மார்ச் 27
காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. (யோ.3:8)
தேவ ஆவியானவர் ஒப்பற்ற வல்லமை உடையவர். அவர் தமக்கு இஷ்டமானபடி செல்கிறார். அவரை ஒரு குறிப்பிட்ட அச்சுக்குள் ஊற்ற நாம் முயற்சி செய்கிறோம். ஆனால் நம்முடைய முயற்சிகள் யாவற்றிலும் எவ்வித வேறுபாடும் இன்றி தோல்வியையே தழுவுகிறோம்.
தூய ஆவியானவருக்கு நிழலாகச் சொல்லப்படுகிறவைகள் பெரும்பாலும் திடநிலையற்றவையாக இருக்கின்றன. காற்று, அக்கினி, எண்ணெய், நீர். இவற்றை நம்முடைய கைகளில் பிடித்துக்கொள்ள நாம் முயற்சி செய்கிறோம். ஆயின், இவையாவும், “என்னை வேலி போட்டு அடைக்கவேண்டாம்” என்று ஒரே விதத்தில் சொல்லுகின்றன.
ஒழுக்கத்திற்குப் புறம்பான ஏதொன்றையும் தூய ஆவியானவர் செய்யவேமாட்டார். ஆனால் ஏனையவற்றில் வழக்கத்திற்கு மாறாகவும் வித்தியாசமான முறையிலும் செயல்புரிய உரிமை கொண்டிருக்கிறார். எடுத்துக்காட்டாக, தலைமைத்துவத்தை தேவன் ஆண்களுக்குக் கொடுத்திருப்பது உண்மையாயினும், தேவனுடைய மக்களை வழிநடத்துவற்கு ஒரு தெபோராளைத் தூய ஆவியானவர் எழுப்ப விரும்பினால், அதைக் கூடாது என்று நம்மால் சொல்லமுடியாது.
நற்சான்று மங்கிப்போகும் நாட்களில் சாதாரணமாகத் தடைசெய்யப்பட்டிருக்கும் செயல்களைத் தூய ஆவியானவர் செய்வதற்கு அனுமதிக்கிறார். இவ்வாறாகவே ஆசாரியர்கள் உண்பதற்கென்று வைக்கப்பட்டிருந்த சமுகத்தப்பங்களைத், தாவீதும் அவனுடனிருந்தவர்களும் உண்ணும்படி அனுமதிக்கப்பட்டனர். ஓய்வுநாளிலே சீடர்கள் கதிரைக் கொய்தது சரியென்று எண்ணப்பட்டது.
அப்போஸ்தல நடபடி நூலில் சொல்லப்பட்டிருக்கிற நற்செய்திப்பணி, குறிப்பிட்ட பிரகாரமாகவும், எதிர்பார்தபடியும் இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், தூய ஆவியானவருடைய ஆளுகை செய்யும் ஒப்பற்ற தன்மையே அங்கு சொல்லப்பட்டிருக்கிற ஒரே நடைமுறையென்று நான் காண்கிறேன். அப்போஸ்தலரும், மற்றவர்களும் ஒரு பாடநூலைப் பின்பற்றவில்லை. அவருடைய வழிநடத்துதலையே அவர்கள் பின்பற்றினார்கள். பெரும்பாலும் மனிதனுடைய பொது அறிவு கற்பிக்கிற முறையில் தேவ ஆவியானவருடைய வழிநடத்துதல் இருப்பதில்லை.
எடுத்துக்காட்டாக, சமாரியாவில் நிறைவேற்றிய வெற்றியுள்ள எழுப்புதலை விட்டு விட்டு, காசாவிற்குச் செல்லும் வழியில் தனியாகப் பயணம் செய்த எத்தியோப்பிய மந்திரியிடம் செல்லும்படியாக பிலிப்புவை ஆவியானவர் வழிநடத்தினார்.
ஆவியானவர் என்னசெய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று ஒருபோதும் நாம் கட்டளை இடக்கூடாது. பாவமான ஏதொன்றையும் ஒருபோதும் அவர் செய்யமாட்டார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மற்ற செயல் பாடுகளில் அவர் அசாதாரண முறையில் நடந்துகொள்ளக்கூடியவராக இருக்கிறார் என்பதை நாம் உணரவேண்டும். குறிப்பிட்ட சில முறைகளில் மட்டுமே அவரால் செயல்படமுடியும் என்று எண்ணிவிடக்கூடாது. சில மரபுகளுக்கு அவர் கட்டுப்பட்டவரல்லர். சம்பிரதாயத்திற்கும், சடங்கிற்கும், செயலற்ற தன்மைக்கும் எதிர்த்து நின்று உயிரூட்டமுடைய புதிய வகையில் அவர் இயங்குகிறவராயிருக்கிறார். ஆகவே அச்செயல்பாடுகளில் பங்குபெறாமல் ஒதுங்கிக் கொள்கிறவர்களாகவோ, குறைகூறுகிறவர்களாகவோ இல்லாமல், தூய ஆவியானவரின் ஒப்பற்ற வல்லமைக்கு ஒப்புவித்தவர்களாக நாம் நடந்துகொள்வோமாக.