மே 21
கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். (யோ.12:24)
ஓர் உயர்ந்த வேண்டுதலோடு சில கிரேக்கர்கள் ஒருநாள் பிலிப்புவிடம் வந்தனர். “ஐயா, இயேசுவைக் காணவிரும்புகிறோம்” என்பதே அவர்கள் விண்ணப்பம். ஏன் அவர்கள் இயேசு கிறிஸ்துவைக் காணவேண்டும்? அவரை ஏதென்ஸ் பெருநகரத்திற்கு அழைத்துச் சென்று, புதிய தத்துவஞானியாக அங்கு அறிமுகப்படுத்த விழைத்தனர் போலும். ஒருவேளை தவிர்க்க இயலாது என்று தோன்றும் சிலுவை மரணத்தினின்ற அவரை அவர்கள் காக்க விரும்பியிருக்கக் கூடும்.
அறுவடையில் பயன்படுத்தவேண்டிய ஒரு தலையாய விதியை இயேசு கிறிஸ்து விடையாக மொழிகிறார். தானியத்தின் ஒரு மணி, நிலத்தில் விழுந்து சாகுமென்றால் அது மிகுந்த விளைச்சலைத் தரும். தமக்கு வரவிருக்கும் மரணத்தை அவரால் தவிர்க்கமுடியும். ஆனால், அவர் தனித்திருக்க வேண்டும். விண்ணுலக மகிமையை அவர் தனித்து அனுபவிப்பார். அவருடைய மகிமையைப் பகிர்ந்தளிக்க மீட்கப்பட்ட பாவிகள் அங்கு இருக்கமாட்டார்கள். ஆனால் அவர் இறந்தால், இரட்சிப்பின் வழி திறந்து, பலர் வானுலகின் நிலைபேறான வாழ்வை அடைந்து களிகூருவர். பலியாக அவர் சாவைத் தழுவிக்கொள்வதைத் தவிர்த்து, தனித்து சுகமாக வாழ்வதை அவரால் தெரிந்துகொள்ளமுடியாது.
இதனை அழகுற விளக்குகிறார் ராக்லேண்ட்: “வெற்றியைக் பின் விளைவாகக் கொண்ட திட்டங்களில் மிகவும் நிச்சயமானது இயேசு கிறிஸ்துவின் திட்டமேயாகும். கோதுமை மணியாக அவர் நிலத்தில் விழுந்து செத்தார். நாம் கோதுமை மணியாக மாற மறுப்போமாயின்… வாய்ப்பு மிகுந்த வாழ்க்கையை விடுவித்து நம்மை ஒப்புவிக்கவில்லையெனில், நமது குணநல மேன்மைக்கும், உடல்நலத்திற்கும், செல்வத்திற்கும் வரும் ஆபத்தை ஏற்றுக்கொள்ளாவிடில், அழைக்கப்படும்போது வீட்டையும், குடும்ப உறவுகளையும் கிறிஸ்துவுக்காக இழக்க முன்வரவில்லையெனில், நாம் தனித்திருப்போம். நமது மகிமையுள்ள கர்த்தரைப்போல கனிகொடுக்க விரும்பி நாம் கோதுமை மணியாக மாறி, நிலத்தில் விழுந்து செத்தோமென்றால் மிகுந்த பலன் அளிப்போம்.
வெகு காலத்திற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி: சில ஊழியர்கள் ஆப்பிரிக்கா சென்றனர். பல ஆண்டுகள் இடைவிடாது அயராது உழைத்தும் தேவனுக்காக பலன் ஒன்றையும் அவர்கள் காணவில்லை. நம்பிக்கையை இழந்து, கடைசியில் ஒரு மாநாடு நடத்த விரும்பினர். அங்கு தேவனுக்குமுன் ஒன்றுகூடி உபவாசித்து மன்றாட முடிவுசெய்தனர். அப்பொழுது மிஷனறி ஒருவர், “ஒரு கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகும்வரை எந்த ஆசீர்வாதத்தையும் நாம் காணப்போவதில்லை என்றே நினைக்கிறேன்” என்று கூறினார். சில நாட்களுக்குள்ளாக அந்த மிஷனறி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். பின்னர் அவர் முன்னுரைத்த அறுவடை தொடங்கியது.