மே 22
நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள். எண்ணப்படுவதற்க அவன் எம்மாத்திரம். (ஏசா.2:22)
நமது வாழ்க்கையில் தேவனுக்கு அளிக்கவேண்டிய இடத்தை நாம் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ கொடுப்போமாயின் பெருத்த ஏமாற்றத்தை அடைவது உறுதி. மனிதர்களில் சிலர் என்னதான் சிறந்தவர்களாக இருப்பினும் மனிதர்களாகத்தான் இருக்கமுடியும் என்பதை விரைவில் கற்றிடுவோம். அவர்கள் மிகச் சிறந்த குணநலன்களைக் கொண்டிருப்பினும், இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்களை உடையவர்களாகவே இருப்பர். ஒருவேளை இதனை வெறுக்கும் மனப்பான்மை என்று நினைக்கலாம். எனினும் அவ்வாறு அல்ல. உள்ளதை உள்ளவாறு கூறுவதாகவே இது இருக்கிறது.
எருசலேம் நகரத்தின்மீது எதிரிகள் போர்தொடுத்தபோது, அச்சமுற்ற மக்கள் விடுதலைக்காக எகிப்தை நோக்கிப்பார்த்தனர். தவறான இடத்தில் அவர்கள் நம்பிக்கை வைத்ததை, “இதோ, நெரிந்த நாணல் கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய். அதின் மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டுருவிப்போம். எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவரும் அப்படியே இருப்பான்” என்று கூறி ஏசாயா கண்டித்துணர்த்தினான் (ஏசா.36:6). சிலகாலம் கழித்து, அதேபோன்ற சூழ்நிலையில், “மனிதர்கள்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரைவிட்டு விலகுகிற இருதயமுள்ள மனிதன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என எரேமியா கூறினான்.
இந்தப் பொருள் பற்றிய தெளிவான கருத்தைச் சங்கீதப்பாடகன், “மனிதனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் நம்பிக்கையாயிருப்பதே நலம்” என்றும் (சங்.118:8-9), “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான். அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்” என்று எழுதியுள்ளான் (சங்.146:3-4).
சில காரியங்களில் நாம் ஒருவரையொருவர் நம்பவேண்டியவர்களாயிருக்கிறோம் என்பதை அறிந்து செயல்ப்படவேண்டும். ஓரளவு நம்பிக்கையும், மதிப்பும் இல்லாத திருமண ஒப்பந்தம் எப்படிப்பட்டதாயிருக்கும்? தொழிற்துறையில் காசோலையானது பணம் என்றே கருதப்படுகிறது. நோயைச் சரியாகக் கண்டறிந்து மருந்துகளைத் தருவார் என்றே மருத்துவரை நம்புகிறோம். கடைகளில் வாங்கும் உணவுப்பொருட்கள் அடங்கிய பொட்டலங்களில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகளை நம்புகிறோம். எந்தச் சமுதாயத்திலும் பிறர்மனிதர்கள்மீது கொஞ்சமாவது நம்பிக்கையில்லாமல் வாழ்வது முடியாத ஒன்றாகும்.
ஆனால், தேவன் செய்யவேண்டியதை மனிதன் செய்வான் என்று நம்பி, கர்த்தருக்குரிய சிங்காசனத்திலிருந்து அவரை அகற்றிவிட்டு, அங்கே அந்த மனிதனை வைப்பது ஆபத்தை விளைவிக்கும். கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய நேசத்தை வேறோருவர்மீது செலுத்தினாலோ, அவர்மீது வைத்திருக்கவேண்டிய நம்பிக்கையை வேறொருவர்மீது வைத்தாலோ, அவருக்குக் கொடுக்கவேண்டிய உரிமையை வேறொருவருக்குக் கொடுத்தாலோ அந்த மனிதனால் நாம் ஏமாற்றப்படுவது நிச்சயம். அது கசப்பு நிறைந்த அனுபவமாக இருக்கும். நம்முடைய நம்பிக்கைக்கு மனிதன் தகுதிபடைத்தவன் அல்லன் என்பதை நாம் காலம் கடந்தே உணர்கிறவர்களாயிருக்கிறோம்.