விசுவாசிகளின் வேதாகம விளக்கவுரை
புதிய ஏற்பாடு முதல் பகுதி – நற்செய்தி நூல்கள்
ஆசிரியர் : வில்லியம் மெக்டொனால்டு
தமிழாக்கம் : இரா. மாணிக்கவாசகம்
இந்நூலாசிரியர் திரு. வில்லியம் மெக்டொனால்டு (1917-2007) அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள புதிய இங்கிலாந்தில் பிறந்தவர். ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் (Harward Business School) வணிகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்து, இராண்டாம் உலகப்போர் முடியும்வரை பணியாற்றினார். பின்னர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பணிக்கான அழைப்பைப் பெற்ற இவர், வெற்றிவாய்ப்பு மிகுந்த தனது இவ்வுலக அலுவலைத் துறந்தார்.
கர்த்தருடைய ஊழியத்தில் தன்னை முற்றிலும் ஈடுபடுத்திக்கொண்ட மெக்டொனால்டு உலகெங்கும் பயணம் மேற்கொண்டு இறைபோதகராகவும், சுவிசேட பிரசங்கியாராகவும், ஆசிரியராகவும் பணியாற்றி கிறிஸ்துவின் மேன்மையைப் பறைசாற்றினார். இவர் எம்மாவு வேதாகமக் கல்லூரியின் தலைவராகச் சில ஆண்டுகள் பணியாற்றி, பல அஞ்சல்வழி வேதபாடப் புத்தகங்களையும் எழுதினார். திரு. ஜீன் கிப்ஸன் என்பாருடன் இணைந்து “சீடத்துவப் பயிற்சி”முறையைக் கலிபோர்னியாவில் உள்ள சான்லியானஹோவில் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் எண்ணற்றோர் பயனடைந்து இறைஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
55 ஆண்டுகளுக்கு மேலாக இறைப்பணியாற்றிய இவர் தனது பெரும்பாலான நேரத்தை எழுத்துப் பணியில் செலவிட்டார். சிறந்த இறையியல் போதகராகிய திரு. மெக்டொனால்டு, 84 நூல்களை எழுதியுள்ளார். திருமறையை ஆழ்ந்து கற்று, அதனுடன் அதிக நேரத்தைச் செலவிட்ட இவரது எழுத்துக்கள் சுருக்கமாகவும், தெளிவாகவும் அமைந்துள்ளன.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து தூய திருமறையில் இவ்வாறு காண்கிறோம். “அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன் அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்” (1 யோவான் 2:6). இவ்வசனத்திற்கு விளக்கம் கொடுக்கும் இந்நூலாசிரியர், “இயேசுவின் வாழ்க்கை, சுவிசேட நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்குமாப்போல், நம்மனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது. இத்தகைய வாழ்க்கையை நாம் நமது சொந்த சக்தியினாலோ முயற்சியினாலோ வாழ்ந்துகாட்ட முடியாது.
தூய ஆவியானவரின் வல்லமையினால் மட்டுமே இது சாத்தியமாகும். எத்தகைய தடையுமின்றி நமது வாழ்க்கையைக் கர்த்தருக்கு முற்றுமுடிய ஒப்புவித்து நம்மிலும், நம்மூலமாகவும் அவர் வாழ்வதற்கு இடங்கொடுக்க வேண்டும்.” இவ்வுண்மை திருவாளர் வில்லியம் மெக்டொனால்டு வாழ்க்கையில் உண்மையாக விளங்கிற்று.
கர்த்தர் இவரை 2007 -ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று தம்மண்டை அழைத்துக்கொண்டார். வணிகத் துறையில் தன் வாழ்க்கையைத் தொடங்கின இவர், இவ்வுலகச் செல்வங்கள் ஒன்றையும் சேர்த்துவைக்கவில்லை. தனக்குரிய அனைத்தையும் தேவையுள்ளவர்களுக்கு அவர் தாராளமாகக் கொடுத்துவந்தார். அவர் விட்டுச் சென்ற உலகச் செல்வங்கள் ஒன்றுமில்லை. ஆனால் அவர் எழுதிய நூல்கள் இன்று நம்மிடையே இருக்கின்றன. அவை இன்று ஏறத்தாழ 100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல்வேறு மக்களிடையே பேசி, உணர்த்தி வருகின்றன. அவருடைய முன்மாதிரியும் நமக்கு அறைகூவலாக உள்ளது.
