April

ஏப்ரல் 1

ஏப்ரல் 1

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் (யோபு 13:15).
ஏனென்றால் நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன் (2.தீமோ.1:12).

கடலிலுள்ள என் கப்பல்கள் யாவும் பாய்மரம் உடைந்து,
அழிந்து திரும்பினும், நான் சந்தேகியேன்.
என்னை ஒருபோதும் கைவிடாது, தீமையிலிருந்து
நன்மை வரச் செய்யும் கரத்தை நான் நம்புவேன்.
பாய்மரம் உடைந்ததற்காகா நான் அழுதாலும்,
என் நம்பிக்கை சிதறிக் கிடக்கும் வேளையிலும்,

உம்மை நம்புவேன் என்பேன்
வெள்ளை சிம்மாசனத்திலிருந்து
விடையின்றித் திரும்பினும் நான் சந்தேகியேன்
எல்லாம் அறிந்த அன்பே நான் விரும்பும்
காரியங்களைக் கொடாதிருக்கிறது என்று நம்புவேன்.

சிலவேளை துக்கப்படாதிருக்க முடியாவிட்டாலும்,
என் உறுதியான நம்பிக்கையின் தீபம்
மங்காது எரிந்து கொண்டிருக்கும்.

துக்கங்கள் மழைபோல் பெய்தாலும்
தேனீக்கள்போல் கஷ்டம் சூழ்ந்தாலும் சந்தேகியேன்
நான் சேர விரும்பும் உயரத்திற்கு
வேதனையின்றிச் சேரமுடியாது என்று நம்புகிறேன்.
என் சிலுவையின்கீழ் நான் வருந்தித் திகைத்தாலும்
என் பெரும் கஷ்டங்களிலும் மிகுந்த
நன்மை உண்டென்று நான் காண்பேன்.

விசுவாச நங்கூரம் பாய்;சி இருக்கையில் – என்
உள்ளங் கப்பல் எந்தக் காற்றிற்கும் அசையாது
முன் அறியாத மரணக் கடலையும் கடக்க,
நடுங்காத பலத்த தைரியமுண்டு.
உடலிலிருந்து உயிர்பிரியினும்
உலகம் கேட்கத்தக்கதாய்
நான் சந்தேகிக்கவில்லை என்பேன்.

ஒரு வயது முதிர்ந்த மாலுமி, கடும் புயல் விசுகையில் நாம் ஒரே ஒரு காரியம்தான் செய்யவேண்டும். அதாவது கப்பலை ஒரு நிலையில் நிறுத்தி அதை அங்கேயே நிற்கச் செய்யவேண்டும் என்றார்.

கிறிஸ்தவனே! இதுவே நீ செய்ய வேண்டிய காரியம். சில வேளைகளில் பவுலைப்போல நீ சூரியனையாவது, நட்சத்திரங்களையாவது பார்க்கக்கூடாதிருக்கலாம். பெரிய புயல் உன் மீது வீசலாம். அப்பொழுது நீ ஒரே காரியம் மாத்திரம் செய்யலாம். ஒரே ஒரு வழிதான் உண்டு.
அறிவு உனக்கு உதவாது, கடந்த காலத்து அனுபவங்களும் அதற்குப் பயன்படா. ஜெபத்திலும்கூட நீ ஆறுதல் காணமாட்டாய். ஒரே ஒரு வழி மாத்திரம் உண்டு. உன் ஆத்துமாவை ஒரு நிலைக்குக் கொண்டுவந்து அந்நிலையிலேயே அதை இருக்கச் செய்யவேண்டும்.

நீ தேவனில் நிலைத்திருக்கவேண்டும். எது வந்தாலும் வரட்டும். காற்றோ, அலைகளோ, முறுக்கும் கடல்களே, இடியோ, மின்னலோ, உயர்ந்த பாறைகளோ, மோசம் எதுவானாலும் சரி, பாய்மரத்தில் உன்னைக் கட்டிக்கொண்டு தேவனின் உண்மை, உடன்படிக்கை, கிறிஸ்துவுக்குள் உள்ள மாறாத அன்பு இவைகளின் மேலுள்ள நம்பிக்கையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்.