ஏப்ரல் 9
அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஆட்டுக் குட்டியைப் போல…. (ஏசா.53:7)
ஒரு சமயம் ஆட்டுக்குட்டியொன்று சாகும் வேளையில் அதனை நான் காணநேரிட்டது. அக்காட்சி என் மனதை உருக்குகிறதும், திகில் ஊட்டுகிறதுமாயிருந்தது.
அடிக்கப்படுகிற இடத்திற்கு ஆட்டுக்குட்டியைக் கொண்டுவருகிறபோது, மிகவும் நேசிக்கப்படத்தக்கதாக அது காணப்படும். அதனைக் காணும் சிறுவர்கள் ஆர்வத்தோடு அணைத்துக்கொள்வார்கள். பூனைக்குட்டிகள், நாய்க்குட்டிகள், கோழிக்குஞ்சுகள், கன்றுகள், குதிரைக்குட்டிகள் எதுவாயினும் குட்டியாக இருக்கும்போது கவர்ச்சிமிக்கதாயிருக்கும். ஆனால் ஆட்டுக்குட்டி எல்லாவற்றிலும் கவர்ச்சிமிக்கதும், பரிவிரக்கம் பாராட்டக்கூடியதுமாய்க் காணப்படும்.
கபடற்ற தோற்றத்துடன் அது நிற்கும். அதனுடைய வெண்மையான கம்பளி எவ்விதக் குறைவுமின்றி, தூய்மையின் தோற்றத்தை வெளிப்படுத்தும். அது மென்மையானதாகவும், அமைதியானதாகவும் காணப்படும். அதற்கு உதவிசெய்வார் ஒருவருமில்லை. தற்காத்துக் கொள்ளவும் அதற்குத் தெரியாது. அதனுடைய கண்கள், அச்சத்தையும் அவல நிலையையும் குறித்துப்பேசி நமக்கு மனவேதனையளிக்கும். அவ்வளவு சிறியதாயிருக்கிற அழகான மிருகம் சாவதற்கு ஒரு காரணமும் இல்லையே என்று தோன்றும்.
அதனுடைய கால்கள் இப்பொழுது கட்டப்பட்டு, பரிதாபதமான நிலையில் பெருமூச்சு விட்டபடியே பக்கவாட்டில் படுத்துக்கிடக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் சாவைச் சந்திக்கப்போகிறதை அறிந்ததுபோல அது காணப்படுகிறது. கைத் திறமை வாய்ந்த கசாப்புக்காரன் கத்தியை அதன் குரல்வளையோடு சேர்த்து வீசுகிறான். குருதி வடிந்தோடுகிறது. மரணவேதனையில் அந்த ஆட்டுக்குட்டி துடிக்கிறது. சிறிது நேரத்தில் ஓரசைவும் இல்லை. மென்மையான ஆட்டுக்குட்டி இறந்துபோயிற்று.
பார்த்துக்கொண்டிருப்பவர் அக்காட்சியைக் காணமுடியாதவர்களாக முகத்தைத் திருப்பிக்கொள்கின்றனர். அக்காட்சி அதிக கவலையைத் தருகிறது. சிலர் கண்ணீரைத் துடைத்துக் கொள்கின்றனர். ஒருவரும் பேசுவதற்கு விரும்புவதில்லை.
விசுவாசத்தினாலே வேறொரு ஆட்டுக்குட்டி மரிப்பதைக் காண்கிறேன். அவரே தேவ ஆட்டுக்குட்டியானவர். அக்காட்சி மிகுந்த ஆசீர்வாதமுடையதும் பயபக்திக்குரியதுமாக இருக்கிறது. அந்த ஆட்டுக்குட்டியானவர் முற்றிலும் அழகானவர். பதினாயிரம் பேரில் சிறந்தவர். அழகானவர்களில் மிகவும் அழகுபொருந்தியவர். கொலைக்களத்திற்கு அவர் கொண்டுவரப்பட்டபோது வாழ்க்கையில் சிறந்த வயதுடையவராக இருந்தார். அவர் கபடற்றவர் மட்டுமல்லர். பரிசுத்தர், தீங்குசெய்யாதவர், அப்பழுக்கற்றவர், பாவிகளோடு சேராதவர், மாசற்றவர், குற்றமற்றவர் அவரே. இவ்வளவு தூய்மைபடைத்த ஒருவர் கொலை செய்யப்படுவதற்குக் காரணம் ஒன்றும் தெரியவில்லை.
ஆனால், தண்டனையை நிறைவேற்றுவோர், அவரைச் சிலுவையில் அறைந்தனர். கைகளிலும் கால்களிலும் ஆணிகள் பாய்ந்தன. பாவிகளுக்குப் பதில் ஆளாக நரகத்தின் வேதனைகளைச் சகித்தார். இதன் மூலமாக அவருடைய கண்கள் அன்பினாலும், மன்னிப்பினாலும் நிறைந்தன.
இப்பொழுது அவருடைய பாடுகளின் நேரம் முடிவடைந்து விட்டது. அவர் தமது ஆவியை ஒப்புவித்து விட்டார். அவருடைய சரீரமோ சிலுவையில் தொங்கிற்று. போர்வீரன் ஒருவன் ஈட்டியால் அவருடைய விலாவில் குத்தினான். அங்கிருந்து குருதியும் நீரும் கொட்டின. தேவ ஆட்டுக்குட்டியானவர் இறந்துவிட்டார்.
என் இதயம் நிறைந்தது. கண்கள் வெந்நீராக வடிகிறது. எனது முழங்காலை முடக்கி அவருக்கு நன்றி பகர்கிறேன். வாழ்த்தி வணங்குகிறேன். எனக்காக அவர் மரித்தார் என்று எண்ணிப்பார்க்கிறேன். அவர்மீது செலுத்தும் அன்பிற்கு முடிவில்லை.