முன்னுரைப்பு: ஏசாயா 35:4-6
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள். இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான். ஊமையன் நாவும் கெம்பீரிக்கும். வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
ஏசாயா 42:6
நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், ..
நிறைவேறுதல்:
இயேசு கிறிஸ்து தமது ஊழியத்தில் வியாதியஸ்தரைச் சுகப்படுத்தியதும், பிசாசு பிடித்திருந்தவர்களைச் சுகப்படுத்தியதும் எண்ணிக்கைக்கு அடங்காததாக இருந்தது. அவர் மனதுருகி தம்மிடத்தில் வந்த எல்லா வியாதிக்காரருக்கும் சுகத்தைக் கட்டளையிட்டார். அவருக்கு விரோதிகளாயிருந்த ஆசாரியர்களும், பரியேசரும் அவரைப்பற்றி, நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே நாம் இவனை இப்படி விட்டுவிட்டால் எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள் (யோ.11:47-48) என்று இயேசு அற்புதங்களைச் செய்தார் என்று சாட்சி கொடுத்து அவரைக் கொலை செய்ய வகைதேடினார்கள் என்று வேதம் கூறுகிறது.
மத்தேயு 9:35
பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
இவ்விதமாய் ஏசாயாவின் மூலமாய் ஆண்டவர் 700 வருடங்களுக்கு முன் முன்னுரைத்தது கிறிஸ்துவில் நிறைவேறியது.