டிசம்பர் 31
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்@ ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளி 3:20)
இன்னொரு ஆண்டின் முடிவிற்கு நாம் இப்பொழுது வந்திருக்கிறோம். உள்ளே வருகிறதற்கு அனுமதிகோரி மனிதரின் வாசற்படியில் பொறுமையுடன் கர்த்தர் இன்னும் நின்றுகொண்டிருக்கிறார். வெகுநேரம் அவர் வெளியிலே காக்கவைக்கப்பட்டிருக்கிறார். வேறு யாராக இருப்பினும் நம்பிக்கை இழந்து, திரும்பி வீட்டிற்குப் போயிருப்பார். ஆயின் நமது இரட்சகர் அங்ஙனம் செய்யார். அவர் நீடிய பொறுமையுடையவர், ஒருவரும் கெட்டுப்போகக் கூடாதெனக் காத்திருக்கிறார். ஒருநாள் கதவு வேகமாய்த் திறக்குமென்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பிற்கு பதில் கூற மறுப்போரைக் காணும் வேளையில் நாம் வியப்படைகிறோம். அயலகத்தார் கதவைத் தட்டுவார்கள் எனில், உடனடியாக கதவு திறக்கப்படுகிறது. ஒருவேளை விற்பனையாளன் கதவைத் தட்டியிருந்தால், வீட்டில் யாராவது ஒருவர் கதவைத் திறந்து, எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை என்று சொல்லுவார். ஒருவேளை நாட்டின் குடியரசுத்தலைவரோ மாநிலத்தின் ஆளுநரோ வந்திருந்தால், வீட்டில் இருப்போர் முந்தியடித்துக் கொண்டுபோய் கதவைத் திறப்பார் என்பது நிச்சயம். அவரை வரவேற்பது தாம் பெற்ற நற்பேறு என்று கருதுவார். ஆயின் படைப்பாளரும், தாங்குகிறவரும், மீட்பரும் கதவருகில் நிற்கும்போது பாராமுகத்தோடு அமைதியாயிருப்பது மிகுந்த விநோதமாயிருக்கிறது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைக் கொள்ளையிட வரவில்லை, நமக்குக் கொடுக்கவே வந்திருக்கிறார் என்பதை அறிந்தும் மனிதன் அவருக்கு மறுப்புரை கொடுப்பது பகுத்தறிவற்ற செயலாகும். அவர் நீடுவாழ்வை மிகுதியாக நல்கவே வந்திருக்கிறார்.
வானொலி இறையியல் சொற்பொழிவாளர் ஒருவரிடம் இரவில் வெகுநேரம் கழித்துத் தொலைபேசியில் ஒருவர் தொடர்பு கொண்டார். தனது வீட்டிற்குச் செல்லும் முன்னர் அவரைச் சந்திக்க அனுமதி கோரினார். இரவு வெகுநேரம் ஆகிவிட்டதே என்று கருதி, பிரசங்கியார் அவர் வருவதைத் தடைசெய்யவேண்டும்மென்று நினைத்தார். பல காரணங்களைக் கூறியும் அவர் வற்புறுத்தவே கடைசியில் இணங்கினார். பார்வையாளர், வானொலி ஊழியத்திற்குச் செலவாகும் பெருந்தொகையை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு உடனடியாகச் சென்றுவிட்டார். அப்பொழுது அந்தப் பிரசங்கியார், அவரை வீட்டிற்கு வரவேற்றது எவ்வளவு நல்லது என்று சொல்லி மகிழ்ந்தார்.
ஜோ பிலிங்கோ இதனை உயிரூட்டம் உடைய கதையாக வடிவமைத்துக் கூறியுள்ளார். வீட்டில் உள்ளோர் உரையாடிக் கொண்டிருந்தனர். வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் திடீரெனக் கேட்டது. யாரோ வந்திருக்கிறார் என்று ஒருவர் கூறினார். மற்றொருவர் குதித்தெழுந்து ஓடிச்சென்று கதவைத் திறந்தார். வேறோருவர், வந்திருப்பது யார்? என்று வினவினார். வாசற்கதவு அருகிலிருந்து பதில் வந்தது. இறுதியில் வீட்டின் தலைவர் அவரை உள்ளே வரச்சொல் என்று கத்தினார்.
சுருங்கச் சொன்னால், இதுவே நற்செய்தியாகும். கவனித்துக் கேளுங்கள்! யாரோ ஒருவர் கதவருகில் நிற்கிறார். அவர் யார்? அவரே ஜீவாதிபதியும் மகிமையின் கர்த்தருமாவார். அவரே நமக்குப் பதில் ஆளாக மரணத்தை ஏற்றுக்கொண்டு, அடக்கம்செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவர். மகிமையில் முடிசூட்டப்பட்டவராக இப்பொழுது திகழ்கிறார். தம்முடைய மக்களைத் தம்மோடு சேர்த்துக்கொள்ள மீண்டும் வரப்போகிறவர் அவரே, அவரை உள்ளே வரும்படியாக அழைப்பீர்களாக.