ஜுன் 9
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் (வெளி 4:8)
எண்ணங்கள், செயல்கள், நோக்கங்கள் மற்றும் எல்லா நிலைகளிலும், ஆவிக்குரியதும் நன்னெறிக்குரியதுமான அனைத்துக் கோட்பாடுகளின்படி தேவன் நிறைவானவராக இருக்கிறார் என்பதே தேவபரிசுத்தம் என்னும் சொற்றொடரின் பொருளாக இருக்கிறது. அழுக்காறு, பாவம் ஆகியவற்றினின்றும் அவர் முற்றிலும் விலகியவராயிருக்கிறார். தூய்மையைத் தவிர வேறோன்றும் அவரிடத்தில் இல்லை.
தேவனுடைய பரிசுத்தத்தைப் பறைசாற்றும் திருமறை வசனங்கள் எண்ணிலடங்கா. அவற்றில் சில எடுத்துக்காட்டுகளை இங்கே காணலாம். “உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர்” (லேவி.19:2). “கர்த்தரைப்போல் பரிசுத்தமுள்ளவர் இல்லை” (1.சாமு.2:2). “கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தமானவர் அல்லவா? … தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக் கொண்டிருக்கமாட்டீரே” (ஆபகூ.1:12-13). “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல” (யாக்.1:13) “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1.யோ.1:5). “தேவரீர் ஒருவரே பரிசுத்தர்” (வெளி 15:4). “நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல” (யோபு 25:5).
பழைய ஏற்பாட்டில் ஆசாரியத்துவமும், பலிகளின் முறையும் தேவனுடைய பரிசுத்தத்தை நமக்குக் கற்பிக்கின்றன. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே பெரும்பிளவை பாவமானது உண்டுபண்ணியிருக்கிறது என்றும், அந்தப் பிளவு சரிசெய்யப்பட்டு, பரிசுத்த தேவனிடத்தில் மனிதன் அணுகுவதற்குப் பலி மிருகத்தின் இரத்தம் சிந்தப்படவேண்டும் என்றும் அங்கே கற்பிக்கப்பட்டிருக்கிறது.
தனிச்சிறப்புமிக்க வகையில் தேவனுடைய பரிசுத்தம் சிலுவையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமது குமாரன் மனிதர்களுடைய பாவத்தைச் சுமந்தவராகச் சிலுவையில் தொங்கிய காட்சியைக் கண்ணுற்ற தேவன், தமக்குப் பிரியமானவரை பயரங்கரமான இருள்சூழ்ந்த நிலையில் தம் தூய்மையின் நிமித்தம் மூன்று மணிநேரம் கைவிட்டார்.
இதில் நாம் கவனித்துக் கற்றுக்கொள்வதற்கு ஏதுவான படிப்பினைகள் மிகவும் தெளிவாக உள்ளன. நாம் பரிசுத்தமாய் இருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1.தெச.4:3). “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1.பேது.1:15).
தேவனுடைய பரிசுத்தத்தைக் குறித்த சிந்தனைகள், நம்மிடத்தில் ஆழமான பயபக்தியையும் மதிப்பையும் உண்டாக்கவேண்டும் “உன் கால்கள் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு. நீ நிற்கிற இடம் “பரிசுத்த பூமி” என்று அவர் மோசேயினிடம் கூறினதை நினைவுகூர்வோம் (யாத்.3:5).
“நித்திய ஒளியே! ஆராய்ந்து நோக்கும் உமது கண்களுக்கு முன்னர் வருகிற ஆத்துமா அஞ்சிக்குறுகிப்போகாமல் களிப்புடன் உம்மைப் பார்த்து வாழ்வதற்கு எத்தனை பரிசுத்தமாய் இருக்கவேண்டும்” என்று வியந்து போற்றுகிறார் பின்னி என்பார்.
அத்தகைய தூய்மை, விசுவாசத்தின்மூலமாக நம்மீது விளங்கியிருக்கிறது என்னும் அறிவு, நமது இருதயங்களைக் களிகூர்ந்து துதிக்கச் செய்கிறது.