மார்ச் 17
குதிரையைப் போலவும் கோவேறு கழுதையைப் போலவும் இருக்கவேண்டாம் (சங்.32:9)
தேவனுடைய வழிநடத்துதலை நாடுகின்ற வேளையில், நாம் வெளிப்படுத்துகிற இரண்டுவித தவறான மனப்பான்மையை இந்தக் குதிரையும், கோவேறு கழுதையும் சித்திரமாகக் காட்டுகின்றன என்றே கருதுகிறேன். குதிரை துரிதமாக முன்னேறிச் செல்ல விரும்புகிறது. கோவேறு கழுதை பின்தங்கி நிற்கிறது. குதிரை கட்டுக்கடங்காமல், துணிச்சலோடு, மூர்க்கத்தோடு செல்ல முனைகிறது. கோவேறு கழுதையோ பிடிவாதமுடையதும், எளிதில் கையாள இயலாததும், சோம்பலானதுமாக இருக்கிறது. இந்த இரண்டு மிருகங்களும் புரிந்துகொள்ளும் ஆற்றல் அற்றவையாக உள்ளன என்று சங்கீதப் பாடகன் கூறுகிறான். வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலோழிய எஜமானிடத்தில் அவை வரா.
தேவனுடைய வழிநடத்துதலுக்குச் செவிமடுத்தவர்களாக நாம் நடந்துகொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நமது சுய ஞானத்தினாலே பாய்ந்து செல்கிறவர்களாகவோ, அவருடைய சித்தத்தை வெளிப்படுத்தும்போது தயங்கிப் பின்தங்கி நிற்கிறவர்களாகவோ நாம் கணப்படலாகாது.
அனுபவத்தின் அடிப்படையில் இதற்குத் தேவையான சில விதிமுறைகள் உள்ளன.
இரண்டு அல்லது மூன்று சாட்சிகளால் தேவனுடைய வழிநடத்துதல் உறுதி செய்யப்படவேண்டுமென்று தேவனிடத்தில் வேண்டுங்கள். “இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே ஒவ்வொரு வார்த்தையும் நிலைவரப்பண்ணப்படவேண்டும்” என்று அவர் சொல்லியிருக்கிறார் (மத்.18:16). ஒரு வேதவசனம், மற்றொரு கிறிஸ்தவரின் ஆலோசனை, சூழ்நிலைகள் வியத்தகு முறையில் ஒருங்கிணைந்து வருவது ஆகியவை சாட்சிகள் என்று கருதப்படும். அவருடைய சித்தத்தை வெளிப்படுத்தும் இரண்டு அல்லது மூன்று வௌ;வேறான குறிப்புகளை நீங்கள் பெற்றால், ஐயமும் அவநம்பிக்கையும் கொள்ளத் தேவையில்லை.
தேவனுடைய வழிநடத்துதலை நீங்கள் நாடுகிறபோது, எவ்வித நடத்துதலையும் நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லையெனில், நீங்கள் இருக்கும் இடத்திலேயே தரித்து இருக்கவேண்டும் என்பதே அவருடைய வழிநடத்துதல் ஆகும். “செல்வதற்கு இருள் சூழ்ந்திருப்பின், இருப்பதற்கு வெளிச்சம் உண்டாயிருக்கிறது” என்பது இன்னும் உண்மையாக இருக்கிறது.
தெளிவான வழிநடத்துதல் கிடைக்கும்வரை காத்திருக்கவேண்டும். காத்திருக்காமல் செயல்ப்படுவது கீழ்ப்படியாமை என்றே கருதப்படும். மேகஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும் கிளம்பும் வரை இஸ்ரவேல் மக்கள் தங்களது பயணத்தைத் தொடங்கக்கூடாது. தாங்களாகச் செய்கின்ற எவ்வித செயலுக்கும் அறிவுபூர்வமாக எத்தகைய விளக்கமளித்தாலும், அதனைப் பொறுத்தருள முடியாது. மேகம் நகரும்போது அவர்கள் பயணத்தைத் தொடங்கவேண்டும். அதற்கு முன்னும் செல்லக்கூடாது. பின்தங்கியும் இருக்கக்கூடாது.
கடைசியாக, கிறிஸ்துவின் சமாதானம் உங்களுடைய இருதயங்களில் நடுவராகச் செயல்படட்டும். கொலோசேயர் 3:15ம் வசனத்தின் பொருள் இதுவே. உண்மையான தேவ நடத்துதினால் உகந்தவழியில் நாம் செல்லும் உள்ளுணர்வுகளினாலும், அறிவாற்றல்களினாலும் சமாதானத்தைப் பெறுவோம். தவறான வழியில் செல்லும்போது சமாதானத்தை இழந்துவிடுவோம்.
தெய்வீக சித்தத்தை அறியவும், உடனடியாக அதற்குக் கீழ்ப்படியவும் ஆவல் உடையவராக இருப்போமென்றால் தேவனால் ஒழுங்குபடுத்தப்பட, இந்த அறிவற்ற மிருகங்களைப் போன்று வாய்கட்டப்பட வேண்டியதில்லை. கடிவாளம் பூட்டப்பட வேண்டியதில்லை.