நாம் காண இயலாது. நம்முடைய ஞானத்தினால் அறிந்துகொள்ளவும் முடியாது. ஆயினும் விசுவாசம் இவ்வுண்மையை நமக்குரியதாக்கிக் கொள்ளச் செய்கிறது.
தேவனுடைய பண்பின் அடிப்படையில் இவ்வசனம் உண்மையானது என்று நாம் அறிந்திருக்கிறோம். எல்லையில்லா அன்பும், எல்லையில்லாத ஞானமும், எல்லையில்லா வல்லமைகளும் உடையவராக தேவன் இருக்கின்ற காரணத்தினால், எப்போதும் நாம் மேன்மையான நன்மையைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக அவர் திட்டமிட்டுச் செயல்புரிகிறார்.
தேவனுடைய மக்களின் அனுபவமாக இக்கூற்று இருக்கின்ற காரணத்தினால், இது உண்மை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். “தெரிந்தெடுத்த கதிர்கள்” என்னும் நூலில் வெளிவந்த கதை. இது. புயலில் சிக்குண்ட கப்பல் ஒன்று உடைந்து நொறுங்கியது. அதிலிருந்து தப்பிய ஒருவர் எவரும் குடியிராத தீவு ஒன்றில் கரையேறினார். தனக்காக ஒரு குடிசையை அத்தீவில் நிறுவினார். உடைந்த கப்பலிலிருந்து அவர் சேகரித்தவைகள் அனைத்தையும் அக்குடிசையில் கொண்டுபோய் வைத்தார். தான் அத்தீவிலிருந்து காற்பாற்றப்பட வேண்டுமென்று தேவனிடத்தில் மன்றாடினார். அவ்வழியாகக் கப்பல் ஒன்று செல்லுமா என்று ஒவ்வொரு நாளும் தொடுவானம்வரை நோக்கிப் பார்ப்பார். ஒருநாள் அவருடைய குடிசை தீப்பற்றிக் கொண்டது. அவர் சேகரித்தவை யாவும் அக்கினிக்கிரையாகின. புகை வானத்தை நோக்கிச் சென்றது. என்ன செய்வதென்று அறியாது அவர் அஞ்சி நடுங்கினார். அதனால் பேரிழப்பை அவர் அடைந்ததாகத் தோன்றினாலும், உண்;மையிலேயே அது அவருக்குப் பெருத்த நன்மையை உண்டாக்கிற்று. தொலைவில் சென்ற கப்பலின் தலைவன் வானத்தை நோக்கிச் சென்ற புகையைக் கண்டு அவரைக் காப்பாற்ற அங்கு வந்தான். “தீயினால் நீங்கள் காட்டின குறிப்பைக் கண்டு உங்களைக் காற்பாற்ற வந்தோம்” என்று அத்தலைவன் கூறினான். நம்முடைய வாழ்க்கைகள் தேவனுடைய கரங்களில் இருக்கின்றன என்பதை நாம் அறியக்கடவோம். சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது.
சில நேரங்களில் நமது விசுவாசம் தடுமாறுகிறது. இன்னல்கள் தாங்கவொண்ணா வேதனையை உண்டாக்குகிறது. நம்மைச் சூழும் இருள் பொறுமையை இழக்கச் செய்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்நேரங்களில், “இதிலிருந்து என்ன நன்மை உண்டாகும்?” என்று கேட்கும் அளவிற்று நாம் சென்றுவிடுகிறோம். அதற்கு விடையுண்டு. தேவன் நம்மை நடத்திச் செல்வதால் உண்டாகும் நன்மை யாதென அடுத்த வசனத்தில் காண்கிறோம். “தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு நம்மை முன்குறித்திருக்கிறார்” (ரோ.8:2). மனித உருவத்தை உண்டாக்கச் சிற்பியின் உளி பளிங்குக் கல்லைச் சிறுக சிறுகச் செதுக்குகிறது. இவையாவும் செதுக்குண்டு விழுகிற கண்துணுக்குகள் போல இருக்கின்றன. நம்மீது விழுகிற அடி நம்மிடத்தில் காணப்படுகிற தகுதியற்ற அனைத்தையும் செதுக்கி அப்புறப்படுத்துகிறது. அப்போது அவருடைய சாயலுக்கு ஒப்பான சாயலைப் பெறுகிறோம். ஆகவே உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் எந்தவொரு நன்மையையும் உங்களால் காணமுடியவில்லையென்றால், “கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பான சாயலை” அடையப்போகிறீர்கள் என்பதை மட்டும் நினைவிற்கொள்ளுங்கள்.