மார்ச் 18
அவனவன் தனக்கானவைகளைல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. (பிலி.2:4)
பிலிப்பியர் 2வது அதிகாரத்தின் மிகமுக்கியமான சொல் “பிறர்” என்பதாகும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிறருக்காக வாழ்ந்தார். பவுல் பிறருக்காக வாழ்ந்தார். தீமோத்தேயு பிறருக்காக வாழ்ந்தான். எப்பாபிரோதீத்து பிறருக்காக வாழ்ந்தான். நாமும் பிறருக்காக வாழவேண்டும். அவ்வாறு வாழ்வதே சரியானது என்பது மட்டுமின்றி, அதுவே நமது சொந்த நலனாகும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். சில நேரங்களில் பிறருக்காக வாழ்வது செலவுமிக்கதாயிருக்கும். அவ்வாறு வாழாதிருப்பது அதனினும் செலவுமிக்கதாகிவிடும்.
தங்களுடைய சொந்த நலன் கருதி வாழ்கிறவர்களால் நமது சமுதாயம் நிறைந்திருக்கிறது. பிறருக்காக பணியாற்றுவதில் சுறுசுறுப்பாயிராமல், அவர்கள் வீட்டில் அடைந்து கிடக்கின்றனர். ஒரு சிறிய தலைவலியோ அல்லது உடல் வேதனையோ உண்டாகுமானால் அதனையே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். முடிவில் தன்னைப் பற்றிய கற்பனைப் பிணியால் அவதிப்படுகின்றனர். ஒருவரும் தங்களிடம் அக்கறை கொள்வதில்லை என்று குறைகூறுவர். கூடியவிரைவில் சுயபரிதாபத்தில் புரளுவார்கள். தங்களைக் குறித்து அதிகமாகச் சிந்திக்க சிந்திக்க, அதிகமாகச் சோர்வடைந்து விடுவார்கள். தன்னைத்தானே நுணிக்கிக்காணும் பயங்கரமான இருளுக்குள் அவர்களுடைய வாழ்க்கை சென்றுவிடுகிறது. பின்னர் மருத்துவரைக் காணச்செல்வர். மிகுதியான மாத்திரைகளை விழுங்குவார்கள். தன்னலங்கருதுவதால் ஏற்படும் நோயினை மாத்திரைகள் குணமாக்குவதில்லை. தங்களுடைய வாழ்வில் உண்டான சலிப்பையும் சோர்வையும் அகற்றிட, மனநோய் மருத்துவரைக் காண அவ்வப்போது செல்வார்கள்.
இப்படிப்பட்டோருக்கு நல்லதொரு மருந்து, மற்றோர்க்குப் பணிபுரியும் வாழ்க்கையேயாகும். நோயின் காரணமாக வீட்டிலே அடைபட்டுக்கிடப்போரைச் சந்திக்கச் செல்லலாம். நண்பர்களை நாடும் முதிர்வயதினரைக் காணச் செல்லலாம். சில மருத்துவ மனைகளில் மனமுவந்து பணிபுரிய வருகிறவர்களுக்குச் சில வேலைகள் உள்ளன. மடல்களையோ, வாழ்த்துக்களையோ அனுப்பிச் சிலரை மகிழ்வடையச் செய்யலாம். தங்கள் சொந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிய மிஷனறிகள் ஆவலுள்ளவராக இருக்கிறார்கள். அவர்களுக்கு மடல் எழுதலாம். மற்றும் ஆத்துமாக்கள் இரட்சிப்படைய வேண்டும். கிறிஸ்தவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். சுருங்கக்கூறின் எவரும் சலிப்படையத் தேவையில்லை. ஆக்கபூர்வமான வேலையினால் ஒருவர் தனது வாழ்வை நிறைத்துக்கொள்வதற்குப் போதுமான அலுவல்கள் பல உள்ளன. மற்றவர்களுக்காக வாழ்வதனால் நமக்கு நண்பர்கள் பெருகுகிறார்கள். நமது தனிப்பட்ட வாழ்க்கை அதிக ஆர்வமுடையதாக மாறுகிறது. வாழ்க்கையிலும் மனதிலும் நிறைவு உண்டாகும்.
“மற்றவர்கள்மீது இரக்கமுடைய இருதயம், தனது சொந்த சோகங்களில் அமிழ்ந்து போகாது, சுய பரிதாபம் என்னும் உயிர்கொல்லியில் அமிழ்ந்துபோகாது” என்று P.ஆ. டெர்காம் என்பார் கூறியுள்ளார். “பிறர் நலன் என் வாழ்வின் நோக்கமாக இருக்கட்டும் கர்த்தாவே. மற்றவர்களுக்காக நான் வாழ உதவிசெய்யும். உம்மைப்போல நான் வாழ என்னை நடத்துவீராக”.