பெப்ரவரி 16
நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு. (நீதி.14:13)
இப்புவி வாழ்வினில் நிலைபேறானது என்று எதைக்குறித்தும் கூற இயலாது. எல்லா நகைப்பிலும் துக்கம் கலந்திருக்கின்றது. ஓவ்வொரு வைரத்திலும் ஒரு குறை உண்டு. ஒவ்வொரு மனிதனும் தன் குணங்களில் ஏதேனும் ஒன்றில் குறை உடையவனாக இருக்கிறான். அஃது சுவைமிக்க மாங்கனியில் இருக்கும் வண்டுபோலக் காணப்படுகிறது.
எந்தக் குறையும் இல்லாதபடி நாம் காணப்படவேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பது நன்று. நாம் முழுநிறைவை அடையவேண்டும் என்ற வாஞ்சையை தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆயினும், சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு வாழ்வது நன்று. முழுநிறைவை நாம் கதிரவனுக்குக் கீழாகக் காண இயலாது.
தங்களுடைய இல்லத்தில் மட்டுமே சச்சரவு காணப்படுகின்றது என்று இளைஞர்கள் எண்ணுவது இயற்கையே. தங்களுடைய பெற்றோர் மட்டுமே, தொலைக்காட்சியில் காணும் கிறிஸ்தவத் தலைவர்களின் உன்னத குணங்களை உடையவர்களாக இருப்பதில்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
தெருவின் எதிர்ப்புறம் கூடுகின்ற கிறிஸ்தவ ஆலயம் சிறப்பாகச் செயல்ப்படுவதாக எண்ணுகிற நமக்கு, நம்முடைய சபை ஐக்கியம் ஏமாற்றம் அளிப்பதாகக் காணப்படுவது இயற்கையே.
முழுநிறைவாக குணங்கள் உடைய நண்பர்களைப் பெறவேண்டும் என்னும் நோக்குடன் தேடி அலைவது எளிது. மேலும், எவ்விதத்திலும் முழுநிறைவான நற்குணங்களை வெளிப்படுத்தும் வாழ்க்கையை நாம் வாழாதிருப்பினும், அவ்வித நிறைவை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது இயற்கையே.
உண்மை யாதெனில், ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட சில குறைகளை உடையவனாக இருக்கிறான். ஒரு சிலர் மற்றவர்களைக் காட்டிலும் தங்களுடைய குறைகளைப் பளிச்சிட்டுக் காட்டுகின்றனர். மேலும் எவ்வளவு உயர்வாக ஒருவர் கருதப்படுகின்றாரோ, அவ்வளவு தெளிவாக அவரது குறைகள் வெளிப்படும். ஆகலின், பிற விசுவாசிகளிடம் காணும் குறைகளைக் கண்டு ஏமாற்றம் அடைவதைத் தவிர்த்து, அவர்களிடம் காணும் நற்குணங்களைப் பற்றி வலியுறுத்திப் பேசுதல் நன்று. ஒவ்வொருவரிடத்திலும் ஒருசில நற்குணங்கள் காணப்படும். ஆனால், ஒரே ஒருவரிடம் மட்டுமே அனைத்து நற்குணங்களும் நிறைவாகக் காணப்படும். அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
இப்புவி வாழ்வில் முழுநிறைவை நாம் பெறவேண்டும் என்னும் விருப்பம் நிறைவேறுவதில்லை. முழுநிறைவை அடையாத நம்மை தேவன் விட்டுவைத்திருப்பதற்கு ஒரு நோக்கம் உண்டு என்றே நான் கருதுகிறேன். அஃதாவது, அந்நிலையில் இருப்பதினாலேயே குற்றமற்றவரும் மாசில்லாதவருமாகிய கர்த்தரை நோக்கிப் பார்ப்பவர்களாக நாம் வாழ்வோம். நற்சீர்மிக்க நற்பண்புகளின் முழுத் தொகையாகக் கர்த்தர் திகழ்கிறார். ஒழுக்கத்தின் அழகினை நிறைவாய் உடைய அவரிடம் எவ்வித ஏமாற்றத்தையும் நாம் அடையமாட்டோம்.