குறிப்பு: வில்லியம் மெக்டொனால்டு அவர்களுடைய நூற்கள் தொடர்ந்து பல மொழிகளில் திருப்பப்பட்டு வருகின்றன. அவருடைய நூற்களைப் பற்றியும், மொழிபெயர்ப்பு விவரங்களைப் பற்றியும் அறிய www. william-macdonald.org என்ற இணையதளத்தைக் காணவும்.
“இந்த எழுத்தோவியங்களின் வரலாறு மற்றும் ஆன்மீகச் சிறப்பு, இவற்றின் அளவு மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொருத்ததாயிராமல் அளவிடற்கரியதாய் ஓங்கி விளங்குகிறது. மேலும் இந்நூல்கள் மனிதனின் வாழ்விலும் வரலாற்றிலும் கணக்கிடக்கூடா தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏதேனில் பொழுது புலர்ந்த நாளின் நண்பகலாய் இந்நூல்கள் காட்சியளிக்கின்றன. பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட கிறிஸ்து, நற்செய்தி நூல்களில் வரலாற்றுக் கிறிஸ்துவாகவும், திருமடல்களில் அனுபவங்களின் கிறிஸ்துவாகவும், வெளிப்படுத்தின விசேஷத்தில் மகிமையின் கிறிஸ்துவாகவும் காட்சி தருகிறார்.”
W. கிரகாம் ஸ்கிரோஜி
1.“புதிய ஏற்பாடு” என்னும் பெயர்
ஆழ்கடல்போல் திகழும் புதிய ஏற்பாட்டைக் கற்றிடத் தொடங்குமுன் அல்லது அப்புதிய ஏற்பாட்டில் ஒரு சிறு நூலைப் படிக்கத் தொடங்கு முன் இந்தப் புனிதமான நூலின் இன்றியமையா பொது உண்மைகள் சிலவற்றைச் சுருக்கமாகக் காண்பது நமக்கு மிகுதியான நற்பயனைத் தரும்.
‘டியாதெகே’ ((Diatheke) என்னும் கிரேக்கச் சொல், தமிழில் ‘சாசனம்’ என்றும் ‘உடன்படிக்கை’(ஏற்பாடு) என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எபிரெய மடலில் ஓரிரு இடங்களில் இந்தக் கிரேக்கச் சொல்லுக்கு மொழிபெயர்ப்பாக எந்தத் தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துவது என்பதை ஆராய்ந்தால் அது சர்ச்சைக்குரியதாகவே காணப்படும். கிறிஸ்தவ வேதநூலின் தலைப்பாக‘ஏற்பாடு’ என்னும் சொல் உடன்படிக்கை என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானதே ஆகும். ஏனெனில் தேவனுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையே விளங்கும் ஒப்பந்தமாகவும், ஏற்பாடு அல்லது உடன்படிக்கையாகவும் வேதாகமம் திகழ்கிறது.
முந்தின அல்லது பழைய ஏற்பாட்டிலிருந்து (உடன்படிக்கை) வேறுபடுத்திக் காட்டும்வண்ணம் இந்நூல் புதிய ஏற்பாடு எனப் பெயர் பெற்றது.
இரண்டு ஏற்பாடுகளும் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டவையே ஆகும். ஆகவே அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் இவையிரண்டும் பயனுள்ளவை. ஆயினும் நம்முடைய கர்த்தரைப் பற்றியும்> அவருடைய சபையைப் பற்றியும், தமது சீடர்கள் எங்ஙனம் வாழவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பது பற்றியும் சொல்லக்கூடிய வேதபகுதியைக் கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசி அவ்வப்போது திருப்புவது இயல்பானதே.
பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையேயுள்ள உறவைப் பற்றி இரத்தினச் சுருக்கமாகத் திருவாளர் அகஸ்டின் கூறியதாவது:
பழைய ஏற்பாட்டில் புதியது மறைபொருளாய்த் திகழ்கிறது.
