மார்ச் 14
ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனியுங்கள் (லூக்.8:18)
கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் என்ன கேட்கிறோம் என்பது மட்டுமன்றி எப்படிக் கேட்கிறோம் என்பதும் இன்றியமையாததாகும். திருமறை எழுத்துகளை நாம் அக்கறையின்றி கேட்கக்கூடியவர்களாக இருக்க இயலும். மாவல்லமையுள்ள தேவன் தமது வேதத்திலிருந்து நம்மோடு பேசுகிறார் என்பதைக் குறித்துக் கவலையற்றவர்களாக, மற்ற நூல்களைப் படிக்கிறதுபோல திருமறையையும் படிக்கிறவர்களாகக் காணப்படுகிறோம்.
குறைகாணும் எண்ணத்தோடு நாம் கேட்கிறவர்களாக இருக்கலாகாது. வேதத்தைக் காட்டிலும் மனிதனுடைய நுண்ணறிவிற்குச் சிறப்பைக் கொடுக்கிறோம். நாம் வேதத்தினால் நியாயம் தீர்க்கப்படுவதற்கு நம்மை ஒப்புவிப்பதற்குப் பதிலாக, நாம் வேதத்தை நியாயம் தீர்க்கிறோம்.
எதிர்த்து நிற்கும் மனப்பான்மையோடு நாம் கேட்கிறவர்களாக இருக்கலாகாது. சீஷத்துவத்தின் கண்டிப்பும் வலியுறுத்திச் சொல்லப்படும்போது அல்லது பெண்;கள் கீழ்ப்படிதல் உள்ளவர்களாகவும், அவர்கள் தங்களது தலையை முக்காடிட்டுக் கொள்கிறவர்களாகவும் இருக்கவேண்டும் என்று சொல்லப்படும்போது சீற்றம்கொண்டு கீழ்ப்படிவதற்கு மறுக்கிறோம்.
“ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதன்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான். அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்” என்று யாக்கோபு நிருபத்தில் கூறியிருப்பது போன்று, நாம் கேட்கிறதை மறந்துவிடுகிறவர்களாயிருக்கிறோம் (யாக். 1:23-24).
பெரும்பாலானவர்கள் உணர்வற்ற நிலையில் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள். இறைமொழியை எவ்வளவாகக் கேட்டும், இப்படிப்பட்டோர் இதைக் குறித்து எவ்வித உணர்வும் கொள்ளவதில்லை. தேவனுடைய செய்தியை இயந்திரம் போலக் கேட்கிறார்கள். இது வழக்கமான ஒன்றுதானே என்னும் எண்ணுத்துடன் கேட்கின்றனர். அவர்களுடைய செவிகள் மந்தமாகிப்போயுள்ளன. “இதுவரை நான் கேட்காத என்னத்தை நீங்கள் சொல்லப்போகிறீhகள்?” என்ற எண்ணம் உடையவர்களாயிருக்கிறோம்.
கீழ்ப்படியவேண்டும் என்ற எண்ணமற்று தேவனுடைய வார்த்தைகளை மிகுதியாக நாம் கேட்கிறவர்களாக இருப்போமென்றால், ஆய்வுத்திறன் அற்றுச் செவிடர்களாகிப் போவோம். நாம் கேட்க மறுத்தால், கேட்கும் திறனை இழந்துபோவோம். பணிவுடனும், கீழ்ப்படிதலோடும், உள்ளார்வத்துடனும் கேட்பதே மிகச் சிறந்த முறையாகும். வேறு எவரும்: நிறைவேற்றவில்லை என்று அறிந்தும், வேதம் என்ன கூறுகிறதோ அதன்படி செய்வேன் என்ற முடிவோடு நாம் அதை அணுகவேண்டும். புத்தியுள்ள மனிதன் கேட்கிறவனாக மட்டுமன்றிச் செயகிறவனாகவும் இருக்கிறான். தமது வசனத்துக்கு நடுங்குகிறவனையே தேவன் நோக்கிப் பார்க்கிறார் (ஏசா.66:2).
தேவனுடைய வசனத்தைக் கேட்டபோது தெசலோனிக்கேயர் அதை மனிதர் பேசும் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல் அது மெய்யாகவே தேவவசனம் என்று அறிந்து ஏற்றுக் கொண்டதினாலே பவுல் அவர்களைப் போற்றினார் (1.தெச.2:13). அதுபோன்றே நாமும் கவனத்துடன் கேட்கிறவர்களாயிருக்கவேண்டும்.