ஜூன் 2
‘உனக்கு நன்மை செய்வேன்‘
ஆதியாகமம் 32:9
இது கர்த்தர் யாக்கோபுக்குச் சொன்ன வாக்கு நம்முடைய பிதாக்களுக்குச் சொன்ன வாக்கை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றுவார். இப்படி நமக்கு வாக்குக்கொடுத்திருப்பதினால் பெருந்துன்பங்கள், கடுஞ்சோதனைகள், வியாகுலங்கள். உபாதிகள், தரித்திரம் மனவேதனை, கலக்கம் முதலியவைகளுக்கு நாம் நீங்கலாயிருப்போமென்பது அவர் கருத்தல்ல. இவைகளெல்லாம் நமக்கு வந்தாலும், கர்த்தர் நமக்கு நன்மைதான் செய்கிறார். நம்முடைய துன்பங்கள் நமக்கு நன்மையாய் முடியுமென்றும், அவருடைய கிருபை நமக்குக் கிடைக்குமென்றும், பொல்லாங்கினின்று விடுதலையாக்கப்பட்டு நமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ளுவோமென்றும், நம்முடைய விருப்பங்கள் திருப்தியாகுமென்றும், நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். வியாதியிலும், சுகத்திலும், ஜீவனோடிருக்கும்போதும்; மரிக்கும்போதும்; இம்மையிலும், மறுமையிலும், ஏகோவா நமக்கு நன்மைசெய்வாரென்று அறிந்திருப்பது நமக்குப் போதாதா? இது ஏகோவா நமக்குக் கொடுத்த பத்திரம்; விசுவாசிக்கு ஆதரவு; கிறிஸ்தவனுடைய நம்பிக்கைக்கு ஆதாரம்; மனத்திருப்திக்கும் நன்றியறிதலுக்கும் போந்த முகாந்தரம்; நம்முடைய சத்துருக்களைக் கலங்கடிக்கிற ஆயுதம்; யாக்கோபு சோதித்து, கர்த்தர் உண்மையுள்ளவரென்று கண்டான். நாமும் அப்படியே காண்போம். ‘நான் உனக்கு நன்மை செய்வேன். என் தயவெல்லாம் உனக்கு முன்பாகப் போகச்செய்து, நித்திய ரட்சிப்பால் உன்னை ரட்சிப்பேன். நான் உன் தேவனும் மகிமையுமாயிருப்பேன்’ என்று நம்முடைய தேவன் சொன்னதைக்குறித்து நாம் மகிழ்வோமாக. நீர் சொன்னபடியே செய்யும், தயவுள்ள கர்த்தாவே. இயேசுவே உம்மிலன்றி யாரில் நம்பிக்கை வைப்பேன்
நீர் ஆறுதலாய்த் தோன்றி
தாங்கிலல்லோ செழிப்பேன்.
எந்நாளும் நீர் நடத்தும்
என் நா நின் துதி சாற்றும்.


