July

யூலை 17

யூலை 17

அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார் (சங்.23:2).

நம்முடைய தேவனும், ஆண்டவருமானவர் சகலத்தையும் ராஜரீகம்பண்ணுகிறவர் மாத்திரமல்ல. அவரே உலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவர். நியாயந்தீர்க்கிறவரும் அவரே! எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தமது ஜனங்களை மேய்க்கும் நல்ல மேய்ப்பனாகவும் இருக்கிறார். அவர் வானங்களுக்கு மேலாக உன்னதனமான இடத்தில் வாசம் செய்கிறது மாத்திரமல்ல, தாழ்மையும் நொறுங்குண்டதுமான மனித உள்ளங்களில் அவர் வாசம்பண்ணுகிறவராயும் இருக்கிறார். ஆடுகளைப்போல் நாமெல்லாரும் வழிதப்பிப் போனோம். நாம் இன்று அவருடைய வழியில் திரும்பிவந்திருக்கிறோம், மந்தையின் பிரதான மேய்ப்பர் இழந்துபோன நம்மைத் தேடவும், இரட்சிக்கவுமே வந்தார். அவருடைய பெரிதான கிருபையினால் நாம் அவருடைய மேய்ச்சலின் ஆடுகளாய் அவரது மந்தையில் இருக்கிறோம்.

நமக்கு அந்த மேய்ப்பனின் பாதுகாப்புத் தேவை. அவரது ஆடுகளாகிய நாம் நம்மை நாமே பலமுள்ளவர்களாய்க் காட்டிக் கொள்வதின்மூலம் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரியும் நம் எதிராளியானவனை வெல்ல முடியாது. தன்னுடைய மந்தையைக் காக்கும் யேம்ப்பன்தான் நமடது அடைக்கலம். அவரது கோலும், தடியும் நமக்குப் பாதுகாப்பை வாக்களிக்கிற கருவியாய் இருக்கின்றன.

நமது மேய்ப்பன் நம் தேவைகளைச் சந்திக்கிறார். அந்த நல்ல மேய்ப்பன் நமக்கு என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான் என்று (யோ.6:35) வாக்களித்துள்ளாரே! அவரை அறிந்து அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப்பின்பற்றிச் செல்வதே அவர் வழிநடத்துதலின் இரகசியம் எனலாம். நம்மீது கொண்டுள்ள அன்பினாலே அவர் நம்மை நலமான வழிகளிலே நடத்திச் செல்கிறார்.