மார்ச் 23
நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தமாட்டேன் (2.சாமு.24:24).
கொள்ளைநோயைக் கர்த்தர் நிறுத்திய இடத்தில் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தும்படியாக தாவீது கட்டளையைப் பெற்றபோது அதற்காகப் போரடிக்கிற களத்தையும், காளைகளையும், விறகுக்கு உருளைகளையும் அர்வனா தருவதற்கு முன்வந்தான். என்றாலும் தாவீது அவற்றை “விலைக்கு வாங்குவேனேயொழிய இலவசமாகப் பெறமாட்டேன்” என்று வற்புறுத்திக் கூறினான். தான் எந்த விலையையும் கொடுக்காமல் கர்த்தருக்கு ஒன்றைச் செலுத்த தாவீதுக்கு மனதில்லை.
ஒருவர் கிறிஸ்தவன் ஆவதற்கு அவனுக்கு எந்தச் செலவுமில்லை என்பதை நாம் அறிவோம். ஆயின் மெய்யான சீடனாக வாழ்வதற்குப் பெரும் விலையைக் கொடுக்க வேண்டும் என்பதை நாம் அறியக்கடவோம். “விலை ஏதும் செலுத்தாத சமயச் சார்பு பயனற்றது”.
பெரும்பாலும் கர்த்தருக்கென்று ஒப்புவிப்பதற்கு முன்னர் நமது வசதிகள், பணச்செலவு, இழக்கவேண்டிய இன்பங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு முடிவெடுக்கிறோம். களைப்புற்று இருப்பின் ஜெபக்கூட்டத்திற்குச் செல்வதில்லை. தலைவலியென்றால் திருமறையைக் கற்கச் செல்வதில்லை. நமது உல்லாசப் பயணம் தடைபடாததென்றால் சபைகூட்டத்திற்குச் செல்கிறோம்.
வெளியரங்கமாக ஜெபத்தை ஏறெடுப்பதற்கும், சான்று பகர்வதற்கும், நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கும் துணிச்சலின்றி அமைதியைக் காக்கிறோம். அட்டையும், பூச்சிகளும் தாக்குமென்று கருதி, இயற்கைச் சீற்றதினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யச் செல்கிறதில்லை. பாம்புகளும், சிலந்திகளும் இருக்குமே என்ற எண்ணம் ஊழியத்தலத்திற்குச் செல்லவேண்டும் என்னும் நினைவிற்குக் கதவடைத்து விடுகிறது. கர்த்தருக்கென்று கொடுப்பது தியாகமாக இருப்பதில்லை, அது ஒரு சிப்பந்திக்கு அளிக்கும் அன்பளிப்புபோல இருக்கிறது. கொடுப்பதில் இழப்பு ஏற்படுகிறதில்லை. அந்த விதவை தனக்குரியதெல்லாவற்றையும் கொடுத்தாள். குடிகாரர்கள் வாந்தியெடுத்துப் போட்டதால் தனது வீட்டிலுள்ள எல்லாப் போர்வைகளும் கறைபட்டுள்ளன எனக்கூறிய ஆத்தும தாகங்கொண்ட மனிதனைப்போல நாம் நடந்துகொள்ளாமல், என்ன செலவாகும், வசதிக்குறைவு ஏற்படுமே, வீடு அழுக்காகிவிடுமே என்று கணக்கிட்டு விருந்தோம்பல் செய்கிறோம். இன்பமான உறக்கம், மற்றவர்களது தேவைக்கு உதவி செய்வதைத் தடுக்கிறது. மற்றவர்களுக்குப் பொருளுதவியும், ஆவிக்குரிய உதவியும் செய்யச் சென்ற ஒரு மூப்பரைப்போல நாம் மனமுவந்து தகுதியாய் நடப்பதில்லை.
ஒவ்வொருமுறையும் கிறிஸ்து நம்மை அழைக்கும்போதும், “இப்பணியில் என்ன கிடைக்கும்”? என்று கேட்க ஏவப்படுகிறோம். “இந்தப் பணியைச் செய்ய நான் என்ன விலை செலுத்தவேண்டும்”? என்று கேட்கப் பழகிக் கொள்வோமாக. “ஆவிக்குரிய வாழ்க்கையில் நடப்பன நமக்குப் பொருளீட்டுவதற்கு மாறாக, விலைகொடுப்பதாயிருப்பின் அதுவே சிறந்தது” என்னும் கூற்று அருமையானதாகும்.
நாம் மீட்பினை அடையும் பொருட்டு, கர்த்தர் என்ன விலை கொடுத்தார் என்று சிந்திப்போமாக. தியாகம் செய்வதையும், விலைகொடுத்தலையும் நாம் தவிர்ப்போமாயின், அந்நிலை தேவனுக்காகத் திரும்பச் செலுத்துவதில் நாம் எவ்வளவு குறைவுடையோர் என்பதையே எடுத்தியம்புகிறது.