மார்ச் 16
உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் (லூக்.19:26).
இவ்வசனத்தின் தொடக்கத்தில் காணும் “உள்ளவன்” என்னும் சொல், மிகுதியான உடைமை உடையவனாக இருக்கிற ஒருவன் என்னும் பொருளில் குறிக்கப்படவில்லை. கற்றுக்கொண்டிருப்பவைகளுக்குக் கீழ்ப்படிகிற தன்மையையும், கொடுக்கப்பட்டவைகளைப் பயன்படுத்தும் தன்மையையும் இச்சொல் குறிக்கிறது. இதனை வேறுவகையாகவும் கூறலாம். நாம் எதை உடையவர்களாக இருக்கிறோமோ அதனைக் குறிக்காமல், நமது உடைமையைக்கொண்டு என்ன செய்கிறோம் என்பதையே இது குறிக்கிறது.
திருமறையைக் கற்றுக்கொள்வதில், மேலான கொள்கை ஒன்று நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை பெற்றுக்கொண்ட வெளிச்சத்தை உண்மையோடு பின்பற்றுவோமாயின், தேவன் இன்னும் மிகுதியான வெளிச்சத்தை நமக்குத் தருவார். கிறிஸ்தவ வாழ்வில் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பவன் யாரெனில், திருமறை கூறுகிறவைகளை உளமார்ந்து பின்பற்ற முடிவுசெய்பவனேயாவான். தன்னைச் சூழ இருக்கும் விசுவாசிகள் அங்ஙனம் வாழாவிடினும், அவன் திருமறைக்குக் கீழ்ப்படிகிறவனாயிருப்பான். அதாவது ஒருவனுடைய நுண்ணறிவுத்திறன் இன்றியமையாததன்று. அவனுடைய கீழ்ப்படிதலின் திறனே கணக்கிடப்படும். கீழ்ப்படிதலுள்ள இருதயத்திற்குத் திருமறை தனது பொக்கிஷத்தைத் திறந்தளிக்கிறது. ஓசியா தீர்க்கதரிசி இதனை அழகுற எடுத்தியம்பியுள்ளான்: “அப்பொழுது நாம் அறிவடைந்து கர்த்தரை அறியும்படித் தொடர்ந்து போவோம்.” எவ்வளவு அதிகமாக நாம் கற்றவைகளைப் பின்பற்றுகிறோமோ, அவ்வளவு அதிகமாக நமக்கு அவர் வெளிப்படுத்துவார். அறிவும், செயலும் இணையுங்கால், பெருக்கம் விளைகிறது. செயல்பாடு இல்லாத அறிவு, தேக்கநிலைக்கு வழி வகுக்கும்.
நமக்களிக்கப்பட்ட வரங்களுக்கும் திறமைகளுக்கும் இவ்விதி பொருந்தும். தங்களிடம் ஒப்புவிக்கப்பட்ட ராத்தலைக்கொண்டு பத்து ராத்தலையும், ஐந்து ராத்தலையும் சம்பாதித்தவர்கள் முறையே பத்து நகரத்திற்கும், ஐந்து நகரத்திற்கும் அதிகாரிகளாக்கப்பட்டனர் (லூக்.19:16-19).
நமது பொறுப்புகளைச் செவ்வனே வகிக்கும்போது, கூடுதலான நற்பேறுகளையும், பொறுப்புகளையும் பரிசாகப் பெறுவோம் என்பது தெளிவு. தன்னிடத்தில் ஒரு ராத்தலைப் பெற்றும், அதைக்கொண்டு ஒன்றும் செய்யாதவன் அதனை இழந்து போயினன். ஆகவே, தாங்கள் பெற்றுக்கொண்டவைகளைக் கர்த்தருக்கென்று பயன்படுத்தாதவர்கள், அவ்வாறு செயலாற்றும் திறமையை இழந்துபோவார்கள். “நீங்கள் பயன்படுத்தாத ஒன்றை இழந்துபோவீர்கள்”.
நமது சரீரத்தில் எந்த ஒரு அங்கத்தையும் நாம் பயன்படுத்தவில்லையெனில் அது பயனற்று வீணாகிப்போகும். தொடர்ந்து பயன்படுத்துவதால் அதன் இயல்பான வளர்ச்சியை அது பெறும். ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அதுபோலவே நடக்கிறது. துணிவற்ற தன்மை, சோம்பல் ஆகியவற்றால் நாம் பெற்றுள்ள வரத்தை அடக்கம் செய்வோமாயின், தேவன் நம்மை அறையில் அடைத்துப்போட்டு, நமது இடத்தில் வேறொருவரைப் பயன்படுத்துவார்.
ஆகவே வேதத்தின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதும், வாக்குறுதிகளை நாடுவதும், தேவன் நமக்குக் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்துவதும் மிகவும் இன்றியமையாதவையாகும்.