மார்ச் 24
கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது (எபேசி.4:7).
ஏதொரு செயலைச் செய்யும்படிக் கர்த்தர் நம்மைப் பணிக்கும்போது, அதனைச் செயலாற்றத் தேவையான வலிமையை அவர் நமக்குத் தருவார் என்னும் உண்மையை நாம் எப்பொழுதும் நினைவுகூர்கிறவர்களாக இருக்கவேண்டும். நிறைவேற்ற முடியாதவைகள் என்னும் நிலையில் அக்கட்டளைகள் இருப்பினும், அவற்றைச் செய்துமுடிக்க வேண்டிய திறத்தையும் அக்கட்டளைகளோடு அவர் சேர்த்துத் தருகிறார்.
“இந்தப் பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்” என்று எத்திரோ மோசேயிடம் கூறினான் (யாத்.18:23). “ஒரு வேலையைச் செய்யும்பொருட்டு தேவன் ஒருவனை நியமிக்கும்போது, அதனை நிறைவேற்றத்தக்கவனாக அவனை ஆக்குவதும் அவர் பொறுப்பாகும்” என்று து.ழு.சேன்டர்ஸ் உரைத்துள்ளார்.
வாதநோயினால் பாதிக்கப்பட்ட மனிதர்களில் குறைந்தது இருவரை இயேசு கிறிஸ்து தமது ஊழிய நாட்களிலே சந்தித்தார் (மத்.9:6, யோ.5:8). இரண்டு முறையும் அவர்களை எழச்சொன்ன இயேசு கிறிஸ்து தங்களுடைய படுக்கையை எடுத்துச் செல்லும்படியும் கட்டளையிட்டார். அக்கட்டளைக்குக் கீழ்ப்படிய இணங்கியபோது, அவ்விருவருடைய வலிமையற்ற கை கால்களுக்குள் வல்லமை பாய்ந்தது.
நீரின்மேல் நடக்கும்படித் தன்னைக் கர்த்தர் அழைப்பாராயின் தன்னால் நீரின்மேல் நடக்க இயலும் என்பதை பேதுரு உணர்ந்தான். இயேசு கிறிஸ்து “வா” என்று அழைத்தவுடன் பேதுரு படகை விட்டிறங்கி நீரின்மேல் நடந்தான்.
சூம்பி தொய்ந்துபோன கரத்தை நீட்டுவது முடியாததாகும். ஆனால் தொய்ந்த கரத்தை உடைய ஒருவனிடம் கையை நீட்டும்படிக் கர்த்தர் கூறியவுடன் அவன் நீட்டினான். நலம் பெற்றான்.
ஒருசில அப்பங்களையும், மீன்களையும் கொண்டு 5000 பேருக்கு உணவளிக்க முடியும் என்ற கேள்விக்கு இடமேயில்லை. “அவர்கள் உண்ணுவதற்குக் கொடுங்கள்” என்று இயேசு நாதர் சீடர்களிடம் உரைத்தபோது இயலாமை மறைந்துபோயிற்று.
“லாசருவே வெளியே வா” என்று இயேசுகிறிஸ்து அழைத்தபோது, அக்கட்டளையோடு அவன் வெளியே வருவதற்குரிய வல்லமையும் புறப்பட்டுச் சென்றது. நான்கு நாட்கள் கல்லறையில் உறங்கியவன் எழுந்து வந்தான்.
இந்த உண்மைகளை நமக்குரியாதாக்கிக் கொள்ளவேண்டும். ஒருசெயலை நாம் செய்யும்படி தேவன் கூறும்போதும், அதற்குரிய பலத்தை அவர் தருவார் என்று நம்பாமல், அவரை எதிர்த்து வாதிடக்கூடாது. “தேவனுடைய கிருபையற்ற இடத்திற்கு அவர் உங்களை வழிநடத்திச் செல்லமாட்டார்.”
ஒரு வேலையைச் செய்ய தேவன் கட்டளையிடுவாராகில், அதைச் செய்வதற்கான பணத்தையம் அவர் தருகிறார். அவருடைய வழிநடத்துதலைக் குறித்து உறுதியுடையோர் பணத்தேவையைக் குறித்துக் கவலைப்படக்கூடாது. அவரே தேவைகளை நிறைவு செய்கிறவர்.
செங்கடலைப் பிளந்தவர், யோர்தனை வற்றிடச் செய்தவர். அவரே இன்றைக்கு நமது தேவனாக உள்ளார். அவர்தம் மக்கள் அவருடைய சித்தத்திற்குக் கீழ்படியும் வேளையில், எல்லா இயலாமையையும் நீக்கி விடும் கிரியையை அவர் இன்றும் செய்கிறவராகத் திகழ்கிறார். நம் தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தை நிறைவேற்ற கிருபை நல்கும் தேவன் ஆவார்!.