மார்ச் 29
தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான் (2.தீமோ.2:4)
கிறிஸ்தவன் ஒவ்வொருவனும் கர்த்தருடைய சேனையில் அவரால் வேலைக்குச் சேர்க்கப்பட்டிருக்கிறான். மேலும் அவருக்காக அவன் அயராது உழைக்கிறவனாயிருக்கிறான். ஆகலின், அன்றாடக வாழ்வில் அவன் சிக்கிக்கொள்ளக்கூடாது. சிக்கிக்கொள்ளுதல் என்னும் சொல் இங்கு வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. உலகீய தொழிலினின்று அவன் முற்றிலுமாகத் தன்னைப் பிரித்துக்கொள்ள இயலாதவனாயிருக்கிறான். தனது வீட்டின் தேவைகளைச் சந்திக்க அவன் உழைக்கவேண்டும். ஒவ்வொரு நாளிலும் தவிர்க்க முடியாத சில அலுவல்களை அவன் செய்ய வேண்டியவனாக இருக்கிறான். இல்லையேல் 1.கொரிந்தியர் 5:10 ல் வசனத்தில் பவுல் நினைவூட்டுகிறதுபோல், அவன் இவ்வுலகைவிட்டுப் பிரிந்து செல்லவேண்டியதிருக்குமே. என்றாலும், சிக்கிக்கொள்வதற்கு அவன் தன்னை அனுமதிக்கக்கூடாது. எவ்வௌற்றிற்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதில் அவன் தெளிவாக இருக்கவேண்டும். சிலவேளைகளில் நல்லவையாக விளங்கும் சிலசெயல்கள், சிறந்தவையாகத் திகழ்பவைகளுக்கு எதிரானவையாக மாறிப்போகின்றன. இதனைக் குறித்து திரு வில்லியம் கெல்லி கூறியிருப்பதாவது: “வெளியரங்கமான உலகில் நடைபெறும் செயல்களில் பங்கு கொள்வதைத் தவிர்க்காமல் அதனையே சார்ந்து வாழும் முறையே, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்வது என்பதன் பொருளாக இருக்கிறது”.
மனிதர்களுடைய இன்னல்களைத் தீர்ப்பதற்கு அரசியலில்,ஈடுபடுவதே வழி என்று கருதி, அதில் பங்குவகிப்பது உலகில் சிக்கிக்கொள்வதாக இருக்கிறது. “டைட்டானிக் கப்பலில் மேற்தளத்தில் உள்ள நாற்காலிகளை அடுக்கி வைப்பதற்கு” நேரத்தைச் செலவிடுவதுபோல இது விளங்கிறது. உலகில் நிகழும் பொல்லாங்குகளுக்கு விடை, நற்செய்தியில் உள்ளது என்பதை விடுத்து, மக்கள் நல சேவைக்கு அதிக முக்கியத்துவத்தை அளிப்பது உலக அலுவல்களில் சிக்கிக்கொள்வதாக இருக்கிறது.
பணம் ஈட்டும் பொருட்டு என்னுடைய திறமைகள் அனைத்தையும் என்னுடைய தொழிலில் செலவிடுவேனாயின் நான் சிக்கிக்கொண்டவனாக இருப்பேன். என்னுடைய வாழ்வில் தேவனுடைய ராஜ்யமும் அவருடைய நீதியும் முதலிடம் வகிக்காது போகுமென்றால் நான் உலக அலுவல்களில் சிக்கிக்கொண்டவனாவேன்.
நித்திய வாழ்வுக்குரிய இறைமக்கள் அற்ப காரியங்களில்,ஈடுபட்டால் இவ்வுலக அலுவல்களில் சிக்கிக் கொண்டவர்களாகக் கருதப்படுவர். தாவரச்சத்து அற்ற தக்காளி மற்றும் சில மீனினம், கோடைகாலத்தில் மான்கள் செயல்படும் முறை, நூல் ஆடைகளில் நுண்கிருமிகள், நிறம் மாறும் உருளைக்கிழங்கு இவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வது ஒருவருடைய வாழ்க்கைக்குத் தேவையான பணம் ஈட்டும் தொழிலாக இருக்குமாயின் தவறில்லை. ஆனால் அவ்வித ஆராய்ச்சியை வாழ்வின் நோக்கமாகக்கொண்டு, அதைக் குறித்துக் கட்டுக்கடங்கா வேட்கை கொண்டிருப்பது தகுதியற்ற முறையில் சிக்கிக்கொள்வதாகும்.