மத்தேயு எழுதின சுவிசேஷம்
முன்னுரை
“உன்னதமான கருத்துக்களுக்கு, வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட திரளான செய்திகளைத் துணையாக்கி, அவற்றை தகைசிறந்த வகையில் உருவாக்கித் தருவதிலும் ஆற்றல் மிக்க வகையில் எடுத்தியம்புவதிலும் மத்தேயு நற்செய்தி நூல் இரு ஏற்பாடுகளிலும் தன்னிகரற்று விளங்குகிறது” – தியோடர் ஸ்ஜான்.
1. வேத நூல் வரிசையில் தனிச்சிறப்பு மிக்க இடம்
பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் ஏற்றதொரு பாலமாக மத்தேயு நற்செய்தி நூல் திகழ்கிறது. பழைய ஏற்பாட்டு இறைமக்களின் முற்பிதாவாகிய ஆபிரகாமையும், இஸ்ரவேலின் முதலாவது சிறப்புவாய்ந்த அரசனாகிய தாவீதையும் நோக்கி இந்நூலின் முதற்சொற்கள் நம்மை பின்னோக்கிப் பார்க்கச் செய்கின்றன. இதன் சொல்வன்மை யூத மணம் கமழுகிறதாயிருக்கிறது; பற்பல எபிரெய வேதாகம மேற்கோள்கள் இதில் இடம்பெற்றுள்ளன; மேலும் இந்நூல் புதிய ஏற்பாட்டின் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. இவையாவும் கிறிஸ்தவ நற்செய்தியினை உலகிற்கு வழங்குவதற்குத் தகுதியான முதலிடத்தை இந்நூலுக்கு வழங்குகின்றன. நான்கு நற்செய்தி நூல் வரிசையில், மத்தேயு வெகுகாலமாக முதலிடத்தை வகித்து வருகின்றது. ஏனெனில் இதுவே முதன்முதலாக எழுதப்பட்ட நற்செய்தி நூல் என்று உலகளாவிய கருத்து சமீபகாலம் வரை நம்பப்பட்டு வந்தது. மேலும், தெளிவாகவும் முறையாகவும் மத்தேயு நற்செய்தி நூல் சபைக் கூட்டங்களில் படிப்பதற்கு ஏற்ற நடையில் திகழ்கின்றது. மேலும் யோவான் நற்செய்தி நூலுடன் அவ்விடத்தைத் தக்கவைத்துக்கொள்ள இது போட்டியிடுகிறது எனவும் கூறலாம்.
இதுவே முதலில் இயற்றப்பட்ட நற்செய்திநூல் என்னும் பாரம்பரிய நம்பிக்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆயினும், தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் பெரும்பாலோர் யூத மதப் பின்னணி உடையவராயிருந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் அந்தப் பின்னணியை உடையவராக இருந்த காரணத்தினால், அவர்களுடைய தேவைகளை முதலாவது நிறைவுசெய்வது சாலவும் பொருத்தமானதாகும்.
2. நூலாசிரியர்
இந்த முதல் நற்செய்தி நூலை ஆயக்காரராகப் பணிபுரிந்தவரும், லேவி என்னும் மறுபெயர் கொண்டவருமாகிய மத்தேயு என்பவரே எழுதினார் என்பதற்குப் பண்டைக் காலந்தொட்டே உலகளாவிய புறச்சான்றுகள் விளங்கி வருகின்றன. இவர் இந்நூலை எழுதியிராவிடில், அப்போஸ்தலர்களுக்குள் நன்கு அறியப்படாதவராக இருந்த இவரை இதன் ஆசிரியர் என்று கூறுவது பொருத்தமற்ற கூற்றாக இருந்திருக்கும்.
