மார்ச் 25
ஆதியிலே தேவன்…. (ஆதி.1:1)
திருமறையின் முதல் வசனத்தின் முதல் இரண்டு சொற்களையம் அவ்வசனத்திலிருந்து பிரித்துப் பார்த்தால், அதுவே அனைத்த ஜீவன்களின் குறிக்கோளை எடுத்தியம்பும் சொற்றொடர் என்பது விளங்கம். அதாவது, “தேவனுக்கே முதலிடம்” என்பதே அச்சொற்றொடரின் பொருளாகும்.
முதலாவது கற்பனையில் இக்கருத்து பொதிந்திருப்பதை நாம் காணலாம். “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்”. உண்மையும் நீதியும் நிறைந்த தேவனுடைய இடத்தை வேறொருவரும் அல்லது வேறெதுவும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
எலியாவையும் ஏழைவிதவையையும் குறித்த கதையில் இப்பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த விதவையும் அவளுடைய மகனும் கடைசியாக ஒருவேளை உண்பதற்கான மாவும் எண்ணெயுமே அவளிடம் இருந்தன (1.இராஜா.17:12). அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் எலியா அப்பெண்ணிடம், “முதலில் ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா” என்று கூறினான். இச்சொற்கள் தன்னலம் கொண்டதாகத் தோன்றிடினம், உண்மை அதுவன்று. தேவனுடைய பிரதிநிதியாக அங்கு எலியா காணப்படுகிறான். “தேவனுக்கு முதலிடத்தைத் தா. உன் வாழ்க்கைக்குத் தேவையான ஏதொன்றும் குறையாது” என்றே அவன் கூறினான்.
சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மலையின்மீது அமர்ந்தவராக இதனைக் கற்றுக்கொடுத்தார். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையம் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” (மத்.6:33). தேவனுடைய ராஜ்யமும் அவருடைய நீதியுமே ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்வின் இன்றியமையாத முதலிடமாகத் திகழ்கின்றன.
தமக்கே முதலிடம் தரவேண்டும் என்று நமது இரட்சகர் மீண்டும் லூக்கா 14:26ல் வலியுறுத்தினார், “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.” இங்கும் கிறிஸ்துவுக்கே முதலிடம் கொடுக்கவேண்டும் என்பதே பொருளாகும்.
ஆனால், எவ்வாறு தேவனுக்கு முதலிடத்தைத் தருவது? நாம் கவனிக்கவேண்டிய குடும்பம் நமக்கிருக்கிறதே. இவ்வுலகத்திற்குரிய வேலையை நாம் செய்யவேண்டியவர்களாயிருக்கிறோம். நமது நேரத்தையும் நமது திறமைகளையும் செலவிடவேண்டும் என்று நம்மை வருத்தும் பற்பல அலுவல்கள் நம் கண்முன் வந்து நிற்கின்றன. தேவனிடத்தில் நாம் காட்டும் அன்போடு ஒப்பிட்டுப்பார்க்கையில் பிறரிடம் காட்டும் அன்பு வெறுப்பே என்று கருதப்படும் அளவிற்கு நாம் தேவனிடம் அன்புசெலுத்துவோமாயின் அதுவே அவருக்கு நாம் தரும் முதலிடமாகும்.
நாம் பெற்றுள்ள அனைத்துப் பொருட்செல்வமும் அவரால் நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்டவை என்று கருதி, அவருடைய இராஜ்யத்திற்கென்று செலவிடவேண்டும். நல்லவை என்று கருதப்படுபவை, சிறந்ததற்கு முன்னால் தகுதியற்றவை என்பதை நினைவிற்கொண்டவர்களாக, நிலைபேறான வாழ்வோடு சம்பந்தப்பட்டவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பதால் தேவனுக்கே முதலிடம் கொடுப்பவர்களாயிருப்போம்.
தேவனோடு சரியான உறவுகொண்டிருப்பதில், மனிதனுடைய மிகச் சிறந்தவிருப்பங்கள் அடங்கியிருக்கின்றன. தேவனுக்கு முதலிடத்தை கொடுப்பதே, அவரோடு நாம் கொண்டிருக்கும் சரியான உறவாகும். தேவனுக்கு முதலிடத்தை ஒரு மனிதன் கொடுத்தாலும், அவனுடைய வாழ்வில் அவன் நிறைவைப் பெறுவான். ஆனால் தேவனுக்கு அவன் இரண்டாவது இடத்தைக் கொடுப்பானாகில் அவனுடைய வாழ்வில் இடர்ப்பாடுகளைத் தவிர வேறொன்றுமே இராது. பரிதாபமான நிலையே எஞ்சிநிற்கும்.