மத்.28:1-10
எழுந்தார் இறைவன், ஜெயமே, ஜெயமெனவே: வாரத்தின் முதல்நாள் கல்லறைக்கு வந்த பெண்கள் கண்ட காட்சி அவர்களை நடுங்கச் செய்தது. காவலரும் அஞ்சி விழுந்தனர். ஆனால், ஆண்டவர் உடலுக்கு நறுமணப் பொருட்களிட வந்த பெண்களின் அச்சம் விரைவில் ஆனந்தமாக மாறிற்று. அவர் இங்கே இல்லை, உயிர்த்தெழுந்தார், என்ற மாபெரும் மகிழ்வூட்டும் நற்செய்தி பெற்றனர் இப்பெண்டிர். இறைவன். கல்லறை கடவுளைக் கட்டி வைக்க இயலவில்லை. இறைவனின் திருவுளத்திற்கு பிறழாது அடிபணிந்த பங்கமற்ற பரமகுமாரன் சாவின் கட்டை முறித்தார். பாவம், பிசாசு, பாதாளம், அனைத்தும் சாவாமை பெற்ற இறைவனின் இறப்பால் வெற்றி கொள்ளப்பட்டன. கீழ்ப்படிதல் வென்றது, சாவு முறியடிக்கப்பட்டது. இப்பெண்கள் பிறருக்கு அறிவிக்க விரைகையில் இயேசுவே அவர்களுக்கு எதிர்ப்படுகிறார். அடியோர் ஆண்டவரின் அடிகளைத் தழுவிப் பணிந்தனர். அவர்கள் கலிலேயாவுக்குப் போகப் பணிக்கப்படுகின்றனர். மத்தேயு கலிலேயாவின் கட்சியை மட்டுமே கூறுகிறார் (4:15,16).