மார்ச் 13
நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள் (மாற்.4:24)
நாம் கேட்கிறதைக் குறித்து கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இங்கே நம்மை எச்சரிக்கிறார். காது என்னும் வாசல் வழியாக உட்செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். மேலும் நாம் கேட்டவற்றின்படிச் செம்மையாகச் செயலாற்றுவதும் நமது கடமையாகும்.
மிகத் தெளிவாகத் தெரியக்கூடிய பொய்யை நாம் கேட்கக்கூடாது. இதுவரை காணாத அளவிற்கு, மாறுபாடான சமயக் குழுவினர் பிரசாரத்தைச் செய்கின்றனர். யாராவது கேட்கிறதற்கு விருப்பமுடையவராக இருக்கிறாரா என்று தேடி அலைகின்றனர். அப்படிப்பட்டவரை வீட்டிலே ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் அவரை வாழ்த்தவும் கூடாது என்று யோவான் நம்மை எச்சரிக்கிறார். அவர் கிறிஸ்துவுக்கு எதிரிகள்.
நமது பக்தியை நிலைகுலையச் செய்யும் ஏமாற்றுவேலையை நாம் நம்பக்கூடாது. கல்லூரியிலும், பல்கலைக்கழகங்களிலும், சமயக்கல்லூரிகளிலும் படிக்கும் இளைஞர்கள் தேவனுடைய வார்த்தையைச் சந்தேகிக்கவும், மறுக்கவும்தக்கதான செய்திகளால் அலைக்கழிக்கப்படுகின்றனர். கர்த்தர் செய்த அற்புதங்களுக்குத் தவறான விளக்கமளிக்கின்றனர். அவரை மேலோட்டமாகப் புகழ்ந்து குற்றப்படுத்துகின்றனர். தெளிவான வேத உபதேசங்களின் ஆழமான கருத்துக்களைத் தீவிரங்குறையச் செய்கின்றனர். பக்தியை நிலைகுலையச் செய்யும் அப்படிப்பட்ட போதனைகளுக்குக் கீழ் அமர்ந்திருந்து, பாதிப்பிற்குள்ளாகாது இருப்பது கடினம். மாணாக்கனின் விசுவாசம் அழிக்கப்படாது போயினும், அவனும் மனம் தீட்டுப்படும். “தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ? தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?”(நீதி.6:27-28). “இல்லை!” என்பதே இதனுடைய வெளிப்படையான விடையாகும்.
தூய்மையற்ற, காம உணர்ச்சியைத் தூண்டிவிடுகிறவற்றையும் நாம் கேட்கக்கூடாது. இன்றைய சமுதாயத்தில் மிகவும் மோசமான மாசுபாடு உள்ளத்தில் எழும் மாசுபாடேயாகும். பற்பல செய்தித்தாட்கள், பத்திரிகைகள், நூல்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றைக் குறிக்கும் ஒரே சொல் அருவருப்பு என்பதாகும். இவற்றில் தொடர்ந்து ஈடுபாடு கொள்வதால், பாவத்தின் கொடுமையை உணராது போய்விடுவோம். அதனுடைய கேடுபாடு அதோடு முடிவடைந்து போவதில்லை. தகாத உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறவற்றை நமது உள்ளத்தில் ஏற்றுக்கொள்வதால், அந்த எண்ணம் நமது பரிசுத்த நேரங்களில் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வரும்.
தகுதியற்றதும், அற்பத்தனமானதும் செய்திகளால் நமது மனதை நிரப்பிக் கொள்ளக்கூடாது. வாழ்க்கையென்பது குறுகிய காலத்திற்குரியது. கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை மிக விரைவில் செய்யவேண்டியவர்களாயிருக்கிறோம். “நாம் எல்லோரும் இப்புவியில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்புரிய வேண்டியவர்களாக இருக்கிறோம்”.
தேவனுடைய வார்த்தைகளைத் தொடர்ந்து கேட்பதற்கு கவனமுள்ளவர்களாயிருப்பதே விசுவாசிகளுக்குத் தகுதியாகும். திருமறை வசனங்களால் நமது உள்ளங்களை நிறைத்துக்கொண்டு, அவற்றில் கூறப்பட்டுள்ள தூய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து, தேவனைப்பற்றிய சிந்தனைகளைத் தொடர்ந்து சிந்திப்போமாயின், அவருடைய சாயலுக்கு ஒப்பாக மறுரூபப்படுவோம். நம்மைச் சூழ தலைவிரித்தாடும் ஒழுக்கக்கேட்டினால் களங்கப்படாமல் பிரிந்து வாழ்கிறவர்களாகக் காணப்படுவோம்.