மே 24
வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம் (நீதி 13:11)
நீங்கள் ஒருகோடி ரூபாய் வென்ற அதிர்ஷ்டசாலி. சூதாட்டத்தில் கலந்துகொள்ள இதைப்போன்ற விளம்பர அழைப்புகள் நம்மை நோக்கி அம்புகள் போல எய்யப்பட்ட வண்ணமாயிருக்கின்றன. அங்காடிகளுக்குச் செல்லும் குடும்பத் தலைவிகளைக் கவர்ந்திழுக்கும் பரிசுத்திட்டங்கள் பல புது வடிவத்தில் வருகின்றன. பலகோடி ரூபாய்கள் பரிசாக அறிவிக்கப்பட்டிருக்கும் இத்தகைய விளம்பரங்களைக் கண்டு பணம் அனுப்ப சராசரி மனிதர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சில பத்திரிக்கைகளுக்குச் சந்தா அனுப்புவதற்குப் பரிசுத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வெற்றி பெறுவது உறுதி என்பதுபோல சில திட்டங்கள் காணப்படும். சில செயல்கள் மிகத் தெளிவானமுறையில் சூதாட்டங்களாகக் காணப்படும். சுழற்சக்கரம், குதிரைப் பந்தயம், நாய் பந்தயம், அதிர்ஷ்ட எண் விளையாட்டு ஆகியவை அந்த ரகத்தைச் சார்ந்தவை.
இவையாவற்றையும் குறித்துத் திருமறை கூறுவது யாது? இத்தகைய எதுவும் நல்லது அல்ல என்பதே அதன் விடையாகும்.
வஞ்சனையால் தேடினபொருள் குறைந்துபோம். கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான் என்று திருமறை விளம்புகிறது (நீதி 13:11). வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகினான். வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான் என்றும் அது கூறுகிறது (நீதி 28:22). அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சு பொரிக்காமற் போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான். அவன் தன் பாதிவயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான் என்பது திருமறைவாக்காகும் (எரே 17:11).
நீங்கள் சூதாடக்கூடாது என்று பத்துக்கட்டளைகள் வெளிப்படையாகக் கூறப்படவில்லையெனினும், பத்தாவது கற்பனை, நீங்கள் இச்சியாதிருப்பீர்களாக என்று சொல்லுகிறது (யாத் 20:17). சூதாட்டம், இச்சையின் ஒரு வகையல்லாமல் வேறென்ன? நமது இரட்சகர் சிலுவையில் அறையப்பட்டிருந்த வேளையில் அவருடைய தையலில்லாத ஆடைக்காக உரோம நாட்டுப் படைவீரர்கள் சீட்டுப்போட்ட நிகழ்ச்சி, விசுவாசிகளுக்குச் சூதாட்டம் பொல்லாங்கானது என்பதை எப்பொழுதும் நினைவுகூரச்செய்யும்.
சூதாட்டத்திற்கு அடிமைப்பட்டவர்கள் தங்களுடைய குடும்பங்களுக்கு கொண்டுவரும் வறுமையையும் துக்கத்தையும் எண்ணிப்பாருங்கள். இழந்த பணத்தை ஈடுகட்டச் செய்யப்படும் குற்றங்கள் ஏராளம். பெரும்பாலும் சூதாட்டம் துன்மார்க்கரின் நட்பைக் கொண்டுவருகிறது. இவையாவும், கிறிஸ்தவ வாழ்வில் சூதாட்டத்திற்கு இடமேயில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. உண்ண உணவும், உடுக்க உடையும் போதுமென்றிருப்பதே விசுவாசிக்கு அழகு என்று தீமோத்தேயுவிற்கு நினைவ+ட்டியவின் பவுல், செல்வந்தனாக வேண்டுமென்ற விரும்பத்தை எச்சரித்து, பண ஆசை எல்லாத் தீமைக்கும் பேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, வேதனைகளாலே தங்களை உருவக்குத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று எழுதியுள்ளார் (1தீமோ 6:9)