பெப்ரவரி 15
உன் ஆகாரத்தைத் தண்ணீர்களின்மேல் போடு. அநேக நாட்களுக்குப் பின்பு அதன் பலைனக் காண்பாய் (பிர.11:1).
இங்கு ஆகாரம் என்று சொல்லப்பட்டுள்ளது. அதைச் செய்வதற்காகப் பயன்பட்ட தானியத்தையே குறிக்கிறது. எகிப்து நாட்டில் நீர் நிறைந்திருக்கும் இடங்களில் விதை தூவப்படும். நீர் வற்றியபிறகே பயிர் துளிர்க்கும். அது வளர்ந்து கனிதர பல நாட்கள் ஆகும். எல்லாம் உடனடியாக நடந்துவிடுவதில்லை.
இன்றைய காலகட்டத்தில் எல்லாம் உடனடியாகச் செயல்படவேண்டும் என்றும், அவற்றின் பலன் உடனடியாகக் கிடைக்கப்படவேண்டும் என்றும், அவற்றின் பலன் உடனடியாகக் கிடைக்கவேண்டும் என்றும் எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள். உடனடியாகப் பருகும் பானங்கள், உடனடியாக உண்ணும் சிற்றூண்டிகள் இவைகளுக்குக் குறைவில்லை. வங்கியிலும் உடனடியாகக் கடன் தருகின்றனர். தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளின் சில பகுதிகளை உடனடியாகத் திரும்பக் காட்டுகின்றனர்.
கிறிஸ்தவ வாழ்விலும், ஊழியத்திலும் அவ்வாறு காண இயலாது. நாம் இரக்கம் பாராட்டுகிறோம். அதன் பலனை உடனடியாகப் பெறுவதில்லை. நமது மன்றாட்டுகள் அனைத்திற்கும் உடனடியாகப் பதில் அளிக்கப்படுவதில்லை. நமது ஊழியங்களும் உடனடியாகக் கனிகளை உருவாக்குவதில்லை.
கிறிஸ்தவப்பணியினை விளக்கும் பொருட்டு, உழவுத்தொழிலின் பருவச் சூழற்சியைப்பற்றி ஆங்காங்கு திருமறையில் சொல்லப்பட்டுள்ளதைக் காண்க. “விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்” “நான் நட்டேன் அப்பொல்லோ நீர் பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்” “ முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும்” என்னும் வசனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளரும் வளர்ச்சியைக் குறிக்கின்றன. திராட்சை, மாமரத்தைக் காட்டிலும் விரைவாக வளரும். எனினும் அதற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் உண்டு.
ஆகவே, பிரதிபலன் கருதாது செய்கின்ற நன்மைகளுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மன்றாட்டுகளுக்கு உடனடியாகப் பதில் கிடைக்கும் என்று எதிhபார்ப்பது நமது வளர்ச்சியற்ற தன்மையை எடுத்துரைக்கும். நற்செய்தியை ஒருவரிடம் முதன்முதலாகப் பகிர்ந்தவுடனேயே அவரிடமிருந்து முடிவை எதிர்பார்ப்பது மதியீனமே. கொடுப்பது, மன்றாடுவது, தொடர்ந்து நீண்டதொரு காலத்திற்கு இளைப்படையாது உழைப்பது என்னும் தத்துவமே தகும். ஆகவே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் வீணாகப்போவதில்லை என்னும் நம்பிக்கையுடன் செயல்ப்படுவீர்களாக. நீங்கள் ஆற்றிய செயலின் விளைவாக பலனை நீங்கள் காணும்போது, உங்களது பெருமை தலைதூக்கவேண்டாம். அந்தப் பலன், நீங்கள் முன்னேறிச் செல்வதற்கு ஊக்கம் ஊட்டுவதாக அமையட்டும். முடிவான பலனைப் பரலோகம் சேரும்வரை அறியமாட்டோம். நமது உழைப்பின் பலனைக் காண்பதற்கு அதுவே சிறந்ததும் பாதுகாப்புமான இடமாகும்.