மே 23
அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காகவும், நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல, அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். (யோ.17:21)
மகாபிரதான ஆசாரியர் என்னும் நிலையில், நமது கர்த்தர் ஏறெடுத்த ஜெபத்தின் மூலமாக இரண்டுமுறை தமது மக்கள் ஒன்றாயிருக்க வேண்டுமென்று மன்றாடினார் (21,22,23 ஆகிய வசனங்கள்). கிறிஸ்துவை அறிக்கைசெய்கின்ற அனைத்து உலகசபைகளும் ஒன்றாக ஐக்கியங்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிற இயக்கத்தினர் இந்த வசனங்களைத் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்தகின்றனர். ஆனால் அந்த ஐக்கியத்தை அடைவதற்கு அந்த இயக்கத்தார் அடிப்படைக் கிறிஸ்தவ உபதேசங்களைக் கைவிட்டுவிடுகின்றனர். அல்லது மாற்றிப் பொருள் கூறுகின்றனர். “உலகமெங்கும் இயங்கும் கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு வெற்றிபெற்றுவிட்டது என்று இக்காலங்களில் சொல்லப்படும் கூற்று உண்மைக்கு முற்றிலும் மாறான வஞ்சப்புகழ்ச்சியாம். அங்கு உலக ஐக்கியம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர்களிடத்தில் விசுவாசம் ஏதும் இல்லை. கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆகவே அவர்கள் ஒன்றுகூடுவதில் எச்சிறப்புமில்லை” என்ற மால்கம் முகரிட்ஜ் என்பார் கருத்துரை வழங்கியுள்ளார்.
இப்படிப்பட்ட ஐக்கியத்தை நாடி கர்த்தர் யோவான் 17ல் மன்றாடினார் என்று நாம் எண்ணுவதற்கில்லை. உண்மையான ஒரு ஐக்கியம் ஏற்படுமாயின் அதன் விளைவாக, இவ்வுலகம் முழுவதும், தேவன் அவரை அனுப்பினார் என்று நம்பவேண்டும். வெளித்தோற்றத்தின்படி, கூட்டமைப்பாக விளங்கும் எந்த நிறுவனத்தினாலும் இத்தகைய விளைவு உண்டாகவில்லையே.
“நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் என்றாயிருக்கவும்… ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கு… நான் அவர்களிலும் நீர் என்னிலம் இருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்” என்று ஒருமைப்பாட்டைக் கர்த்தர் வரையறுத்துக் கூறியுள்ளார். நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளத்தக்கவகையில், பிதாவும் குமாரனும் பகிர்ந்துகொள்ளும் ஒற்றுமை யாது? அவர்களது தெய்வீக ஒற்றுமையில் நமக்குப் பங்கில்லை. நன்னெறி ஒழுங்கில் அவர்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையை விசுவாசிகளாகிய நாம் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டுமென்று அவர் மன்றாடுகின்றார். அஃதாவது, நீதி, பரிசுத்தம், கிருபை, அன்பு, தூய்மை, நீடியபொறுமை, தன்னடக்கம், சாந்தம், மகிழ்ச்சி, பெருந்தன்மை என்னும் நற்குணங்களுடைய வாழ்க்கையை அது குறிக்கிறது. ஆதிக்கிறிஸ்தவர்கள் சகலத்தையும் ஒன்றாக அனுபவித்துச் சமுதாய ஒருமைப்பாட்டின் ஆவியை வெளிப்படுத்தினர்.
“இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவோருக்கிடையில் காணும் ஒருமனப்பாட்டால் அவர் பிதாவினால் அனுப்பப்பட்டதை இவ்வுலகம் அறியவேண்டும் என்று அவர் செய்த விண்ணப்பம் உண்மையாகவே நிறைவேறிற்று. அதனை எருசலேம் சபையில் நடந்த நிகழ்ச்சியில் காண்கிறோம். அப்பொழுது அசாதாரண வகையில் அப்போஸ்தலரது பிரசங்கங்களில் வல்லமை வெளிப்பட்டது (அப். 2:45-47, 4:32-35).
அப்படிப்பட்ட ஐக்கியம் இந்நாளில் இருக்குமாயின், அது மிகுதியான ஆழ்ந்த விளைவை இவ்வுலகில் ஏற்படுத்தும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைக் கிறிஸ்தவர்களது ஒருமைப்பாட்டின் சாட்சி வெளிப்படுத்துமாயின், அவிசுவாசிகள் தங்களது பாவத்தைக் குறித்துக் கண்டித்துணர்ந்தும் ஜீவதண்ணீரை நாடி ஏங்குவார்கள். இன்றைய நாட்களில் கிறிஸ்தவர்களுக்கும், உலகீய நிலையில் வாழும் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் எவ்வித வேறுபாடும் காணப்படுவதில்லை. இச்சூழ்நிலையில் அவிசுவாசிகள் மனந்திரும்ப எவ்விதத் தூண்டுதலும் இல்லையே.