பன்னிரு அப்போஸ்தலரின் போதனையாகிய “டைடாகே” (னுனையஉhந) என்னும் பழமைவாய்ந்த நூல் மட்டுமின்றி, ஜஸ்டின் மார்டியர், கொரிந்து நகர டயோனிசியஸ், அந்தியோகியாவின் தியோபிலஸ், அத்தேனே பட்டணத்து அத்தேனே கோரஸ் ஆகியோர் இந்நூலின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தினர். “மத்தேயு தனது ‘தெய்வீகச் சொற்களை’ (டுடிபயை) எபிரெய மொழியில் தொகுத்து எழுதினார். அதற்கு ஒவ்வொருவரும் தத்தம் திறமைக்கேற்ப விளக்கம் அளித்தனர்” என்று பாப்பியாஸ் கூறியிருப்பதாக, சபைவரலாற்றாசிரியர் யூசிபியஸ் குறிப்பிட்டுள்ளார். ஐரேனியஸ், பாந்தேனஸ், ஓரிகன் ஆகியோரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டிருந்தனர். நம்முடைய கர்த்தர் இப்புவியில் இருந்த காலத்தில் வாழ்ந்த எபிரெய மக்கள் பயன்படுத்திய அராமிய மொழியையே எபிரெய மொழி என்று யாவரும் கருதிவந்தனர். அப்படியானனால் டுடிபயை என்னும் தெடீநுவீகச் சொற்கள் என்பன எவை? இந்தக் கிரேக்கச் சொல் பொதுவாக “தெய்வீக மொழிகள்” என்றே பொருள்படும். பழைய ஏற்பாடு இவ்வாறு தேவனுடைய சொற்களை உடையதாக இருக்கின்றது. பாப்பியாசின் சொற்கள் இவ்விதப்பொருளோடு எழுதப்படவில்லை. அவருடையசொற்களை மூன்று விதங்களில் பொருள்கொள்ளலாம்: (1) அச்சொல் மத்தேயு எழுதிய நற்செய்தி நூலைக் குறிக்கும் சொல் எனப் பொருள்படும். யூதர்களைக் கிறிஸ்துவுக்காக வென்றிடும் பொருட்டு மத்தேயு தனது நற்செய்தித் தொகுப்பை அராமிய மொழியில் எழுதினார். யூதக் கிறிஸ்தவர்களுக்குக் கற்பிக்கும் நோக்கமும் அவருக்கு இருந்தது எனலாம். சிறிது காலத்திற்குப் பின்னரே அதன் கிரேக்க மொழியாக்கம் செய்யப்பட்டது. (2) அச்சொல் இயேசுவின் திருமொழிகளை மட்டும் குறிக்கிறது எனப் பொருள்படும். அவை பின்னர் மத்தேயுவின் நற்செய்தி நூலில் இடம் பெற்றன. (3) அச்சொல் சான்றாதாரங்களான மேற்கோள்களைக் குறிக்கும் எனப் பொருள்படும். அதாவது பழைய ஏற்பாட்டு வசனங்கள் இயேசுவே மேசியா என்று விளக்கிக் காட்டும் வண்ணம் இந்த நற்செய்தி நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
மேற்கூறியவற்றில் மூன்றாவது கருத்தைவிட முதலிரண்டு கருத்துகளும் ஏற்புடையவையாகத் தோன்றுகின்றன.
கிரேக்க மொழியில் காணப்படும் மத்தேயு நற்செய்தி நூல், வெறுமனே மொழிபெயர்ப்புபோலத் தோன்றவில்லை. ஆனாலும், மேற்கூறிய பாரம்பரியக் கருத்தை, எவரும் எதிர்க்காத நிலையில் உண்மையற்றது என்று சொல்லிவிடமுடியாது. பதினைந்து ஆண்டுகள் மத்தேயு பாலஸ்தீன நாட்டில் நற்செய்தியை அறிவித்து, பின்னர் வெளிநாடுகளுக்குச் சென்றதாகப் பண்டைக் காலம்தொட்டு நம்பப்பட்டு வருகிறது. இயேசுவை தங்களுடைய மேசியாவாக ஏற்றுக்கொண்ட யூதர்களுக்காக தனது நற்செய்தி நூலை ஏறத்தாழ கி. பி. 45 -ஆம் ஆண்டில் அவர் அராமிய மொழியில் எழுதிவைத்துவிட்டு, பின்னர் அவரே அனைத்துலக மக்களுக்காக கிரேக்க மொழியில் எழுதினார் எனக் கருதுவதற்கு இடமுண்டு. (ஒருவேளை கிறிஸ்துவின் பிரசங்கங்களை மட்டும் அவர் அராமிய மொழியில் எழுதியிருக்கவும் கூடும்.) அதுபோன்றே அந்நாட்களில் வாழ்ந்த ஜோஸபஸ் என்பாரும் செய்தார். யூதப் போர்களைக் குறித்து அவர் முதற்படியை அராமிய மொழியில் எழுதினார். பின்னர் முதற்படியை ஆதாரமாகக்கொண்டு அந்த வரலாற்றாசிரியர் தனது நூலை கிரேக்க மொழியில் இயற்றினார்.
