பெப்பரவரி 24
ஆதாம்… தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்றான் (ஆதி.5:3)
நமது சாயலாக, நமது ரூபத்தின்படி பிள்ளைகளைப் பெறுவது நமது சரீரப் பிரகாரமான வாழ்வின் அடிப்படை உண்மையாக இருக்கிறது. ஆதாம் தன் சாயலில் ஒரு குமாரனைப் பெற்று அவனுக்கு சேத் என்று பெயரிட்டான். சேத்தைக் கண்ட மக்கள், மனிதர்களுடைய வழக்கத்தின்படியே, “தந்தையைப் போலும் தனையன்” என்று கூறியிருப்பார்கள்.
ஆவிக்குரிய வாழ்விலும் நமது சாயலிலே பிள்ளைகளைப் பெறுகிறோம் என்னும் உண்மை நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறதாயிருக்கிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நாம் பிறருக்கு அறிமுகப்படுத்துகிறபோது, நம்முடைய குணநலன்களை அவர்கள் எவ்விதச் சிந்தனையுமின்றி ஏற்றுக் கொள்கின்றனர். இது வம்சாவழி இல்லை. மாதரியைப் பின்பற்றுதலாயிருக்கிறது. கிறிஸ்தவர்கள் எங்ஙனம் திகழவேண்டும் என்பதற்கு, அவர்கள் நம்மையே நோக்கிப் பார்க்கின்றனர். எவ்விதக் கருத்தூன்றிய சிந்தனையும் கொள்ளாது நமது நடத்தையை மாதிரியாகக் கருதுகின்றனர். ஒரு குடும்பச் சாயலைப் போலவே அவர்கள் நமது சாயலை வெகுவிரைவில் வெளிப்படுத்துகிறவர்களாகவே காணப்படுவர்.
விசுவாசத்தில் என் பிள்ளைகளாக இருப்போர் வேதத்திற்கு நான் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தையே, அளவுகோலாக கணக்கில்கொள்வர். நான் ஜெபத்திற்கு தரும் இடத்தையே அவர்களும் கொடுப்பார்கள். நான் ஆராதனை செலுத்துகிறவனாக இருப்பேனென்றால், அப்பண்பு அவர்களையும் ஆராதிக்கிறவர்களாக்கும்.
ஒரு சீடனிடம் எதிர்பார்க்கப்படும் அத்தனையும் கடினமான செயல்களையும் நான் கடைப்பிடிப்பேனென்றால், அதுவே எல்லா விசுவாசிகளுக்கும் தகுதியானவை என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். அதற்கு மாறாக, கர்த்தருடைய சொற்களைவிட்டு விலகி, செல்வத்திற்காகவும், புகழ்ச்சிக்காகவும், இன்பத்திற்காகவும் வாழ்வேனென்றால், அவர்களும் என்னையே பின்பற்றுவர்.
கர்த்தருக்கென்று அயராது உழைத்து ஆத்தும ஆதாயம் செய்கிறவர்கள், அனல் உள்ளவராய் உழைக்கும் ஊழியர்களைப் பெற்றெடுப்பர். தேவவார்த்தைகளை மனப்பாடம் செய்து அதில் தியானமாயிருந்து களிகூருகிறவர்கள், தங்களுடைய ஆவிக்குரிய பிள்ளைகளை அத்தகைய சீரிய நோக்கமுடையவர்களாகக் காணச்செய்வர்.
சபைகூடிவருதலை நீங்கள் புறக்கணிப்பீர்கள் என்றால், உங்களுடைய பாதுகாப்பில் இருப்பவர்களும் அவ்வாறே செய்வார்கள். சபைக் கூட்டங்களுக்கு நீங்கள் காலதாமதாமாகச் செல்வீர்களெனில் அவர்கள் சரியான நேரத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. நீங்கள் கடைசி வரிசையில் அமர்வீர்களென்றால் அவர்களும் அவ்வாறே அமர்வார்கள்.
மேற்கூறியவைகளுக்கு மாறாக, நீங்கள் ஒழுங்குடனும், சார்ந்திருக்கத்தக்கபடியும், காலதாமதமின்றியும் திறம்பட உழைக்கிறவர்களாக இருப்பீர்களாயின் உங்களுடைய தீமோத்தேயுக்கள் உங்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுவார்கள்.
“என்னுடைய சாயலில் பிள்ளைகளைப் பெற்றெடுத்தால், அதில் நான் மனநிறைவு அடைவேனா?” என்னும் கேள்வி நம் ஒவ்வொருவரையும் எதிர்கொள்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல், என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்“ என்று கூறியிருப்பதைக் கவனிப்போம். (1.கொரி.4:16). நம்மால் அவ்வாறு கூறமுடியுமா?