ஏப்ரல் 3
அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான் (நீதி.23:7).
“உன்னைக் குறித்து நீ யாரென்று நினைக்கிறாயோ, நீ அவனல்லன். உன் நினைவு எப்படி இருக்கிறதோ அவ்வாறே நீ இருக்கிறாய் என்ற யு.P. கிப்ஸ் என்பார் கூறுவதுண்டு. இதன் பொருள் யாதெனில், மனது என்னும் ஊற்றிலிருந்தே பண்புகளென்றால், அதிலிருந்து வழிந்தோடும் நீரோடையையும் கட்டுப்படுத்திவிடலாம்.
ஆகவே, சிந்தனை வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதே இன்றியமையாததாகும். இதன் காரணமாகவே சாலோமோன், “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள். அதனிடத்தினின்று ஜீவஉற்று புறப்படும்” என்று கூறியுள்ளான் (நீதி.4:23). இங்கே இருதயம் என்னும் சொல் மனது என்ற சொல்லுக்கு ஒத்த சொல்லாகும்.
பாவம் மனதிலே தொடங்குகிறது என்று யாக்கோபு நினைவுபடுத்துகிறார் (யாக்.1:13-15). நாம் நம்முடைய மனதிலே ஒரு பாவத்தைப்பற்றித் தொடர்ந்து எண்ணிக்கொண்டிருந்தால் முடிவில் அதைச் செய்துவிடக் கூடியவர்களாக இருக்கிறோம்.
சிந்தனையை விதைத்துச் செயலை அறுவடை செய்,
செயலை விதைத்துப் பழக்கத்தை அறுவடை செய்,
பழக்கத்தை விதைத்து நடத்தையை அறுவடை செய்,
நடத்தையை விதைத்து முடிவை அறுவடை செய்!
வெறுப்பைக் கொலையோடு ஒப்பிட்டு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சிந்தனை வாழ்வின் தூய்மையை வலியுறுத்திக் கூறுகிறார் (மத்.5:21-22). மேலும், இச்சையுடன் கூடிய பார்வையை விபச்சாரத்தோடு ஒப்பிட்டிருக்கிறார் (மத்.5:28). மனிதன் உட்கொள்கின்ற ஏதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்துவதில்லையென்றும், அவனுடைய சிந்தனையே அவனைத் தீட்டுப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார் (மாற்.7:14-23).
நம்முடைய சிந்தனையைக் கட்டுப்படுத்துவதற்குரிய ஆற்றலை நாம் உடையவர்களாயிருப்பதால், அந்தச் சிந்தனைகளுக்கு நாமே பொறுப்பாளிகளாகிறோம். நாம் காமவிகாரத்துக்கேதுவானவற்றைச் சிந்திக்கலாம் அல்லது தூய்மையானதையும் கிறிஸ்துவைப்போலவும் சிந்திக்கலாம். நாம் ஒவ்வொருவரும் ஒரு அரசனைப் போலிருக்கிறோம். அவரவருடைய சிந்தனை வாழ்வே, அவரவர் ஆட்சி செய்யும் நாடாக இருக்கிறது. அந்த அரசாட்சியில் நல்லதை நினைப்பதற்கும், கெட்டதை நினைப்பதற்கும் மிகப்பெரிய வாய்ப்பு உண்டு. அது எவ்வகையில் இருக்கவேண்டும் என்பதை நாமே முடிவெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இதைக் குறித்து, நீங்கள் செய்யவேண்டுமென்பதற்கான சில நல்லோலோசனைகளைத் தருகிறோம். முதலாவது, எல்லாவற்றையும் கர்த்தரிடத்தில் மன்றாட்டாகக் கொண்டுவரவேண்டும். “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்தில் புதுப்பியும்” (சங்.51:10). இரண்டாவதாக, கிறிஸ்துவின் சமூகத்தில் அந்த சிந்தனை எவ்வாறு தோற்றமளிக்கும் என்று தீர்க்கவேண்டும் (2.கொரி.10:5). மூன்றாவதாக, ஒவ்வொரு பொல்லாங்கான நினைவையும் அறிக்கை செய்து விட்டொழிக்க வேண்டும். அடுத்தபடியாக, நாம் எதனையும் சிந்திக்காமல் நமது மனதை வெறுமையாக வைத்திருக்கக்கூடாது. ஏற்புடைய சிந்தனைகளால் உங்கள் மனதை நிரப்புங்கள் (பிலி.4:8). ஐந்தாவதாக, நீங்கள் வாசிப்பது, பார்ப்பது, கேட்பது ஆகியவற்றில் ஒழுக்கத்தைக் கடைப்பிடியுங்கள். விகாரமானவற்றையும், மாசுவிளைவிக்கக்கூடியவற்றையும் உட்கொண்டு, தூய்மையான சிந்தனை வாழ்வைப் பெறுவோம் என்று எதிர்பார்க்காதீர்கள். கடைசியாக, கர்த்தருக்காக அயராது பணிபுரியவேண்டும். உங்களுடைய மனதை வெறுமையாக வைத்திருப்பீர்களாயின் பொல்லாங்கான விருப்பங்கள் மனதில் உட்புக வழி உண்டாகும்.