மே 25
அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து. (மத்.18:15)
உன்னைப் புண்படுத்தும் வகையில் ஒருவர் ஏதாவது சொல்லியிருந்தாலோ, செய்திருந்தாலோ அவரிம் சென்று அவருடைய குற்றத்தை நீங்கள் கூறவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. அது மிகவும் சிரமமானது, ஆகவே நாம் அவ்வாறு செய்ய விரும்புகிறதில்லை.
ஆகவே அதைக்குறித்து ஆழ்ந்த சிந்திக்கத் தொடங்குவீர்கள். அவர்கள் என்ன செய்தார்கள். அது எவ்வளவு தவறானது என்று மீண்டும் மீண்டும் சிந்திக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய அலுவலைச் செய்துகொண்டிருக்கும்போது என்னென்ன நடந்தது என்பதெல்லாம் உங்கள் நினைவிற்கு வருகிறது. உங்களுடைய வயிற்றில் அமிலம் சுரக்கிறது. உறங்கும்போதும் அந்த நிகழ்ச்சி உயிர்கொண்டு எழுகிறது. கொதிக்கும் தொட்டியில் அழுத்தம் அதிகரிக்கிறது. நீங்கள் அந்த மனிதனிடம் சென்று அவருடைய குற்றத்தைச் சொல்லுங்கள் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அதை உங்களால் செய்யமுடிகிறதில்லை.
உங்களுடைய பெயர் அறிவிக்கப்படாமல் அந்தச் செய்தி அவரிடம் சென்றடைய வேண்டுமென்று நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். செய்த தவறுக்கு அவர் மனம் வருந்தத்தக்கதாக ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், அவ்வாறு எதுவும் நடப்பதில்லை. நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவீர்கள். ஆனாலும் நேருக்கு நேராகச் சந்திக்கிறதைப் பற்றிய நினைவு உங்களுக்கு அச்சத்தை உண்டுபண்ணுகிறது.
இவ்வாறு நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிற காலத்தில் அந்நிகழ்ச்சி அவருக்கு ஊறுவிளைவிக்கிறதைக் காட்டிலும் உங்களுக்கு அதிகமான ஊறுவிளைவித்துவிடுகிறது. உங்களுடைய முகம் வாடலாக இருப்பதைக் காண்போர் ஏதோ ஒன்று உங்களை வருத்துகிறது என்பதை அறிந்துகொள்வார்கள். அவர்கள் உங்களோடு உரையாடும் வேளையில் உங்களுடைய உள்ளம் வேறுறொரு உலகத்தில் இருக்கும். நீங்கள் வேறொரு சிந்தனையில் ஆழ்ந்திருப்பதால் உங்களுடைய வேலை கெடுகிறது. பொதுவாகச் சொல்லப்போனால், இந்த இடையூறுகளினால் உங்கள் வேலையனைத்தும் பயனற்றுப்போய்விடுகின்றன. வேதம் உங்களிடம் தொடர்ந்து சொல்லுகிறது. “நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து.” உங்களுடைய மனோதிடத்தின் வலிமையால், இதுவரை அதைக்குறித்து யாரிடமும் பேசவில்லை. முடிவில் உங்களால் தாங்கமுடியாமல் ஜெபத்திற்காகவும், ஐக்கியத்திற்காகவும் நடந்த நிகழ்ச்சியைப்பற்றி ஒருவரிடம் கூறுகிறீர்கள். நீங்கள் எதிர்பாராவண்ணம், உங்களிடம் பரிவோடு பேசுவதற்குப் பதிலாக, “உங்களுக்கு எதிராகக் குற்றம் இழைத்தவரிடம் சென்று நேரடியாக இதைக்குறித்து ஏன் பேசக்கூடாது?” என்று அவர் கூறுவார்.
நீங்கள் நேரடியாக அவரைச் சந்திக்க ஆயத்தமாகிவிட்டீர்கள். நீங்கள் என்னபேசவேண்டுமென்று பலமுறை நினைத்துப் பின்னர் திருமறைக்குக் கீழ்ப்படிந்து அவரிடம் சென்று அதைக் கூறுகிறீர்கள். அதைக்கேட்டு அவர் வியப்படைகிறார், மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறார். உங்களுடைய சந்திப்பு ஜெபத்தோடு முடிவடைகிறது.
நீங்கள் அங்கிருந்து வெளியே செல்கிறபோது உங்களுடைய தோளிலிருந்து பெரிய பாரம் இறக்கப்பட்டதாக உணர்க்கிறீர்கள். வயிற்று எரிச்சல் நின்றுபோகிறது. உங்களுடைய சரீர இயக்கம் இயற்கையான நிலைக்குத் திரும்புகிறது. உடனடியாக வேதத்திற்குக் கீழ்ப்படியவில்லையே என்ற எண்ணமே உங்களைக் குறைகூறும்.