இந்நூலாசிரியர் பழைய ஏற்பாட்டின் மீது அளவு கடந்த பற்றுடையவரும் தேவபக்தி நிரம்பியவருமான யூதர் என்பதை இந்நூலின் அகச்சான்றுகள் எடுத்தியம்புகின்றன. அவர் வரம்பெற்ற எழுத்தாளராகவும், மிகக் கவனத்தோடு உண்மைகளைத் தொகுத்துரைப்பவராகவும் விளங்கினார். ரோம அரசுப் பணியாளராக விளங்கிய அவர், தமது மக்களுடைய மொழியாகிய அராமியாவிலும், ஆட்சிபுரிவோரின் மொழியாகிய கிரேக்கிலும் கைதேர்ந்தவராக விளங்கினார். (தங்களுடைய ஆட்சியின்கீழ் இருந்த கீழை நாடுகளில் ரோமர்கள் இலத்தீன் மொழியைப் பயன்படுத்தவில்லை.) எண்ணிக்கை விவரங்கள், பணத்தோடு தொடர்புடைய உவமைகள், பணத்தோடு தொடர்புடைய சொற்றொடர்கள் இவை யாவும் இந்நூலின் எழுத்தாளர் வரிவசூலிக்கும் தொழிலைச் செய்தவர் என்பதற்குச் சான்றாய் விளங்குகின்றன. அதுபோலவே சுருக்கமாகவும், வரிசைப்படுத்தி முறையாகவும் எழுதப்பட்ட நடை அவ்வுண்மைக்கு உறுதி தருகின்றன. பழைமைக் கொள்கைகளைப் பின்பற்றாத வேத அறிஞர் குட்ஸ்பீட் என்பார் இந்நூல் மத்தேயுவினால் எழுதப்பட்டது என்னும் உண்மையை, அகச்சான்றுகளின் அடிப்படையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இவ்வாறு உலகளாவிய புறச்சான்றுகளும், சாதகமான அகச்சான்றுகளும் மத்தேயு இந் நூலை இயற்றியவர் என்பதை வலியுறுத்திய போதும், பழைமைக் கொள்கையைப் பின்பற்றாத அறிஞர்கள் பலர் ஆயக்காரராகிய மத்தேயு இந் நூலை இயற்றியிருக்க முடியாது என்று கூறுகின்றனர். இரண்டு காரணங்களின் அடிப்படையில் அவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.
முதலாவது, மாற்கு நற்செய்தி நூலே முதலில் எழுதப்பட்டது என்று அவர்கள் கருதுகின்றனர். (அந்நூல் “சுவிசேஷ சத்தியம்” என்று பல குழுக்களால் போதிக்கப்பட்டு வருகிறது.) அவ்வாறு இருக்கும்போது, அப்போஸ்தலராகவும், நிகடிநச்சிகளைக் கண்களால் கண்ட சாட்சியாகவும் விளங்கிய மத்தேயு, மாற்கு நற்செய்தி நூலிலிருந்து பெரும்பான்மையான பகுதிகளை எவ்வாறு எடுத்தாண்டிருப்பார் என்பதே அவர்கள் எழுப்பும் கேள்வி. (மாற்கு நற்செய்தி நூலில் 93 சதவீதம் மற்ற நற்செய்தி நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.) மாற்கு நற்செய்தி நூல்தான் முதன்முதலில் எழுதப்பட்டது என்று மெய்ப்பிக்கப்படவில்லை. மத்தேயு நூல்தான் முதன்முதலில் எழுதப்பட்டது என்று பழங்காலச் சான்றுகள் கூறுகின்றன. யூதர்களே முதலில் கிறிஸ்தவக் கோட்பாடுகளைப் பின்பற்றினர். இதன் காரணத்தால் மத்தேயு முதலில் எழுதப்பட்ட நூல் என்பது பொருத்தமான கூற்றாகும். மாற்கு நற்செய்தி நூல்தான் முதலில் எழுதப்பட்டது என்பதை நாம் ஒப்புக்கொண்டாலும் (பழைமைக் கொள்கை சார்ந்த வேத அறிஞர் பலரும் அவ்வாறு கருதுகின்றனர்), செயல் திறம் மிக்க பேதுரு அப்போஸ்தலரின் முந்தைய அனுபவங்களின் இலக்கிய வடிவமே பெரும்பாலும் மாற்கு நற்செய்தி நூலாக வெளிப்பட்டது என்னும் பாரம்பரியக் கருத்தை உடன் அப்போஸ்தலராகிய மத்தேயு ஏற்றுக்கொண்டார் எனக் கூறலாம். (மாற்கு நற்செய்தி நூலின் முன்னுரையைக் காண்க).