2. அதிகாரபூர்வமான புதிய ஏற்பாட்டுத் தொகுப்பு
புதிய ஏற்பாட்டில் பழையது பளிச்சென்று வெளிப்படுகிறது. அதிகாரபூர்வமானது (கிரேக்கு-Kanon) என்னும் சொல் ஒன்றை அளவிடும் அல்லது மதிப்பிடும் விதிமுறையைச் சுட்டிக்காட்டுகிறது. அதிகாரபூர்வமான புதிய ஏற்பாட்டுத் தொகுப்பு எனப்படுவது தேவ ஆவியினால் ஏவப்பட்டு இயற்றப்பட்ட சில நூல்களின் தொகுப்பேயாகும். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்கள் மட்டும் தான் அதிகாரபூர்வமானவை என்று எவ்வாறு சொல்ல முடியும்? அல்லது இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இருபத்தேழு நூல்களும் அதிகாரபூர்வமானவை என்று உறுதியாகச் சொல்லமுடியுமா? தொடக்க காலத்தில் வேறு கிறிஸ்தவநூல்களும் மடல்களும் இயற்றப்பட்டிருந்தன. (சில நூல்கள் மாறுபட்ட கோட்பாடுகளைப்போதிக்கிறவையாக இருந்தன.) ஆகவே புதிய ஏற்பாட்டுத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நூல்கள் மட்டுமே அதிகாரபூர்வமானவை என்று எவ்வாறு உறுதியாகச் சொல்ல முடியும்? கி. பி. நான்காவது நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற கிறிஸ்தவ ஆட்சிக் குழுக் கூட்டத்தில் அதிகாரபூர்வமான தொகுப்பு உறுதிப்படுத்தப்பட்டது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. உண்மையில், அந்த நூல்கள் எழுதப்பட்டவுடனேயே அதிகாரபூர்வமானவை என்னும் நிலையை அடைந்துவிட்டன. தேவபக்தியுள்ளவர்களும் பகுத்துணரும் ஆற்றல் உள்ளவர்களுமாகிய சீடர்கள் தேவ ஆவியின் ஏவுதலால் இயற்றப்பட்ட வேத நூல்களை அதிகாரபூர்வமானவை என்று தொடக்கத்திலேயே அறிந்துகொண்டனர். பவுல் இயற்றிய நூல்கள் அதிகாரபூர்வமானவை என்று பேதுரு அறிந்து கொண்டார் (2 பேதுரு 3:15,16). ஆயினும் யூதா, 2 யோவான் மற்றும் 3 யோவான் போன்ற நூல்களைப் பற்றி சில சபைகளில் கருத்து வேறுபாடு நிலவியது.
மத்தேயு, பேதுரு, யோவான் மற்றும் பவுல் ஆகிய அப்போஸ்தலர்களாலும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மாற்கு, லூக்கா போன்றவர்களாலும் இயற்றப்பட்ட நூல்கள் அதிகாரபூர்வமானவை என்று ஐயத்திற்கு இடமற்ற வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பொதுவாக பற்பல ஆண்டுகளாக அதிகாரபூர்வமானவை என்று கருதப்பட்டு வந்த நூல்களையே, கிறிஸ்தவ ஆட்சிக் குழு அதிகாரபூர்வ தொகுப்பு என்று உறுதிப்படுத்தியது. தேவ ஆவியின் ஏவுதலால் வேதநூல் வரிசையை உண் டாக்கவில்லை. மாறாக தேவ ஆவியின் ஏவுதலால் இயற்றப்பட்ட நூல்களை அந்த ஆட்சிக் குழு வரிசைப்படுத்தியது.
3. நூல்கள் இயற்றப்பட்ட விதம்
புதிய ஏற்பாட்டை இயற்றிய தெய்வீக எழுத்தாளர் தூய ஆவியானவரே ஆவார். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், பவுல், யாக்கோபு, பேதுரு, யூதா மற்றும் எபிரெய மடலின் பெயர் அறியப்படா நூலாசிரியர் (எபிரெய நூலின் முன்னுரையைக் காண்க) ஆகியோரை எழுதும்படி ஏவியவரும் அவரே. புதிய ஏற்பாட்டு நூல்கள் எவ்வாறு இயற்றப்பட்டன என்னும் கேள்விக்குச் சிறப்பானதும் சரியானதுமான விடையை அறிய முதலாவது “இருமை ஆசிரியத்துவத்தை “ (dual authorship) நாம் புரிந்துகொள்ள வேண்டும். புதிய ஏற்பாடு, ஒருபகுதி மனிதத் தன்மையும் மறுபகுதி தெய்வீகத் தன்மையும் உடையதன்று. மாறாக, அது ஒரே நேரத்தில் முழுவதும் மனிதத் தன்மையும், முழுவதும் தெய்வீகத் தன்மையும் உடையதாகும். அது எழுதப்பட்டபோது மனித ஆற்றல் எவ்விதத் தவறையும் செய்துவிடாதபடி தெய்வீக ஆற்றல் தடுத்து அதனைக் காத்துக்கொண்டது. அதன் விளைவாக எவ்விதத் தவறும் குறையும் இல்லாத கையெழுத்தினால் ஆன மூலநூல் உருவாயிற்று.
