மத்தேயு 8:18-34
சீடத்துவம்: எங்கேயானாலும் பின்பற்றுவேன் என்று கூறும் உற்சாகம் மிகுந்தவனுக்கு சீடனின் தொல்லைகள், இன்னல்களைக் கூறுகிறார் இயேசு. மனித குமாரன் – மனிதரோடு ஒன்றுபட்டத்தன்மை (எபி. 2:6,7) வல்லமையோடும், மகிமையோடும் வரும் நியாயாதிபதி (தானி 7:13,14), ஏற்கனவே சீடனான ஒருவன் முழுமையாகப் பின்பற்ற, தன் தகப்பன் இறக்கும்வரைக் காத்திருக்கிறான். இயேசு குடும்பப் பிணைப்பை அறுக்கவில்லை. இராஜ்யத்தின் பணி அதிதீவிரமாய் முக்கியமாய் செய்யப்படவேண்டும். ஆவியில் உயிரற்றோர் உலகக் காரியங்களைக் கவனிக்கலாமே! சீறும் புயல்: பலமுறை நாமும் வாழ்க்கைப் புயலில் இயேசுவண்டை ஓடுகிறோமே ஒழிய, அஞ்சாது அமைதியாக விசுவாசிக்க அறியோம். எத்தகையவரோ என்று வியக்கும் நம் விசுவாசம், அவர் அலைக்கும், அலைமோதும் காற்றுக்கும் ஆண்டவர் என்று நம்பி அமர்ந்திருக்கிறதா? சீர்பெறும் வாழ்வு: தீய சக்திகளை வென்று விரட்டவே வந்தார் இயேசு. ஆகவே பேயை விரட்டிப் பன்றி செத்தாலும் பரமன் படைத்த மக்கள் மீட்கப்பட அவர் தயங்கவில்லை. ஆனால் அறிஞர் ஒருவர் கூறுவதுபோல, எப்பொழுதுமே உலகம் பன்றியைப் பாராட்டி, பரமனை விரட்டுகிறது.