நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள். சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோ..8:31-32)
இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கேள்விப்பட்ட சிறு பெண்ணொருத்தி தீபேத் நாட்டின் கிராமம் ஒன்றில் வாழ்ந்து வந்தாள். அவள் இயேசுவின்மேல் செலுத்தும் அன்பை அறிந்த புத்தமதகுரு, அவளைக் கண்டித்தார். அவளுக்குத் தண்டனையாக மூன்று நாட்கள் உணவேதும் தராமல் அவளை ஓர் அறையில் அடைத்துப் போட்டார். தண்டனை அச்சிறுமிக்குச் சிரமமாக இருந்தபோதிலும் கிறிஸ்துவை விசுவாசித்தது தவறு என ஒப்புக்கொள்ளவில்லை. அவருக்காகத் தான் அறையில் அடைபட்டிருப்பதைக் குறித்தும் வருந்தவில்லை. அங்கிருந்தவாறே எந்நேரமும் அவள் ஜெபித்துக்கொண்டிருந்தாள். அற்புதமான அமைதி அவளை நிரப்பியது. மூன்று நாட்களுக்குப் பிறகு புத்தமதகுரு அந்த அறைக்குள் சென்று பார்த்தார். ஒரே ஆச்சரியம் அவருக்கு! சிறுமியிடம், நீ கிறிஸ்துவைப் பற்றி அறிந்திருப்பது என்ன? என்று கேட்டார் அவர். அவரைப்பற்றி அதிகமாக எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம், நான் அவரை அறிந்திருக்கிறேன் என்றாள். அவர் அவளை அறிவற்ற முட்டாள் என்று கடிந்துகொண்டபோது, மீண்டும் அவள், நான் என் பெற்றோரை அறிந்திருப்பதைவிட அவரை நன்கறிவேன். அவர் எனக்குள்ளேயே வாழ்கிறார். உலகத்தால் கொடுக்கவோ, பறிக்கவோ முடியாத ஜீவனை இயேசு தருகிறார் என்றாள். இதைக் கேட்ட புத்தமதகுரு அந்தப் பெண்ணை மேலும் 24 மணி நேரத்திற்கு உணவின்றி அடைத்து வைதத்தார். அதன் பின்பும் அவள் ஜெபித்துக்கொண்டும், பாடிக்கொண்டும் இருந்தாள். அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. உடல் களைப்புறவில்லை. மேலும் மூன்று நாட்கள் அந்த அறையிலேயே அடைக்கப்பட்டும் அச் சிறுமியின் உள்ளத்தில் அமைதியும், ஆனந்தமும் குடிகொண்டிருந்தது. அதைக் கண்ட புத்தமதகுரு நெகிழ்வுற்று, நீயே என் குரு என்று அறிக்கையிட்டார். இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வது வயதையோ, கல்வியையோ பொறுத்த செயலல்ல.