ஏப்ரல் 1
அவருக்குள் நீங்கள் பரிபூரணமாயிருக்கிறீர்கள் (கொலோ.2:10).
விண்ணுலகம் செல்லுவதற்குத் தேவையான தகுதியில் பல நிலைகள் இல்லை. ஒருவன், ஒன்று முற்றிலும் தகுதியடைந்தவனாயிருக்கிறான், அல்லது தகுதி இல்லாதவனாயிருக்கிறான். தேவனுடைய தரக்கோலின் உச்சியை நல்லவர்களும் தூய்மையாக வாழ்கிறவர்களும் பிடித்துக் கொள்வார்கள். கயவர்களும்ஈ கொள்ளைக்கூட்டத்தாரும் கோலின் கடைசியில் இருப்பார்கள். இடையில் அவரவர் தகுதிக்கேற்றபடி பலதரப்பட்டோர் இருப்பார்கள் என்பதே மனிதர்களடைய பொதுவான கருத்தாக விளங்குகிறது.
ஆனால் இக்கருத்து முற்றிலும் தவறானதாகும். நாம் முழுவதும் தகுதியுள்ளவர்கள், இல்லையேல் முழுவதும் தகுதியற்றவர்கள். இடைநிலை என்று ஒன்றுமில்லை என்பதே உண்மை.
உண்மையாகவே, நம்மில் எவனும் தன்னில்தானே தகுதிபடைத்தவனில்லை. நாம் யாவரும் நித்திய ஆக்கினையை அடையும்படி குற்றமுள்ள பாவிகளாக இருக்கிறோம். நாமெல்லாரும் பாவம்செய்து தேவமகிமை இழந்தவர்களாக இருக்கிறோம். நாமனைவரும் வழிதவறி, தத்தம் வழியில் செல்கிறோம். நாம் தூய்மையற்றவர்கள், நமது சிறந்த செய்கைகள் யாவும் அழுக்கான கந்தையே.
விண்ணுலகம் செல்வதற்கு நாம் முற்றிலும் தகுதியற்றவர்களாக இருப்பது மட்டுமின்றி, நம்மைத் தகுதியாக்கிக்கொள்வதற்கு எதையும் செய்ய இயலாதவர்களாகவும் இருக்கிறோம். நம்முடைய சிறந்த தீர்மானங்களும், சிறந்த முயற்சிகளும் நமது பாவத்தை நீக்குவதற்குப் பயனற்றவை. தேவன் எதிர்பார்க்கிற நீதியை அவற்றால் நமக்குத் தரவும் இயலாது. ஆனால், தேவன் எதிர்பார்க்கிற நீதியை அவருடைய அன்பு தருகிறது என்பதே நற்செய்தியாகும். இதனை அவர் இலவச ஈவாகத் தருகிறார். “இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியையினால் உண்டானதல்ல” (எபேசி.2:8-9).
விண்ணுலகத்திற்குச் செல்லத் தேவையான தகுதியைக் கிறிஸ்துவில் காண்கிறோம். ஒரு பாவியான மனிதன் மறுபடியும் பிறக்கிறபோது, கிறிஸ்துவை அடைகிறான். இனிமேல் மாம்சத்தில் பாவியான ஒருவனாக தேவன் அவனைப் பார்ப்பதில்லை. கிறிஸ்துவுக்குள்ளாகவே அவனைப் பார்க்கிறார். அதன் அடிப்படையில் அவனை ஏற்றுக்கொள்கிறார். நாம் அவருக்குள் தேவனடைய நீதியாகும்படிக்கும், பாவம் அறியாத கிறிஸ்துவை நமக்காக தேவன் பாவமாக்கினார் (2.கொரி.5:21).
இது என்ன முடிவிற்கு நம்மைக் கொண்டு வருகிறது? நாம் கிறிஸ்துவை உடையவராயிருக்கவேண்டும். இல்லையேல் அவரைப் பெறாதவர்களாக இருக்கவேண்டும். தேவனுடைய செயலின்படி, கிறிஸ்துவை நாம் பெற்றிருந்தால், விண்ணுலகிற்கு நாம் தகுதிபடைத்தவர்களாயிருக்கிறோம். கிறிஸ்துவினுடைய தகுதி நம்முடைய தகுதியாயிருக்கிறது. நாம் அவருக்குள் இருக்கும் காரணத்தினால், அவர் எவ்வளவு தகுதியுடையவராக இருக்கிறாரோ அவ்வளவு தகுதியுடையவர்களாக நாமும் இருக்கிறோம்.
கிறிஸ்து அற்றவர்களாக நாம் இருப்போமென்றால், பரலோகத்தை இழந்தவர்களாவோம். அவரின்றி நாம், ஏதொன்றினாலும் ஈடுசெய்ய இயலாதபடி மரணத்திற்கு ஏதுவான குறைவுடையவராயிருப்போம். ஆகவே, ஒரு விசுவாசியைக் காட்டிலும் மற்றொரு விசுவாசி விண்ணுலகம் செல்லக் கூடுதல் தகுதிபடைத்தவரல்லர். எல்லா விசுவாசிகளும் மகிமைக்குப் பாத்திரராக இருக்கின்றனர். கிறிஸ்துவே நமக்கு அந்தத் தகுதியாக இருக்கிறார். எந்த விசுவாசியும் கிறிஸ்துவைக் கூடுதலாகப் பெற்றிருப்பதில்லை. ஆகவே பரலோகம் செல்ல, ஒருவர் மற்றொருவரைக்காட்டிலும் தகுதி உடையவர் அல்லர்.