யூன் 29
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(யோ.5:24)
பலருடைய வாழ்க்கைப் புரட்சிகரமானதாக்கி, மாற்றத்தை வருவிக்கும் பேருண்மை இவ்வசனத்தில் பொதிந்திருக்கிறது.
“மெய்யாகவே” என்ற சொல் இருமுறை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் அதனின்று ஒரு சிறப்பான பொருளை எதிர்பார்க்க நாம் தூண்டப்படுகிறோம்.
“உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. 19ம் வசனத்திலிருந்து அவர் பேசுகிறார். அவர் பேசுவது அனைத்தும் மெய்யாகவே இருக்கிறது என்பதை நாம் அறியவேண்டும். அது முற்றிலும் உண்மை, எந்த வேறுபாடுமில்லை. அவரை ஏமாற்றவும் முடியாது. அவர் சொல்வதைக் காட்டிலும் உறுதிபடைத்ததும், நாம் சார்ந்துகொள்ளக்கூடியதும் வேறெதுவும் இல்லை.
யாருடன் அவர் பேசுகிறார்? “உங்களுக்குச் சொல்லுகிறேன்” நித்திய தேவ குமாரன் உங்களுடனும் என்னுடனும் பேசுகிறார். இப்படிப்பட்ட மேதகைமை வாய்ந்த ஒருவர் நம்மோடு இதுவரை பேசியதில்லை, இனிமேல் பேசப்போவதுமில்லை. ஆகையால் அவர் சொல்வதை நாம் கவனித்துக் கேட்கவேண்டியவர்களாய் இருக்கிறோம்!
“என் வசனத்தைக் கேட்கிறவன்” இது ” எவனொருவன்” என்னும் பொருளோடு கேட்கிற எவனையும் குறிக்கிறது. அவருடைய வசனத்தை வெறுமனே காதினால் கேட்கிறதை மட்டும் குறிக்காமல், கேட்டு விசுவாசிக்கிறவனைக், கேட்டு ஏற்றுக்கொள்கிறவனைக், கேட்டு அதற்கு கீழ்ப்படிகிறவனையே இது குறிக்கிறது.
“என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன்”. பிதாவாகிய தேவனே அவரை அனுப்பினவர் என்பதை நாம் அறிவோம். “அவர் ஏன் அவரை அனுப்பவேண்டும்?” என்பது சிறப்பான கேள்வியாக இருக்கிறது. என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கென தமது இரத்தத்தைச் சிந்துவதற்காக, நான் பெறவேண்டிய தண்டனையை அவர் செலுத்தித் தீர்ப்பதற்காக, என்னுடைய பதிலாளாக அவர் மரணமடையவும் பிதா தமது குமாரனை அனுப்பினார் என்று விசுவாசிக்க வேண்டும்.
இப்பொழுது மூன்றத்தனையான வாக்குறுதி வருகிறது. முதலாவதாக “நித்திய ஜீவன் உண்டு”. ஒருவன் விசுவாசித்தவுடனேயே அவன் நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்கிறான். இவ்வளவு எளிமையானதாக இது இருக்கிறது.
இரண்டாவதாக, “அவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படமாட்டான்.” கிறிஸ்து ஏற்கனவே கடனைச் செலுத்தித் தீர்த்திவிட்டதால், என்னுடைய பாவத்தின் நிமித்தம் நான் நரகத்திற்கு அனுப்பப்படமாட்டேன். கடனை இருமுறை செலுத்தவேண்டுமென்று தேவன் கேட்கமாட்டார். மூன்றாவதாக, “அவன் மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான்”. ஆவிக்குரிய வகையில் இறந்தவன் என்னும் நிலையிலிருந்து புதிய பிறப்படைந்து, முடிவில்லா வாழ்வைப் பெற்று தேவனோடு உறவு கொள்கிறான். உண்மையாகவே அவருடைய வசனத்தைக் கேட்டு அவரை அனுப்பிய பிதாவை விசுவாசிப்பீர்கள் எனில், நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உறுதிமொழி அளிக்கிறார். இதனை “நற்செய்தி” என்று அழைப்பதில் வியப்பில்லை.