பெப்ரவரி 13
ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல் மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் (ரோ.13:8).
நாம் கடன்பெறத் தடைசெய்யப்பட்டிருக்கிறோம் என்பது இக்கூற்றின் பொருளன்று. தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம், நீர் வரி அகிய கடன்களிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளமுடியாது. சில சூழ்நிலைகளில் கடன்பெற்று வீடுவாங்குவது நல்ல சீடனுக்குத் தகுதியாக இருக்கும். வீட்டிற்கு வாடகை தருவதைக் காட்டிலும், அதே அளவு தொகையைக் கடன் தவணையாகச் செலுத்துவது மேல். ஒரு தொழிலை மேற்கொள்ளும்போது வங்கியில் கடன்பெறாமல் அதனை நடத்துவது இந்நாட்களில் முடியாததாக இருக்கிறது.
ஆனாலும் இவ்வசனம் சில பழக்கங்களைத் தடைசெய்கிறது. கடனைத் திருப்பிக் கொடுக்க எவ்வித வழியுமில்லை என்பதை அறிந்தும் கடன் பெறுவதை இது தடுக்கிறது. ஒரு பொருள் அதன் பயன்பாட்டினால் விலை குறையக்கூடியதாக இருக்குமாயின், அப்பொருளை வாங்குவதற்குக் கடன்பெறக்கூடாது. மேலும், திரும்பச் செலுத்தாமல் கடன் நிலுவைத் தொகை பெருகுவதை இவ்வசனம் எதிர்க்கிறது. தேவையற்ற பொருளை வாங்குவதற்காக நாம் கடன்படக்கூடாது. கடன் அட்டைகள் தாராளமாய்ப் புழங்குகின்ற இந்நாட்களில், எப்பொருளைக் கண்டாலும் அதை வாங்குவதற்கு நாம் ஏவப்படுகிறோம். இவ்விதமான தூண்டுதலினால் தலைக்கு மேலாகக் கடன்பெருகுவதை நாம் முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும். திரும்பச் செலுத்தாத தொகைக்கு அந்நிறுவனங்கள் அதிகமாக வட்டி வசூலிக்கின்றன. இப்படிப்பட்ட கண்ணியில் சிக்குண்டு கர்த்தருடைய பணத்தை வீணடிக்கக்கூடாது.
கடன் கொடுத்தோரின் தொல்லைகளினின்று நம்மைக் காத்துக்கொள்ளவதற்கான அறிவுரையாக இது இருக்கிறது. செலவின் மிகுதியால் கடன் தொல்லை பெருகி, திருமண உறவு முறிந்துபோகிறது. கடனைத் திரும்பச் செலுத்த இயலாதவர் என்ற பெயரையும் நீதிமன்றம் சூட்டுகிறது. இவையாவும் கிறிஸ்தவனின் நற்சான்றினை அழித்துப்போடுபவையாகும்.
நமது வாழ்க்கை முறையைப் பொதுவாக, வருவாய்க்குத் தகுந்த வண்ணம் சீராக நடத்தவேண்டும். பொருளாதாரப் பொறுப்புடையோராய்த் திகழுதல் கிறிஸ்தவர்களுக்கு அழகு. “கடன் வாங்கியவன், கடன் கொடுத்தவனுக்கு அடிமை” என்பதை எப்போதும் நாம் நினைவிற்கொள்ளவேண்டும் (நீதி.22:7).
ஒருவரில் ஒருவர் அன்புகூருதல் என்னும் கடன் கிறிஸ்தவனுடைய தகுதியாக எப்பொழுதும் காணப்படுகிறது. இரட்சிக்கப்படாதவர்களிடம் அன்பு பாராட்டி அவர்கட்கு நற்செய்தியை வழங்க நாம் கடன்பட்டுள்ளோம் (ரோ.1:14). நமது சகோதரரிடத்தில் அன்புகூர்ந்து, அவர்களுக்காக நமது வாழ்வைக் கொடுக்க நாம் கடனாளிகளாயிருக்கிறோம் (1.யோ.3:16). இவ்வகையான கடனால் நாம் சட்டத்தின்பிடியில் அகப்பட்டுக்கொள்வதில்லை. மாறாக, பவுல் கூறுவதுபோல இது அன்பின் சட்டத்தை நிறைவேற்றுகிறதாயிருக்கிறது.