“ஜீவ வார்த்தை” என்னும் பெயருடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இருமை இயல்பு எழுதப்பட்ட திருமறைக்குச் சிறந்த ஒப்புமையாகத் திகழ்கிறது. அவர் ஒரு பங்கு தேவனும் ஒரு பங்கு மனிதனும் அல்லர். அத்தகைய பாத்திரங்களை நம்மால் புராணங்களில் மட்டுமே காணவியலும். அவர் ஒரே நேரத்தில் முழுமையான தேவனும் முழுமையான மனிதனுமாகத் திகழ்ந்தார். தமது மனித இயல்பில் அவர் எவ்விதத் தவறும் பாவமும் இல்லாதிருக்க, அவருடைய தெய்வீக இயல்பே காரணமாக இருந்தது.
4. எழுதப்பட்ட காலம்
பழைய ஏற்பாடு ஏறத்தாழ ஓராயிரமாண்டுக் காலத்தில் (கி. மு. 1400 – கி. மு. 400) இயற்றப்பட்டது. அதுபோலன்றி புதிய ஏற்பாடு அரைநூற்றாண்டுக் காலத்தில் (கி. பி. 50 – கி. பி. 100) எழுதப்பட்டது.
இப்பொழுது புதிய ஏற்பாட்டு நூல்கள் தொகுக்கப்பட்டுள்ள வரிசை முறைமை, சபையின் எல்லாக் காலத்திற்கும் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது. கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றோடு தொடங்கும் நூல்> அதனைத் தொடர்ந்து சபையைப் பற்றி விளக்கிக் கூறுகிறது. அதனைத் தொடர்ந்து சபைக்குத் தேவையான அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இறுதியில் சபை மற்றும் உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றிய செய்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூல்கள் யாவும் எழுதப்பட்ட கால வரிசையில் ஒழுங்குபடுத்தப்படவில்லை. மாறாக> ஒவ்வொரு நூலும் அதனதன் தேவை ஏற்பட்ட காலத்தில் இயற்றப்பட்டது.
திருமடல்களே காலவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கின்றன. இந்த மடல்களே, “இளம் சபைகளுக்கு எழுதப்பட்டவை” என்று திருவாளர் பிலிப்பு என்பார் பெயர் சூட்டி அழைக்கிறார். யாக்கோபு, கலாத்தியர் மற்றும் தெசலோனிக்கேயர் ஆகிய மடல்களே முதலில் எழுதப்பட்டவை. முதல் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் அதாவது கி.பி. 50 -ஆம் ஆண்டின் அண்மையில் இவை இயற்றப்பட்டன.
அவற்றைத் தொடர்ந்து நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டன. மத்தேயு அல்லது மாற்கு முதலிலும், லூக்கா அவற்றைத் தொடர்ந்தும், இறுதியில் யோவானும் எழுதப்பட்டன. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் கடைசியாக வெளிப்படுத்தின விசேஷம் நூலாக மலர்ந்தது.
5. புதிய ஏற்பாட்டின் பொருளடக்கம்
புதிய ஏற்பாட்டின் பொருளடக்கத்தைக் கீழ்க் கண்டவாறு சுருங்கக் கூறலாம்:
வரலாற்று நூல்கள்
நற்செய்தி நூல்கள்
அப்போஸ்தல நடபடிகள்
திருமடல்கள்
பவுல் எழுதிய மடல்கள்
பொதுவான மடல்கள்
திருவெளிப்பாடு
வெளிப்படுத்தின விசேஷம்
இந்நூல்கள் பற்றிய ஆழ்ந்த அறிவுபெறும் கிறிஸ்தவன், “எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாக” விளங்குவான்.
அவ்வாறு விசுவாசிகள் யாவரும் சிறந்த அறிவைப் பெறுவதற்கு இந்த விசுவாசிகளின் வேதாகம விளக்கவுரை பயன்பட வேண்டுமென்பது எங்களது மன்றாட்டாகும்.
