ஜுன் 10
நான் கர்த்தர், நான் மாறாதவர் (மல்.3:6)
தேவனுடைய மாறாத தன்மை அவருடைய தனிப்பெரும் பண்பாக இருக்கிறது. ஆகவே அவர் என்றும் மாறாதவர் என்றழைக்கப்படுகிறார். அவருடைய அடிப்படைக்கூறுகளில் மாற்றம் ஏற்படுவதில்லை. அவருக்கு மட்டுமே உரிய பண்புகளில் மாற்றம் விளைவதில்லை. எந்தெந்த விதிகளின் அடிப்படையில் செயல்படுகிறாரோ அதிலிந்து அவர் மாறுவதில்லை.
வானங்களும் பூமியும், முடிவில் மாறிப்போகக்கூடியவை, அத்தன்மையை தேவனுடைய மாறாத தன்மையிலிருந்து சங்கீதப் பாடலாசிரியன் வேறுபடுத்திக் காட்டுகிறான்: “அவை மாறிப்போம். நீரோ மாறாதவராயிருக்கிறீர்” (சங்.102:2-627). “சோதிகளின் பிதாவினிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை” என்று யாக்கோபு வவரிக்கிறார் (யாக்.1:17).
“பொய்சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல. மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல (எண்.23:19). “இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை. தாம் சொன்னதைப்பற்றி மஸ்தாபப்படுகிறதும் இல்லை” (1.சாமு.15:29). இவ்வசனங்கள் அவருடைய மனம்மாறாத தன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன.
அவ்வாறாயின் தேவன் மனஸ்தாபப்பட்டார் என்று சொல்லுகிற வசனங்களைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? “தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்?” (ஆதி.6:6). “இஸ்ரவேலின்மேல் சவுலை இராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்” (1.சாமு.15:35). யாத்திராகமம் 32:14, யோனா 3:10 ஆகிய வசனங்களைக் காண்க.
இங்கு கருத்து வேறுபாடு ஏதுமில்லை. இந்த இரண்டு விதிகளின் அடிப்படையில் தேவன் எப்பொழுதும் செயல்புரிகிறார். கீழ்ப்படிதலுக்கு அவர் எப்போதும் பலனளிக்கிறார். கீழ்ப்படியாமையை அவர் தண்டிக்கிறார். கீழ்ப்படிதலிலிருந்து கீழ்ப்படியாமைக்கு மனிதன் இடம்பெயருகிறபோது, தேவன் தமது சொந்த பண்பிற்கு உண்மையுள்ளவராக இருக்கும்படி, (மாறாதவராயிருக்கும்படி) ஒரு விதியிலிருந்து வேறொரு விதிக்கு அவரும் இடம்பெயர்கிறார். இது நமக்கு மனஸ்தாபமாகத் தோன்றுகிறது. ஆகவே, மனிதத் தோற்றத்திற்கேற்ற மொழியில் இதை வேதம் விளக்குகிறது. ஆனால் அவர் தமக்காக வருந்துகிறார் என்றோ, மாறக்கூடிய தன்மையுடையவர்கள் என்றோ இது பொருளாகாது.
தேவன் எப்பொழுதும் மாறாதவராயிருக்கிறார். அது அவருடைய பெயர்களில் ஒன்றாகும். “நீர் மாறாதவர், பூமியின் இராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்” (ஏசா.37:16). டார்பி மொழிப்பெயர்ப்பில் 2. சாமுவேல் 7:28, ஏசாயா 41:4 ஆகிய வசனங்களிலும் இச்சொல்லைக் காணலாம்.
தேவனுடைய மாறாத தன்மை, எக்காலத்திலும் அவருடைய பரிசுத்தவான்களுக்கு ஆறுதலாயிருக்கிறது. அவர்களுடைய பாடலின் கருப்பொருளாக இது விளங்குகிறது. “என்னைச் சூழ நோக்குங்கால், மாற்றமும் அழிவுமே இருக்கின்றன. ஆனால் நீரோ மாற்றமில்லாதவர். நீர் என்னில் நிலைத்திருக்கிறீர்” என கென்றி லைட் என்பார் பாடியுள்ள பாடல் நமக்குப் பேருவகையைத் தருகிறது.
இதுவே நாம் பின்பற்ற வேண்டிய பண்பாகும். நாம் நிலையானவர்களாக, உறுதிபடைத்தவர்களாக, திடப்பற்றுள்ளோராக இருக்கவேண்டும். நாம் ஊசலாடுகிறவர்களாக, நிச்சயமற்றவர்களாக, எளிதில் மாறக்கூடியவர்களாக இருப்போமாயின் நமது திருத்தந்தையை இவ்வுலகிற்குத் தவறாக எடுத்துக்காட்டுகிறவர்களாயிருப்போம்.
“ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள்படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகிறவர்களாயும் இருப்பீர்களாக”.