டிசம்பர் 30
யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான். (2.சாமு.9:1)
தாவீதின் உயிரைக் குடிக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்த சவுலின் பேரனே மேவிபோசேத் என்பவன். தாவீது அரியணையில் அமர்ந்த பின்னர், அவனுடைய எதிரியின் குடும்பத்தைச் சார்ந்த மேவிபோசேத் கொன்று போடப்பட்டிருக்கவேண்டும். மேலும், அவன் நடக்கக்கூடாத முடவன். அவன் சிறுவனாக இருந்தபோது அவனைப் பராமரித்த தாதி அவனைக் கீழே போட்டுவிட்டாள். இப்பொழுது அவன் வேறொருவனுடைய வீட்டிலே வசித்துக்கொண்டிருந்தாள். மேய்ச்சல் இல்லாத இன்னும் பொருளுடைய லோதாபாரில் குடியிருந்தான். அவன் வறுமையுற்றிருந்தான் என்பதை லோதேபார் என்னும் பெயர் வெளிப்படுத்துகிறது. லோதேபார் யோர்தான் நதிக்குக் கிழக்கே இருந்த காரணத்தினால் தேவனுடைய வாசஸ்தலமாகிய எருசலேமை விட்டுத் தொலைதூரத்தில் இருந்தது. தாவீதின் தயவு பெறத்தக்க ஏதொரு சிறப்பும் மேவிபோசேத்தினிடத்தில் காணப்படவில்லை.
இவையாவும் இவ்விதமாக இருந்தபோதிலும், தாவீது அவனைக் குறித்து விசாரித்தான். அவனைத் தேடி ஆட்களை அனுப்பினான். அரண்மனைக்குக் கொண்டுவந்தான், அச்சம்கொள்ளத்தேவையில்லை என்று உறுதியளித்தான், அவனுக்குப் பணிவிடைசெய்ய ஒரு பரிவாரத்தையே கொடுத்தான். எல்லாவற்றிற்கும் மேலாக அரசனின் பந்தியிருப்பில், இளவரசர்களுக்கு அளிப்பது போன்று நிரந்தரமாக ஓரிடத்தைக் கொடுத்து அவனைக் கனப்படுத்தினான்.
இவ்வகையில் இரக்கத்தையும், கிருபையையும், பரிவையும் தாவீது அவனிடத்தில் காணப்பிக்கத்த வகையில் என்ன மேன்மையை அவன் உடையவனாயிருந்தான் ? அதன்விடை „யோனத்தான் நிமித்தம்“ என்னும் சொற்றொடரில் அடங்கியிருக்கிறது. மேவிபோசேத்தின் தகப்பனாகிய யோனத்தானின் குடும்பத்தாருக்குத் தயiபாராட்டுவதை நிறுத்திவிடமாட்டேன் என்று தாவீது அவனோடு உடன்படிக்கை செய்திருந்தான். இஃது நிபந்தனையற்ற கிருபையின் உடன்படிக்கையாகும் (1.சாமு.20:14-17).
முதல்முறையாக அரசனின் சமுகத்திற்கு கொண்டுவரப்பட்டபோது மேவிபோசேத் இதனை உணர்ந்தான். அரசனின் அடிமுன்னர் வீழந்து, „செத்தநாய்“ என்று தன்னைத் தாழ்த்திப் பணிந்து கொண்டான். இப்பேற்றைப் பெறுதற்குத் தனக்கு எவ்விதத்திலும் தகுதியில்லை என்பதை இங்ஙனம் அவன் அறிக்கை செய்தான்.
இந்தச் சித்திரத்தில் நம்மை இருத்திப் பார்ப்பதில் எவ்விதச் சிரமமும் இல்லை. கலகக்காரர்களும் பாவம் நிறைந்தவர்களுமாகிய இனத்தில் பிறந்து மரண ஆக்கினைக்குக் கீழாயிருந்தோம். ஒழுக்கத்தின் அடிப்படையில் உருவற்றுப்போனவர்களாகவும், பாவத்தினால் முடமாகிப்போனவர்களாகவும் இருந்தோம். மேய்ச்சல் அற்ற நிலத்தில் வாழ்ந்தோம். ஆவிக்குரிய வகையில் பசிப்பிணி பிடித்தவர்களாயிருந்தோம். நாம் உதவியற்றவர்களும், வறுமையுற்றவர்களும், அழிவுக்கு நியமிக்கப்பட்டவர்களாகவும் இருந்தோம். அதற்கும் மேலாக தேவனைவிட்டுத் தூரமானவர்களாகவும், கிறிஸ்து அற்றவர்களாகவும், நம்பிக்கை அற்றவர்களாகவும் இருந்தோம். தேவனுடைய அன்பைப் பெறுவதற்கும் அவருடைய தயவை அடைவதற்கும் நம்மிடத்தில் எவ்விதத் தகுதியம் இல்லாதிருந்தது.
இருந்தபோதிலும், தேவன் நம்மை நாடினார், கண்டடைந்தார், சாவின் அச்சத்திலிருந்து விடுவித்தார், விண்ணுலக நற்பேறுகளால் ஆசீர்வதித்தார். அவருடைய விருந்துசாலைக்கு அழைப்பித்து தமது நேசத்தின் கொடியால் நம்மைத் தழுவிக்கொண்டார்.
இதனை அவர் செய்ததன் காரணம் யாது? கிறிஸ்துவின் நிமித்தம் அவர் இதைச் செய்தார். இவ்வுலகத்தோற்றத்திற்கு முன்னரே, அவருடைய கிருபை மிகுந்த உடன்படிக்கையின் அடிப்படையில் கிறிஸ்துவுக்குள்ளாக அவர் நம்மைத் தெரிந்துகொண்டதினாலே இதைச் செய்தார்.
இதற்கு உகந்த பதில், அவர் திருவடி முன்னர் தாழவீழ்ந்து, „செத்தநாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம்?“ என்று கூறிப் பணிந்துகொள்வோம்.