6. புதிய ஏற்பாட்டின் மொழிநடை
அன்றைய காலத்துப் பேச்சு மொழியாகத் திகழ்ந்த “கொய்னே” என்னும் கிரேக்க மொழியில் புதிய ஏற்பாடு எழுதப்பட்டது. இக்காலத்தில் ஆங்கிலம் உலகப் பொதுமொழியாகப் பயன்படுவது போன்று, கிறிஸ்தவ விசுவாசத்தின் முதல் நூற்றாண்டில் உலகமெங்கும் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது பொதுமொழியாக இந்த கிரேக்கமொழி திகழ்ந்தது.
பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள், பாடல்கள் மற்றும் வரலாற்று நூல்கள் யாவும் எங்ஙனம் இனிமையும் அழகும் மிளிர்ந்த எபிரெய மொழியில் மிகப் பொருத்தமான முறையில் வரைந்து தரப்பட்டுள்ளனவோ, அதுபோலவே புதிய ஏற்பாட்டை செவ்வனே எழுதித்தர கிரேக்கமொழி வியத்தகு ஊடகமாக அருளப்பட்டது. அலெக்சாண்டர் மாமன்னன் தனது பேரரசைப் போர்களில் அடைந்த வெற்றியின் மூலம் உலகெங்கிலும் விரிவாக்கம் செய்தான். அவனுடைய போர்வீரர்கள் கிரேக்க மொழியை எளிதாக்கி பொது மக்கள் யாவரும் பேசும்படி பிரபலமாக்கினார்கள்.
கிரேக்க மொழியின் வழுவாத இலக்கணம், சொல்வளம் மேலும் பற்பல சிறப்புகள் யாவும் ரோமருக்கு எழுதிய மடல் போன்ற அருமையான புதிய ஏற்பாட்டு நூல்களின் வாயிலாக இறைமெய்ம்மைகளை எடுத்தியம்ப சீரிய நிலையில்உதவியுள்ளன.
“கொய்னே” (koine) கிரேக்கம் செம்மொழியாகக் கருதப்படக் கூடாதெனினும் அது “கொச்சையான பேச்சு மொழியோ”, சிறிதளவும் இலக்கிய நயம் அற்றதோ அன்று. புதிய எற்பாட்டின் சிலபகுதிகள், எடுத்துக்காட்டாக எபிரெயர், யாக்கோபு, 2 பேதுரு ஆகிய நூல்கள் இலக்கிய நயம் கொண்டவை. மேலும், லூக்கா சில இடங்களில் செம்மொழி நடையைக் கையாண்டுள்ளார். அதுபோல பவுலும் சில பகுதிகளை அழகுற மொழிந்துள்ளார் (எ.கா. 1 கொரி. 13:15).
7. புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்புகள்
ஆங்கில மொழி, பற்பல வேதாகம மொழி பெயர்ப்புகளைப் பெற்று நற்பேறு பெற்றுள்ளது!
இம்மொழி பெயர்ப்புகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:
1. சொல்லுக்குச் சொல் நேரடி மொழிபெயர்ப்புகள்
J. N. டார்பி 1871 -ல் வெளியிட்ட “New Translation”, 1881 -ல் வெளிவந்த Revised Version அதனுடைய அமெரிக்க வெளியீடாகிய American Standard Version (1901) ஆகியவை சொல்லுக்குச் சொல் நேரடி மொழிபெயர்ப்புகளாகும். வேதாகமத்தைக் கற்க இவை பெரிதும் உதவியபோதிலும் ஆராதனைக்கும், பொது இடங்களில் படிப்பதற்கும், மனப்பாடம் செய்வதற்கும் உகந்தவை அல்ல. ஆகவே பெரும்பாலான கிறிஸ்தவர்கள் மாட்சியும் அழகும் மிக்க KJV மொழிபெயர்ப்பை விடாமல் பற்றிக்கொண்டுள்ளனர்.
2. முழுவதும் இசைவான மொழிபெயர்ப்புகள்
எபிரெயம் மற்றும் கிரேக்கம் ஆகிய மொழிச்சொற்களுக்கு ஒத்த ஆங்கிலச் சொற்களைப்பயன்படுத்தும் இந்த மொழிபெயர்ப்புகள் தேவையான இடங்களில் ஆங்கில மொழிக்குரிய வழக்குச் சொற்களையும் மொழிநடைகளையும் ஆங்காங்கே கையாண்டுள்ளன. இவற்றுள் KJV, RSV, NASB, NKJVஆகியவை அடங்கும். RSV மொழி பெயர்ப்பு புதிய ஏற்பாட்டு மொழி பெயர்ப்பைபொருத்தவரை நம்பத்தகுந்ததாக இருப்பினும், பழைய ஏற்பாட்டில் காணப்படும் மேசியாவைக்குறித்த தீர்க்கதரிசனப் பகுதிகளில் கருத்துச் சிதைவுக்கு இடம் கொடுத்துள்ளது. தற்காலத்தில் சில வேத அறிஞர்களும் இம்முறையைக் கையாளுவது ஆழ்ந்த வருத்தத்திற்குரியதாகும்.