மத்தேயுவினால் (அல்லது வேறொரு நேரடிச் சாட்சியினால்) இந்நூல் எழுதப்படவில்லை என்பதற்கான, அவர்கள் கூறும் இரண்டாவது காரணம், தெளிவான விவரங்கள் இந்நூலில் இடம்பெறவில்லை என்பதேயாகும். இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை மாற்கு நேரடியாகக் கண்டார் என்று ஒருவரும் கூறுவதில்லை. ஆயினும் அவர் அங்கு இருந்தார் என்று தோன்றத்தக்கதாக, நிகடிநச்சிகளை அழகுற மொழிந்துள்ளார். அப்படியிருக்க நிகடிநச்சிகளைப் பற்றி எழுதினால் போதும் என்னும் சுருக்கமான முறையில் ஒரு நேரடிச்சாட்சி எழுத எவ்வாறு மனம்வரும்? ஒருவேளை ஆயக்காரரின் குணமே அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அது பொருத்தமுடைய விளக்கமாகவும் தோன்றுகிறது. கர்த்தருடைய சொற்பொழிவுகளுக்கு மிகுதியான இடமளிக்கும் பொருட்டு, தேவையற்ற விவரங்களை விலக்கி லேவி எழுதியிருக்கக் கூடும். மாற்கு நூல் முதலில் எழுதப்பட்டது என்பதும், பேதுருவின் முந்தைய அனுபவங்களின் இலக்கிய வடிவமே அது என்பதும் உண்மையாயின் இவ்விளக்கம் மத்தேயுவே இந்நூலாசிரியர் என்னும் கருத்தை உறுதிப்படுத்துகிறது.
3. எழுதப்பட்ட காலம்
பொதுவான நம்பிக்கைக்கேற்ப, மத்தேயு நூல் முழுமையாகவோ, இயேசு கிறிஸ்து வாய் மலர்ந்து பேசிய சொற்கள் மட்டுமோ அராமிய மொழியில் முதலில் எழுதப்பட்டிருக்குமாகில், கிறிஸ்து விண்ணுலகிற்குச் சென்று ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது கி.பி. 45 -இல் மத்தேயு இதனை எழுதியிருக்கவேண்டும். இவ்வாறே பாரம்பரியமாக நம்பப்பட்டும் வருகிறது. பின்னர் கி.பி 50 அல்லது கி. பி. 55 அல்லது அதற்கும் பிறகு கிரேக்க மொழியில் மத்தேயு தமது நற்செய்தி நூலை வெளியிட்டிருப்பார் என்று கருத இடமுண்டு.
எருசலேம் அழிக்கப்பட்ட கி. பி. 70 –க்குப் பிறகே இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்னும் எண்ணம், பின்னர் நடக்கவிருக்கிற நிகழ்சியை இவ்வளவு விரிவாக இயேசு கிறிஸ்துவினால் உரைத்திருக்க முடியாது என்றுரைக்கும் நம்பிக்கையற்ற மனிதர்கள் மற்றும் தேவ ஆவியானவரின் ஏவுதலால் மறைநூல் எழுதப்பட்டதுஎன்பதை மறுத்துரைக்கும் மனிதர்களின் கருத்தாகும்.
4. நூலின் பின்னணியும் கருப்பொருளும்
இயேசு அழைத்தபோது, மத்தேயு ஓர் இளைஞனாக இருந்தார். பிறப்பின்படி யூதராகவும், பயிற்சியாலும் பழக்கத்தாலும் வரிவசூலிப்பவராகவும் இருந்தவர், கிறிஸ்துவைப் பின்பற்றும்பொருட்டு யாவற்றையும் துறந்தார். அதனிமித்தம் அவர் பெற்ற நன்மைகளில் ஒன்று பன்னிரு அப்போஸ்தலர்களில் ஒருவர் என்னும் மேன்மையாகும். நற்செய்தி நூல்களில் முதல் நூல் என்று நாம் அறிந்திருக்கிற இந்நூலை இயற்றும் வாய்ப்பு பிரிதொரு சிறப்பாகும். மத்தேயு என்பாரும் லேவியும் ஒருவரே என்று பொதுவாக நம்பப்படுகிறது (மாற்கு2:14; லூக்கா 5:27).
