மே 3
தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான் (கலா.6:8)
எவராக இருப்பினும் பாவத்தைச் செய்துவிட்டுத் தப்பிக்க முடியாது. பாவத்தினால் உண்டாகும் விளைவுகளிலிருந்து தப்பிகஇக முடியாது என்பது மட்டுமன்று. அவை கசப்பு மிகுந்தவை. ஊறுவிளைவிக்காத புழூனையைப்போன்று முதலில் தோற்றமளிக்கும் பாவம், கடைசியில் இரக்கமற்ற சிங்கத்தைப் பொன்று செயல்ப்பட்டு எல்லாவற்றையும் தின்றுவிடும்.
பாவத்தின் மாயக்கவர்ச்சி அதிக விளம்பரத்தைப் பெறுகிறது. அதனுடைய மறுபக்கத்தைக் குறித்து நாம் அதிகமாகக் கேள்விப்படுவதில்லை. தங்களுடைய வீழ்ச்சியைக் குறித்தும் அதற்குப்பின் ஏற்படும் மனவேதனையைப் பற்றியும் பலர் எழுதிவைப்பதில்லை.
மிகவும் அறிவுடைய அயர்லாந்து நாட்டைச் சார்ந்த எழுத்தாளர்களில் ஒருவர் தனது வீழ்ச்சியைக் குறித்து எழுதிவைத்துள்ளார். இயற்கைக்கு மாறான வகையில் பாவத்தில் பொழுதுபோக்குகிறவராக வாழ்ந்தார். ஒன்றன்பின் ஒன்றாகப் பாவத்தைச் செய்த அவர் கடைசியில் நீதிமன்ற வழக்குகளில் சிக்குண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வேளையில் அவர் எழுதியதாவது:
“தேவர்கள் யாவற்றையும் எனக்குத் தந்தனர். அறிவுமிக்கவனாக இருந்தேன், பேரும் புகழும் அடைந்தேன், சமுதாயத்தில் உயர்ந்தவர் என்று அறியப்பட்டேன், மேதையாக விளங்கினேன், அறிவுப்பெருக்கினால் துணிவுடன் செயல்பட்டேன். கலையைத் தத்துவமாகவும், தத்துவத்தைக் கலையாகவும் மாற்றினேன். மனிதர்களுடைய மனதை மாற்றினேன். பொருட்களின் நிறத்தை மாற்றினேன். நான் சொன்னதைக் கேட்டவர்கள், செய்ததைக் கண்டவர்கள் வியப்படையாது போனதில்லை. கலையைப் பிரதான உண்மையென்றும், வாழ்க்கையைப் புனைகதையென்றும் விரித்துரைத்தேன். என்னுடைய நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் கற்பனை வளத்தை தட்டியெழுப்பி, என்னைச் சுற்றிலும் கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் உருவாக்கினேன். வாழ்வின் எல்லா முறைமைகளுக்கும் ஒரு பெயர்சூட்டி ஒருங்கிணைத்தேன். எல்லாப் பொருட்களையும் சாதுரிய வாசகத்தால் விளக்கினேன்.
“இவற்றை மாறுபாடான செயல்களைச் செய்வதை என் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தேன். அறிவற்றதும் சிற்றினபச் சீரழிவுமான செய்கைகளில் கவர்ந்திழுக்கப்பட்டு நீண்ட காலமாக நிலையிழந்து திரிந்தேன். வீணான செயல்களைச் செய்பவனாகவும், பகட்டாய் ஆடை அணிபவனாகவும், நவநாகரீகத்தை நாடுகிறவனாகவும் விளங்கினேன். குறுகிய மனப்பான்மையோடும், இழிந்த உள்ளத்தோடும் இருந்தேன். என்னுடைய பேரறிவை வீணாக்கினேன். இளமையின் இன்பம் ஆர்வமிக்க இன்பத்தைத் தூண்டிவிட்டது. இன்பத்தின் உச்சியில் சென்று அதில் களைத்துப்போன நான், புதிய வகையில் இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்ற கீழ்நிலைக்குச் சென்றேன். சிந்தனையில் ஏற்பட்ட முரண்பாடுகள் மகிழ்ச்சியை அளித்தன. தவறான செய்கைகள் எனது வெறித்தனத்தைத் தூண்டிவிட்டன. கடைசியில் எனது விருப்பங்கள் பிணியாகவும் மதியீனமாகவும் மாறின. மற்றவர்கள் எனது இன்பத்திற்காக இரையாவதைக் குறித்துக் கவலைகொள்ளவில்லை. எது எனக்கு இன்பமாகத் தோன்றியதோ அதையே தொடர்ந்து சென்றேன். மனிதர்கள் மறைவிடங்களில் செய்கிற தகாத செயல்களுக்காக ஒவ்வொருவரும் ஒருநாள் வீட்டின் உச்சியில் நின்று அழவேண்டியவராய் உள்ளனர் என்பதை மறந்துபோனேன். ஒவ்வொரு நாளும் ஒரு மனிதன் செய்கிற செயல்கள் அவனுடைய குணத்தை உருவாக்குகின்றன அல்லது உருவழிக்கின்றன என்பதை உணராதிருந்தேன். என்னுடைய வாழ்க்கை அவமானச் சின்னமாக முடிவடைந்து போயிற்று.”
தனது அறிக்கையை ஒரு கட்டுரையில் எழுதி அதற்கு ” ஆழங்களிலிருந்து” என்று அவர் பெயர் சூட்டியிருப்பது எத்தனை பொருத்தமாயிருக்கிறது.