பெப்ரவரி 18
சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ? (ஆதி.18:25)
ஆழ்ந்த சிந்திப்பினும் அறிய இயலா அரிய மர்மங்கள் பல உள்ளன. என்றாலும் சர்வலோகத்திற்கும் நியாயாதிபதியாக வீற்றிருப்பவர் தேவனே என்றும், அவர் அளவிடுவதற்கு இயலாவண்ணம் நீதியால் நிறைந்திருக்கிறார் என்றும் நாம் அறிந்திருக்கிறோம். இப்பேருண்மை நமக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது.
தத்தம் செயலுக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்ய வயதை எட்டாது, நித்தியத்திற்குள் மறைகிற குழந்தைகளின் நிலை என்ன என்று நாம் அறிவதில்லை. “தேவனுடைய இராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” என்னும் கூற்று நம்மில் பலருக்கு மனநிறைவை அளிக்கிறது. இயேசுகிறிஸ்துவின் திருஇரத்தத்தால் அவர்களுக்குப் பாதுகாப்பு உண்டு என்று நம்புகிறோம். இதில் மனநிறைவு பெறாதவர்கள், மேலே சொல்லப்பட்டுள்ள வசனத்தில் மனநிறைவு அடைவார்கள் என்று கருதுகிறோம். எது சரியோ அதனையே தேவன் செய்கிறவராக இருக்கிறார் என்று நாம் அறியக்கடவோம்.
தெரிந்துகொள்ளுதலைக் குறித்தும், முன்குறித்தலைக் குறித்தும் நீண்ட காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. இரட்சிக்கப்படுவதற்கென்று சிலரையும், அதே நேரத்தில் நித்திய அழிவிற்கென்று சிலரையும் தேவன் தெரிந்துகொண்டிருக்கிறாரோ? கால்வின் கூட்டத்தாரும், அர்மீனியரும் இதைப்பற்றி பலவாறு கூறுவர். ஆயின், தேவனிடத்தில் நீதியற்ற தன்மை ஒன்றம் இல்லையென்று முழுநம்பிக்கை கொள்வோம்.
தீயோர் செழித்தலும், நல்லோர் தீமையை அடைவதுமாய்க் காணப்படுதல் அநீதியல்லவா? ஒருபோதும் நற்செய்தியைக் கேட்டிரா புறஇனத்தவரின் முடிவு என்ன என்னும் வினா மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. பாவத்தை ஏன் அனுமதித்தார் என்னும் கேள்வி மனிதனைக் குழப்பமடையச் செய்துள்ளது. சோக நிகழ்ச்சிகள், வறுமைகள், பட்டினிகள், உடலில் ஊனம், மனத்தினில் பாதிப்பு இவையாவும் நம்மை வாயடைத்து நிற்கச் செய்கின்றன. “எல்லாம் தேவனுடைய ஆளுகைக்குள் இருக்குமாயின், இவை யாவற்றையும் அவர் ஏன் அனுமதித்துள்ளார்? என்னும் சந்தேகம் குமுறிக் கொண்டே இருக்கிறது.
கடைசிக் காட்சி எழுதப்படும்வரை காத்திருங்கள். இதுகாறும் தேவன் தவறேதும் செய்யவில்லை. எல்லாவற்றையும் நாம் தெளிவாகக் காணும் வேளையில், “சர்வலோக நியாயாதிபதி நீதியாய்ச் செய்தார் என்று அறிவோம்” என்று விசுவாசம் விடைபகரும்.
“தேவனின் எழுத்துக்கள் மகத்தானவை. ஆயினும் தமது குறுகிய பார்வையில் அதனை விளக்கமாக அறிவது அரிது. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணும் எழுத்துக்களைக் கூட்டி அனைத்து மர்மங்களையும் அறியவேண்டுமென்று தவிக்கிறோம். உதிர்ந்த நம்பிக்கைகள், மரணம், வாழ்வு, முடிவில்லா யுத்தம், தேவையற்ற சச்சரவு எதுவும் புரிவதில்லை. என்றாலும் ஒருநாளில் எல்லாம் தெளிவுறத் தெரியும். ஒன்றை அறிவோம். அவர் வழி யாவும் நீதியே”