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இஸ்ரவேலின் மேசியாவும், தாவீதின் அரியணைக்குச் சட்டப்படியான ஒரே உரிமையாளரும் இயேசுவே என மெய்ப்பிப்பதை மத்தேயு தனது நற்செய்தி நூலின் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு முழுவதையும் கூறியிருப்பதாக இந்நூல் உரிமை பாராட்டவில்லை. அவருடைய வம்சவரலாற்றில் தொடங்கும் இந்நூல் குழந்தைப் பருவத்தைத் தொட்டுவிட்டு, வெளியரங்கமான ஊழியத்தின் தொடக்கத்திற்குத் தாவுகிறது. அப்பொழுது இயேசுவுக்கு வயது முப்பது. அவர் தேவனுடைய அபிஷேகத்தைப் பெற்றவர் (அதுவே மேசியா, கிறிஸ்து என்னும் சொற்களின் பொருள்) என்பதை மெய்ப்பிக்கும் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் ஊழியச் சம்பவங்களையும் மட்டுமே ஆவியானவர் நடத்தியபடி தெரிந்தெடுத்து மத்தேயு இந்நூலில் தொடர்ந்து விளக்கிக் கூறியுள்ளார். பின்னர் வாழ்க்கை வரலாற்றின் உச்சகட்டத்திற்கு இந்நூல் சென்றுவிடுகிறது: கர்த்தர் விசாரிக்கப்படுதல், மரணமடைதல், அடக்கம்பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல், விண்ணுலகு ஏகுதல். இந்த இறுதிப்பகுதியில் மனிதனுடைய இரட்சிப்புக்கான ஆதாரம் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இன்னமுறையில் பாவியான மனிதன் இரட்சிப்பைப் பெறுகிறான் என்று அதனை வகைப்படுத்தி இந்நூல் கூறாவிடினும், கிறிஸ்துவின் பலிமரணத்தை விளக்கிக் கூறி இரட்சிப்புக்கான வாய்ப்பை வெளிப்படுத்தி இது நிற்கிறது. எனவேதான் இந் நூல் நற்செய்தி நூல் என்று அழைக்கப்படுகிறது.
இந்த விசுவாசிகளின் வேதாகம விளக்கவுரை, எல்லா விளக்கங்களையும் அளிக்கும் பொருட்டோ, நுட்பமாய் வரையறுத்துத் தரும் நோக்கத்துடனோ எழுதப்படவில்லை. மாறாக, ஒருவர் தனிப்பட்ட முறையில் வேதத்தை ஆராய்ந்து தியானிக்கத் தூண்டும் கருவியாகச் செயல்படுவதே இதன் நோக்கமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, படிப்போரின் உள்ளம் அரசரின் வருகையை எதிர்நோக்கி ஏக்கங்கொள்ளச் செய்வதே இவ்விளக்கவுரையின் நோக்கமாகும்.
வருவேன் எனும்வாக்கு என்நெஞ்சைச்
சிலிர்க்கச் செய்யுதே
காண்பேன் எனும்நினைவு என்மனதை
மகிழப் பண்ணுதே
என்நேசர் வரும்நேரம் எந்நேரம்
என்னுள்ளம் ஏங்குதே
அவர்பாதம் ஒளிவீச வரும்வேகம்
கண்காண மயங்குதே!
– புனித பவுல் என்னும் நூலிலிருந்து F.W.H. மேயர் என்பாரின் பாடலைத் தழுவியது
பொருட்சுருக்கம்
- மேசியா அரசரின் மூதாதையர் மரபு வரலாறும் அவரது பிறப்பும் (அதி.1)
- மேசியா அரசரின் இளமைக் காலம் (அதி. 2)
- மேசியாவின் ஊழியங்களுக்கான ஆயத்தமும், தொடக்கமும் (அதி. 3,4).
- இராஜ்யத்தின் அரசியல் அமைப்பு (அதி.5-7)
- மேசியா நிகழ்த்திய வல்லமையும் கிருபை நிறைந்த அற்புதங்களும், அவற்றால் விளைந்த பல்வகை எதிர்ச்செயல்களும் (8:1-9:34)
- மேசியா – அரசரின் திருத்தூதுவர் இஸ்ரவேலுக்கு அனுப்பப்படுதல் (9:35-10:42)
- எதிர்ப்பும் மறுப்பும் பெருகுதல் (அதி. 11,12)
- இஸ்ரவேல் புறக்கணித்ததன் காரணமாக இடைக்கால அரசு முறைமையை அரசர் அறிவித்தல் (அதி. 13)
- மேசியாவின் இடையறாத கிருபை கடும் எதிர்ப்பை எதிர்கொள்ளுதல் (14:1-16:12)
- அரசர் தமது சீடரை ஆயத்தப்படுத்துதல் (16:13-17:27)
- சீடர்களுக்கு அரசர் அறிவுரை வழங்குதல் (அதி. 18-20)
- அரசராக அறிமுகப்படுத்துதலும், புறக்கணிக்கப்படுதலும் (அதி. 21-23)
- அரசரின் ஒலிவமலைச் சொற்பொழிவு (அதி. 24,25)
- அரசின் பாடுகளும் மரணமும் (அதி. 26, 27)
- அரசரின் வெற்றி (அதி. 28)