மார்ச் 15
தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்வான் (லூக்.9:24)
விசுவாசிகளாகிய நாம் நம்முடைய வாழ்வைக் குறித்து இரண்டு வகையான மனப்பான்மைகொள்ள முடியும். அதனை நாம் காத்துக்கொள்ளலாம். இல்லையேல் வேண்டுமென்றே கிறிஸ்துவுக்காக அதனை இழந்துபோகலாம்.
அதனைக் காக்கவேண்டும் என்று எண்ணுவதே நமது இயல்பாகும். நாம் தன்னலங்கருதி வாழ்கிறவர்களாக இருக்கிறோம். கடும் முயற்சி ஏதொன்றிலும் ஈடுபடாமல் நம்மைப் பாதுகாக்க முயற்சி செய்கிறோம். அசௌகரியங்களைத் தவிர்க்கிறோம். அதிர்ச்சியூட்டும் நிகழ்ச்சிகள், இழப்புகள், வசதிக்குறைவுகள் இவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள கவனத்தோடு திட்டங்களைத் தீட்டுகிறோம். “உள்ளே ஒருவரும் பிரவேசிக்கக்கூடாது” என்ற பலகை தொங்கவிடப்படுவதுபோல நமது வீடுகள் தனிப்பட்டோர் சொத்துகளாகக் காட்சியளிக்கும். இது தனது குடும்பத்திற்கு மட்டுமே உரியது. அப்படிப்பட்ட இல்லங்களில் விருந்தோம்பல் ஒருபோதும் நடைபெறுவதில்லை. காரியங்கள் எவ்வாறு நம்மைப் பாதிக்கும் என்பதன் அடிப்படையில் நாம் முடிவுகளை எடுக்கிறோம். நமது திட்டங்களுக்கு அவை இடையூறாக இருக்குமாயின், நமக்கு வேலைப்பளு மிகுதியாகக்கூடிய சூழ்நிலை ஏற்படுமாயின் அல்லது பணச்செலவு உண்டாகுமாயின் அதனை வேண்டாமென்று மறுத்துக்கூறுகிறோம். நாம் உடல்நலம் பேண அளவிற்கரிய கவனம் செலுத்த முற்படுகிறோம். இரவு உறக்கம் கெடுமென்றும், நோய் ஒட்டிக்கொள்ளக்கூடிய நிலையோ, மரணமோ அல்லது சரீர பாதிப்போ உண்டாகுமென்றும் எண்ணிக் கடினமான வேலையைச் செய்ய மறுக்கிறோம். நம்மைச் சூழ இருக்கிறவர்களுடைய தேவைகளைக் காட்டிலும், நமது தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். கர்த்தருடைய வருகை தாமதிக்குமாயின் சிறிது காலம் வாழ்ந்து பின்னர், புழு அரித்து மாய்ந்துபோகும் இந்தச் சரீரத்திற்காகவே வாழ்கிறோம்.
நம்முடைய வாழ்வைக் காக்க நாம் முயற்சி செய்வதில் அதை இழந்து விடுகிறோம். தன்னலங்கருதி வாழ்வதினால் ஏற்படுகின்ற கடுந்துயரங்களைத் தாங்குகிறோம். மற்றவர்களுக்காக வாழ்வதினால் கிடைக்கும் நற்பேறுகளை இழந்துபோகிறோம். கிறிஸ்துவுக்காக நமது வாழ்வை இழப்பது இதற்குப் பதிலாகச் செய்யக்கூடியதாகும். சேவைபுரிதலும், தியாகமும் நிறைந்த வாழ்க்கையாக அது காணப்படும். தேவையற்ற ஆபத்தை நாம் தழுவிக்கொள்ளாவிட்டாலும் அல்லது உயிர்த்தியாகம் செய்ய முன்வராவிட்டாலும் என்ன விலைகொடுத்தாவது நமக்களிக்கப்பட்ட ஊழியத்தை மறுக்காமல் செய்து முடிப்போமாக. “நம்முடைய ஆத்துமாவையும், சரீரத்தையும் கர்த்தர் நிமித்தமாக உழப்படுவதற்கு ஒப்புவித்தலில்”, ஒரு அர்த்தம் உள்ளது. அவருக்காக நாம் செலவுபண்ணவும், செலவுபண்ணப்படவும் நம்மை ஒப்புவிப்பது நமது மிகப்பெரிய மகிழ்ச்சியாகக் கணக்கிடுவோம். நமது வீட்டை திறந்துவைப்போம், நமது உடைமையைச் செலவுசெய்வோம், தேவையுள்ளவர்களுக்கு உதவிசெய்ய நமது நேரத்தைக் கொடுக்கக்கூடியவர்களாகவும் இருப்போம்.
கிறிஸ்துவுக்காகவும், பிறருக்காகவும் நமது வாழ்வை ஊற்றி உண்மையான வாழ்வைக் கண்டடைவோம். நமது வாழ்வை இழப்பதால், உண்மையில் அவர்களை நாம் இரட்சிக்கிறோம்.