ரோ.8:1-11
மாம்ச சிந்தை என்றால் பவுல் குறைவுகள் நிறைந்த மனித இயல்பு என்ற பொருளில் எழுதுகின்றார். நம் கண்ணோட்டம் தேவன் சிந்திப்பதுபோல் நோக்கு உடையதாய் உள்ளதா அல்லது எல்லோரைப்போல் உலகைச் சார்ந்ததாக உள்ளதா? கிறிஸ்துவின் மீட்புச் செயல் நம்மில் இருந்த குற்ற உணர்வை நீக்கி விட்டது. இது துவக்கம். இங்கு திருப்தி அடையாமல், நாம் புத்தியுள்ளவர்களாகத் தொடர்ந்து கட்டுவோம். கடைசி மட்டும், ஆண்டவர் வருமளவும். உருவாகவேண்டியது ஆவிக்குரிய சிந்தை, ஆவியின் பண்பு. ஆவியானவரால் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வு, இது கிறிஸ்துவை மையமாகக் கொண்டது. கடவுளை முன்னிட்ட வாழ்வு என்றும் கூறலாம். நம்மிடம் உள்ளதோ உலக (மாம்ச) சிந்தை. இப்புது வாழ்வு தேவனின் வாக்கும் வரமும் ஆகும். உலகக் கண்ணோட்டமும் ஆவிக்குரிய மனப்பாங்கும் எதிரெதிராய் உள்ளன. நாம் இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்றிருக்க முடியாது. ஆவியானவர் நம்மில் நிறையும்படித் தேவனுக்கென்று தீர்மானம் செய்வோம். சாத்தானிடம் ‘நான் கிறிஸ்துவின் சொந்தம்” என்போம். வெற்றி நமதே!