மார்ச் 22
உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான் (1.இராஜா.8:18)
யேகோவாவிற்கு எருசலேம் நகரில் ஆலயம் எழுப்பவேண்டும் என்பது தாவீது கொண்டிருந்த மிகப்பெரிய விருப்பங்களில் ஒன்றாகும். அவன் யுத்த மனிதனாக இருந்த காரணத்தினால், ஆலயம் கட்ட அனுமதிக்கப்படவில்லை என்று தேவன் சொல்லி அனுப்பியபோது, இந்தக் குறிப்பிடத்தக்க சொற்களையும் சேர்த்துச் சொல்லுகிறார். “உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான்”. கர்த்தருக்காச் சில செயல்களைச் செய்ய மனவிருப்பம் கொண்டு அவற்றைச் செய்ய இயலாது போயினும் அவற்றை நாம் செய்ததாகவே தேவன் கணக்கிட்டுக்கொள்கிறார் என்று இதிலிருந்து தெளிவாகத் தோன்றுகிறது.
ஆயினும் காலம் தாழ்துவதினாலும் செயலற்ற தன்மையினாலும் நாம் எண்ணிய செயலைச் செய்யாது விடுவது, இத்தகைய கருத்திற்குப் பொருந்தாது. இங்கே விருப்பம் மட்டும் போதுமானதல்ல. “நல்ல நோக்கங்களால் நரகத்தின் சாலைகள் தளம் போடப்பட்டுள்ளது” என்று அழகாய்ச் சொல்லியிருக்கிறார்களே !
கர்த்தருக்கு மனமகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கத்துடன் சில செயல்களை நமது கிறிஸ்தவ வாழ்வில் செய்ய விரும்பியும் நமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளினிமித்தம் அவற்றைச் செய்யத் தடைப்படுகிறோம். எடுத்துக்காட்டாக, திருமுழுக்கு எடுக்க விரும்பும் ஒரு இளம் விசுவாசி, நம்பிக்கையற்ற பெற்றோர்களின் நிமித்தமாக திருமுழுக்கு எடுக்காதிருக்கிறான். பெற்றோர்களிடதிருந்து உண்டாகிற எதிர்ப்பின் கடுமை குறைந்து, அமைதியான சூழ்நிலை உண்டாகும்வரை அவன் காத்திருக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் ஞானஸ்நானம் எடுக்காத நிலையை, ஞானஸ்நானம் எடுத்ததாகவே தேவன் கருதுவார் (இதனை நாம் போதனையாக எடுத்துக்கொள்ளக்கூடாது)
சபைக்கூட்டங்கள் அனைத்திலும் விசுவாசியாகிய ஒரு பெண் கலந்துகொள்ள விருப்பம் உடையவளாயிருந்தும், தனது குடிகாரக் கணவனுடைய வற்புறுத்தலின் நிமித்தம், தனது விருப்பத்தை நிறைவேற்ற இயலாதவளாயிருக்கிறாள். தன் கணவனுக்குக் கீழ்ப்படிவதையும் அவருடைய திருப்பெயரில் கூடுகின்ற விசுவாசப் பெருமக்களைக் காணவேண்டுமென்ற விருப்பத்தையும் நல்வினையாகவே தேவன் கருதுகிறார்.
பல ஆண்டுகளாக வேதாகமச் சிறப்புக்கூட்டங்களில் மனமகிழ்ச்சியோடு விருந்து பரிமாறி ஊழியம் செய்த வயது முதிர்ந்த பெண்மணி, தற்பொழுது உடல் நலக் குறைவின் நிமித்தம் அவ்விதம் செய்ய இயலாது கண்ணீர் வடிக்கிறாள். அவ்வித வேலைகளைச் செய்கிற மக்கள் பெறுகிற பரிசுப்பொருளை, அவளுடைய கண்ணீரின் நிமித்தம் தேவன் அவளுக்கும் தருவார்.
பணித்தலத்திற்கு செல்ல விருப்பங்கொண்டு தங்களை உண்மையோடு ஒப்புவித்தவர்கள், தங்களது சொந்த நகரத்தை விட்டுச் செல்ல இயலாதிருக்கிறார்கள். அப்படிப்பட்டோரின் வாஞ்சையை மற்றவர்கள் அறியாதிருப்பினும் தேவன் அறிவார். அவர்களது தூய வாஞ்சைக்குரிய பலனை கிறிஸ்துவின் நியாயாசனத்தினின்று பெறுவர்.
கொடுப்பதற்கு இந்த விதி பொருந்தும், தியாக உள்ளத்துடன் கர்த்தருடைய பணிக்குக் கொடுத்தவர்கள், இன்னும் கொடுக்க விருப்பம் கொள்கின்றனர். வரும் நாட்களில் தெய்வீகக் கணக்கு ஏட்டில் அவர்கள் அதிகமாகக் கொடுத்ததாக எழுதப்பட்டிருக்கும்.
நோயுற்றோர், உடலில் குறையுள்ளோர், வீட்டில் அடைபட்டுக் கிடப்போர். முதியோர் அனைவரும் முன் அணி நற்கீர்த்திக்குப் புறம்பானவர்கள் அல்லர். ஏனெனில், “அவருடைய இரக்கத்தினால், நமது சாதனைகளை மட்டும் கருத்தில் கொள்ளாது நமது கைகூடா நாட்டங்களையும் கருத்திற்கொண்டு, தேவன் நியாயம் செலுத்துகிறார்”.