மார்ச் 31
அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது (1.தீமோ.3:6)
கண்காணியாவன் என்னென்ன தகுதிகளை உடையவனாக இருக்கவேண்டும் என்று கூறும் வேளையில், ஒரு “நூதன சீஷன்” இப்பணியை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று அப்போஸ்தலனாகிய பவுல் எச்சிரத்துள்ளார். ஆவிக்குரிய முதிர்ச்சியும், தேவபக்தியில் வளர்ச்சியுமே கண்காணிகளுக்குத் தேவையான ஞானத்தையும், சரியான முடிவெடுக்கும் திறமையையும் தரவல்லதாயுள்ளன. ஆயினும் இவ்விதி அவ்வப்போது மீறப்படுவதைக் காண்கிறோம். தொழில் துறையில் வெற்றிபெற்ற ஒரு இளைஞரோ, அரசியல்வாதியோ, அறிவியல் அறிஞரோ உள்ளுர் சபையில் ஐக்கியம் பெற வருவாராயின், சபை நடவடிக்கைகளில் அவருக்குத் தகுந்த இடத்தை அளிக்காவிட்டால், வேறு எங்காவது அவர் சென்றுவிடுவார் என்று நாம் நினைக்கிறோம். மேலும் அவருக்குத் தலைமைப்பதவி ஒன்றைக் கொடுத்து, கொக்கி போட்டு அவரை மாட்டிவைத்து விடுகிறோம். உதவிக்காரரைக் குறித்து பவுல் கூறியிருக்கிற கருத்துமிக்க கூற்றை நாம் பின்பற்றுவது நல்லது, “அவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்”.
இந்த ஆவிக்குரிய விதி மீறப்படுவதைச் சில நிகழ்ச்சிகள் தெளிவாகக் காட்டுகின்றன. நற்செய்திப் பணியின் வானவிரிவிலே நட்சத்திரப் பிரமுகர்களின் மனமாற்றம் பளிச்சிட்டுப் பிரபல்யப்படுத்தப்படுகிறது. புகழ்பெற்ற கால்பந்து வீரரோ, நடிகையோ, முன்னாள் குற்றவாளியோ மனமாற்றம் பெற்றால், தாண் முதல் பெயர்செபா வரை விளம்பரங்கள் கொடிகட்டிப் பறக்கும். செய்தித்தாட்களில் தலைப்புச் செய்தியாக வரும். கொலை தண்டனை விதிக்கலாமா, கூடாதா, திருமணத்திற்கு முன் தாம்பத்திய உறவு சரியா தவறா போன்றவற்றில் அவர்களுடைய கருத்தைக் கேட்பார்கள். ஏதோ, மறுபிறப்பு அடைந்த மறுநொடியில் எல்லாத்துறைகளிலும் ஞானத்தை அவர்கள் பெற்றுவிட்டார்கள் என்பதுபோல் நடந்து கொள்வார்கள். மேலும் சில கிறிஸ்தவக் கூட்டத்தார் பணம் ஈட்டும் வணிகப்பொருட்களாக அவர்களைப் பயன்படுத்துவார்கள்.
“தன் முழங்காலில் நின்று ஜெபிக்கும் ஒரு பாவியை, உடனடியாக அங்கிருந்து பெருந்திரள் கூட்டத்திற்கு முன் நிறுத்துவதை நான் ஆதரிக்க மாட்டேன். திரைப்படக் கலைஞரும், விளையாட்டுவீரர்களும், அரசியல் தலைவர்களும் இரட்சிப்படைந்ததாகக் கூறியவுடன் மேடையில் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறார்கள். உண்மையாகவே திருமறை வார்த்தைகள் அவர்களது உள்ளத்தில் வித்தாக இடப்பட்டு, முளைத்து, வேர்விடும்வரை பொறுத்திருப்பதில்லை. இதன் காரணமாக கிறிஸ்துவின் திருப்பெயருக்கு ஈடுசெய்ய இயலா களங்கம் ஏற்பட்டுள்ளன” என்று முனைவர் பால்வேன் கோர்டர் என்பார் கூறியுள்ளார்.
போதை மருந்துக்கு அடிமைப்பட்ட ஒருவரோ, அரசியல் தலைவர் ஒருவரோ விசுவாசத்தைப் பெற்றுள்ளார் என்று அறிக்கை வெளிவந்தால், சில கிறிஸ்தவர்கள் தங்களுடைய பெருமையின் உச்சிக்குச் சென்றுவிடுகின்றனர். ஒருவேளை அவர்கள், தங்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லையென்றோ, தாழ்வு மனப்பான்மையுடனோ வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள். அகவே புகழ்பெற்ற ஒருவர் இரட்சிக்கப்பட்டார் என்று கேட்டவுடன், அவர்களது தொய்ந்துபோன நம்பிக்கை மறுமலர்ச்சி அடைகிறது.
ஆனால் இவ்வகையான புகழ்பெற்ற மனிதர்கள், பிசாசின் தந்திரத்தில் விரைவில் பிடிபட்டு பாவத்திற்குட்பட்டு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் திருப்பெயருக்கு அளவற்ற அவமானத்தைக் கொண்டுவந்துவிடுகின்றனர்.
புகழ்பெற்ற ஒருவரோ, அறியப்படாத ஒருவரோ யாராயினும் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டால் அவர்களுக்காக நாம் நன்றிசெலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். மாறாக, புதிய விசுவாசிகளை மேடையில் ஏற்றுவதாலோ, தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்துவதாலோ கிறிஸ்துவின் பெயரை உயர்த்துகிறோம் என்று நினைத்தால் நாம் தவறிழைக்கிறவர்களாக இருப்போம்.