ஆக்கில்லா பிரிஸ்கில்லா
(அப் 18, ரோம 16:3-5, 1கொரி 16:19, 2தீமோ 4:19)
இவர்கள் இருவரும் எப்பொழுதும் இணைத்தே பேசப்படுகின்றனர். பொந்து தேசத்தைச் சார்ந்த ஆக்கில்லா குடிபெயர்ந்த யூதராக கருதப்படுகிறார். பிரிஸ்கில்லா பெரும்பாலும் ரோமப் பெண்ணாக இருக்க வேண்டும். கூடாரப் பணி செய்து வாழ்ந்து வந்தார்கள். பவுல் இவர்களை தமது இரண்டாம் மிஷனரிபணி பயணத்தின்போது கொரிந்தில் சந்தித்தார். அப்போது அவர்கள் கிலவுதியு ராயனின் கட்டளையால் ரோமிலிருந்து வெளியேற்றப்புட்டவர்களாக இருந்தனர். தங்கள் கூடார வாழ்வை கூடாரப் பணி செய்து செலவிட்டனர். பவுலுக்கு தங்கள் இல்லத்தைப் பரிவுடன் திறந்தனர். பரிசுத்த வசனத்தால் மறுபடிப்பிறந்தனர். பிற்கால வாழ்வைத் தொண்டுடன் தொடர்ந்தனர். பவுலும் இவர்களுடன் கூடாரப் பணியைச் செய்துகொண்டே வேதத்தின் மகத்துவங்களை விளம்பினார். கற்றவற்றை வாழ்வில் காட்டினர். எபேசுவில் வைத்து, வாக்கு வலிமை மிக்க அப்பொல்லோவின் பிரசங்கப் பொருளில் பூரணமின்மையைப் புரிந்துகொண்டு தேவ குமாரனின் பூரண வெளிப்பாட்டை அவருக்கு விரிவாக எடுத்துக் கூறினர்.
விளைவு – வாக்கு வலிமை மிகுந்த பிரசங்கி ஒருவர் வாழ்கை மாற்றம் பெற்றார். பலரை வார்த்தையால் மாற்றப் புறப்பட்டார்.
சென்றவிடமெங்கும் இவர்கள் வாய் மூடியிருக்கவில்லை. சுவிசேஷ இல்லங்களாக அவர்கள் வீடுகள் விளங்கின. கொருந்திலும் எபேசுவிலும் பின்பு ரோம புரியிலும் அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் சபைகள் நடந்திருக்க வேண்டும். இருவரும் ஒருமித்து கூடாரப்பணி செய்தனர். தேவனுக்காக சபைக் கூடாரங்களையும் செய்தனர். ஒரு சிறந்த ஆன்மீக குழு இருவரால் நடைபயின்றது எனலாம். விளைவாக பல இடங்கள் சுவிசேஷத்தை அறிந்தன. சபைகள் உருவாயின.
செழிமையான இல்லமும் சிறப்பான சுவிசேஷப்பணியும் அவர்களால் நடைபெற்றன. உழைத்துப் பிழைத்தவர்கள் ஊழியம் செய்துகொண்டே ஊழியரையும் தாங்கினர். சுவிசேஷத்திற்காக பவுலுடன் கரங்கோர்த்து நின்ற இந்த உடன் வேலையாட்கள் சுவிசேஷத்திற்காக தலைகளைக் கொடுக்கவும் தயாராக இருந்தனர்.
* சிறந்த விசுவாசத் தம்பதிகள் சிறப்பான சுவிசேஷகர்களாக மிளிரமுடியும்.
* தேவஈவாகக் கொடுக்கும் இல்லத்தை தேவஈவான சுவிசேஷ பரப்பக்கருவியாகப் பயன்படுத்தவேண்டும்.
* உலக குடும்பவாழ்க்கை என்பது தற்காலிகக் கூடாரம், அதனை உலகில் தேவ சபையாய் கூடாரம் செய்யப்பயன்படுத்தவேண்டும்.
* உழைத்துக்கொண்டே ஊழியம் செய்து ஊழியர்களைத் தாங்க முடியும்.
* கிறிஸ்த குடும்ப வாழ்க்கையென்பது தனிமை, தீவு வாழ்க்கையல்ல, அது தேவ பிள்ளைகளில் ஐக்கியத்தால் நிறைந்தது.
* விருந்தோம்பல் மூலம் சுவிசேஷ விருந்தைப் பங்குவைக்க முடியும்.
*சரியான அடிப்படையுடன் வேதத்தைக் கற்றுக் கொண்டால், பிரசங்கிப்போரை விடவும் அதிக வசன ஞானமுடன் விளங்க முடியும்.
* தேவைப்பட்டால் சுவிசேஷத்திற்காக தலையை விலையாகக் கொடுக்கவும் விசுவாச குடும்பமாக துணிந்து நிற்கவேண்டும்.