விசுவாசிகளின் வேதாகம விளக்கவுரையின் ஆங்கிலப் படைப்பு NKJV மொழிபெயர்ப்பை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. ஏனெனில் அந்த மொழிபெயர்ப்பில் KJV -இன் அழகும், இன்றைய கால ஆங்கிலத்தின் எளிமையும் ஒருங்கே இணைந்து மிளிர்ந்துள்ளன. பல புதிய மொழிபெயர்ப்புகளில் விடுபட்ட பல வசனங்களும் சொற்களும் NKJV மொழிபெயர்ப்பில் இடம் பெற்றுள்ளன. தமிழில் பவர் மொழி பெயர்ப்பு முழுவதும் இசைவான மொழிபெயர்ப்பு வகையைச் சேர்ந்ததாகும்.
3 . ஆக்கப்பூர்வமான மொழிபெயர்ப்புகள்
இவ்வகை மொழிபெயர்ப்புகள் முழுவதும் இசைவான மொழிபெயர்ப்புகளைக் காட்டிலும் சுதந்தரமான மொழிநடையைப் பின்பற்றுகின்றன. சில இடங்களில் பொழிப்புரையாக வேத பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதனைப் படிப்போர் கவனத்தோடு படிக்கவேண்டியது அவசியம். Moffatt Translation, NEB, NIV, Jerusalem Bible ஆகியவை இந்த வகுப்பைச் சார்ந்தவை. தற்காலத்தில் பவுலும் யோவானும் ஆங்கிலத்தில் தங்களுடைய எண்ணங்களை எழுதியிருந்தால் எவ்வாறு எழுதியிருப்பார்கள் என்று கருதி மொழிபெயர்க்கப்பட்டவையே இவை. கவனத்தோடு படிப்பவர்களுக்கு இந்த மொழிபெயர்ப்புகள் நல்ல பயன்தரும்.
4. பொழிப்புரைகள்
வேத பகுதிகளின் கருத்துக்களை ஒன்றன்பின் ஒன்றாக வரைந்தளிக்கும் முறையை இவ்வகை மொழிபெயர்ப்புகள் கையாளுகின்றன. கருத்துகளைத் தெளிவாகச் சொல்லும் பொருட்டு இவ்வகை மொழிபெயர்ப்புகளில் ஏராளமான சொற்கள் தங்குதடையின்றி சேர்க்கப்பட்டுள்ளன. மூலமொழியிலிருந்து மிகவும் மாறுபட்ட சொற்களை இவ்வகை மொழிபெயர்ப்புகள் பின்பற்றியிருப்பதால் இவற்றைக்கொண்டு விளக்கம் அளிப்பதில் மாறுபட்ட கருத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எடுத்துக்காட்டாக The Living Bible நற்செய்தி வழங்குவதைக் கருத்திற்கொண்டு மொழிபெயர்க்கப்பட்டது. சர்ச்சைக்குரிய பல மாறுபட்ட கருத்துகள் இதில் அடங்கியுள்ளன.
J.B.Phillips எழுதிய பொழிப்புரை (அவர் இதனை மொழிபெயர்ப்பு என்றே சொல்லுகிறார்) இலக்கிய நயம் படைத்தது. பவுலும் பேதுருவும் என்ன நினைத்து எழுதியிருப்பார்கள் என்று பிலிப்பு நம்பினாரோ அவற்றையே தாம் எழுதியிருப்பதாக அவர் கூறுகிறார்.
மேற்கூறிய மொழிபெயர்ப்பு வகைகளில் ஒவ்வொரு வேதாகமத்தை வாங்கி ஒப்பிட்டுப்பார்ப்பது நன்மை பயக்கும். எனினும் முழுவதும் இசைவான மொழிபெயர்ப்பு வேத ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அத்தகைய மொழிபெயர்ப்பைச் சார்ந்தே இந்த விளக்கவுரை எழுதப்பட்டுள்ளது.
தொடரும்…