பெப்ரவரி 12
இந்த மலையிலும் அல்ல, எருசலேமிலும் அல்ல. (யோ.4:21)
யூதர்கள் தொழுதுகொள்வதற்கென்று தேவன் தமது பெயரை எருசலேமில் நிலைநாட்டி இருந்தார். சமாரியக் குடிமக்கள் கெர்சீம் மலையில் தொழுகொண்டனர். ஆனால், தொழுதுகொள்வதற்கான புதிய ஒழுங்கினை சமாரியப் பெண்ணுக்கு, இயேசு கிறிஸ்து கற்பித்தார். “உண்மையாய்த் தொழுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார் (யோ.4:23).
அதுமுதல், தேவனைத் தொழுதுகொள்வதற்குக் குறிப்பிட்ட ஓரிடத்தை தேவன் குறிக்கவில்லை. நமது காலகட்டத்தில் கர்த்தராகிய பரிசுத்தரே பரிசுத்த ஸ்தலமாக இருக்கிறார். விசுவாசிகளின் சபையாக ஒன்று கூடுவதற்குக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நாயகராக இருக்கிறார். “ஐனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்” என்னும் யாக்கோபின் சொற்கள் நிறைவேறுகிறவைகளாக இருக்கின்றன (ஆதி.49:10).
நாம் இயேசு கிறிஸ்துவினிடத்தில் கூடி வருகிறோம். புனிதமாக்கப்பட்ட ஆலயங்களிடத்திலோ, அலங்கரிக்கப்பட்ட பலகணிகளிடத்திலோ, இசைக் கருவிகளிடத்திலோ அல்லது வரம் பெற்று, சொல்லாற்றல் மிக்க ஒரு மனிதனிடத்திற்கோ கூடி வருவதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நம்மைத் தம்மிடத்தில் ஈர்க்கும் தெய்வீகக் காந்தமாக இருக்கிறார்.
இப் புவியில் நாம் ஒன்றாகக் கூடுகின்ற இடத்திற்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லை. பெரியதொரு மாளிகையிலோ, வயலிலோ, குகையிலோ நாம் எங்கு வேண்டுமாயினும் கூடலாம். உண்மையான தொழுகையின்போது நாம் பரலோகப் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைகிறோம். பிதாவாகிய தேவன் அங்கு இருக்கிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அங்கு இருக்கிறார்.
இவ்வகை வியத்தகு தெய்வீகக் கூட்டத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமையால், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலம், நமது இதயத்தை ஊற்றி, நாம் தேவனை ஆராதிக்கத்தக்க சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். ஆகவே, நமது சரீரம் இப்புவியில் இருக்கும்போதே, இளைப்பாறுதல் இல்லாமல் போராடுகிற இவ்வுலகைவிட்டு வெகு தொலைவிற்கு நமது ஆவி கடந்து செல்கிறது.
“இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்னும் இரட்சகரின் வார்த்தைகளுக்கு மேற்கூறியவை எதிர்மறையாக உள்ளனவோ? இல்லை, இதுவும் உண்மையே. அவருடைய மக்கள் கூடுகிற இடத்திற்குச் சிறப்பான முறையில் நமதாண்டவர் வருகைபுரிகிறார். அவருடைய திருப்பெயரால் ஏறெடுக்கும் புகழ்ச்சியையும், மன்றாட்டையும் தமது தந்தையினிடத்தில் படைக்கின்றார். நமது நடுவில் சபாபதியாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக் கொண்டிருப்பது நாம் பெற்ற நற்பேறு.